![AIADMK woman MLA who provided relief at Nilakkottai MLA's office!](http://image.nakkheeran.in/cdn/farfuture/cxTlwPWBy1QgrWXERc1ajqQd1ATXgV1ufH5uYV4kO8I/1601988317/sites/default/files/inline-images/dfadsads.jpg)
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை அ.தி.மு.க, எம்.எல்.ஏ தேன்மொழி சேகர் சமீபகாலமாக எந்த ஒரு நிகழ்வு என்றாலும் சட்ட மன்றத்தில் வைத்து நடத்தி வருகிறார்.
அதுபோல், தேன்மொழி சேகரின் கணவரும் நிலக்கோட்டை நகரச் செயலாளருமான சேகர், எம்.எல்.ஏ அலுவலகத்தை திறந்து, நிகழ்ச்சி நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார். எப்பொழுதும் கட்சிக்காரர்கள் சொல்லும் இடங்களுக்கு தேடிச்சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் தேன்மொழி சேகர், கடந்த வாரம் மாற்றுத்திறனாளிகள் 75 பேருக்கு அரிசி மற்றும் நிவாரணப் பொருட்களை சட்டமன்ற அலுவலகத்திற்கு வரவைத்து வழங்கினார்.
அதேபோல், இன்றும் 102 கிராமியக் கலைஞர்கள் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சிக்கு எம்.எல்.ஏவின் கணவர் சேகர் ஏற்பாடு செய்திருந்தார். இதற்காக கிராமியக் கலைஞர்கள் அனைவரும் எம்.எல்.ஏ அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். தேன்மொழி சேகர் கலந்து கொள்ளாத நிலையில், அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர்கள் யாகப்பன், நல்லதம்பி ஆகியோர்களை, சேகர் வரவழைத்தார். பிறகு, ஒன்றியச் செயலாளர்கள், சட்டமன்ற அலுவலகம் முன்பு, தலா 10 கிலோ அரிசி பைகளை கிராமியக் கலைஞர்களுக்கு வழங்கினர்.
அடிக்கடி சட்டமன்ற அலுவலகத்திற்கு அண்ணன் வருவதைப் பார்த்தால் அடுத்தமுறை அக்காவை நிறுத்தாமல் அண்ணனே நேரடியாக தேர்தலில் நிற்பார்போலத் தெரிகிறது. அண்ணனுக்கும் எம்.எல்.ஏ ஆசை இருக்காதா பின்னே என்று தொண்டர்கள் பேசிக்கொண்டார்கள்.