![8.50 kg of cannabis seized in train](http://image.nakkheeran.in/cdn/farfuture/9OziejdvPBoLRLGpGofTei9ETuPmM8SUydtvNIWpAK0/1646022453/sites/default/files/inline-images/th-1_2820.jpg)
சேலம் வழியாக கேரளா சென்ற பயணிகள் ரயிலில் கடத்தி வரப்பட்ட 8.50 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சேலம் வழியாக செல்லும் சில ரயில்களில் கஞ்சா கடத்தப்படுவதாக ரயில்வே காவல்துறைக்கும், ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், இருதரப்பு காவல்துறையினரும் சேலம் வழியாக கேரளா செல்லும் ரயில்களில் தீவிர சோதனை நடத்தினர். ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா நோக்கிச் சென்ற சிறப்பு ரயிலில் மொரப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஏறி சோதனை நடத்தினர்.
முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிகள், அவர்கள் கொண்டு வந்த உடைமைகளில் சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த ஒரு பெரிய பை இருந்தது. அந்தப் பையில் சோதனை செய்தபோது, அதில் 8.50 கிலோ கஞ்சா, பொட்டலம் பொட்டலமாக இருந்தது தெரியவந்தது. அதேநேரம், அந்த பையை கொண்டு வந்த பயணி யார் என்ற விவரம் தெரியவில்லை. இதையடுத்து கஞ்சா பொட்டலங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா பொட்டலங்கள், சேலம் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.