
திருச்சி மாவட்ட பைனான்சியர்ஸ் மற்றும் சிட்பண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் சரக்கு மற்றும் சேவை வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை சிட்பண்ட்ஸ் உரிமையாளர்கள் முன் வைத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும், சிட்பண்ட்ஸ் நடத்தக்கூடிய 2600 நிறுவனங்கள் இந்த சங்கத்தில் பதிவு செய்யப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது. அனைத்து நிறுவனங்களுமே மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வரும் நிலையில், திருச்சி மாவட்டத்தில் மட்டும் 100 சிட்ஃபண்ட்ஸ் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது மத்திய அரசு வாடிக்கையாளர்களிடமிருந்து சீட்டு பிடிப்பதன் மூலம் நிறுவனத்திற்கு கிடைக்கக்கூடிய 5 சதவீத கமிஷன் தொகைக்கு 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக ஜிஎஸ்டி வரியை உயர்த்தி உள்ளது.
வருகின்ற 18ஆம் தேதி முதல் இந்த ஜிஎஸ்டி வரி உயர்வானது அமலுக்கு வர உள்ளது. ஏற்கனவே அரசனது இந்நிறுவனங்களுக்கு ஒரு இலக்கு நிர்ணயித்து அதில் 28 லட்சம் ரூபாய் வரை சீட்டு பிடிக்கும் நிறுவனங்களுக்கு வரி எதுவும் செலுத்த தேவையில்லை என்றும், ரூ. 80 லட்சம் வரை பாதி வரியை நிர்ணயித்தும், அதற்கு மேல் முழுமையான வரி செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது 6 சதவீதத்தில் இருந்த வரி விதிப்பு 12 ஆகவும், 12ல் இருந்த வரி விதிப்பு 18 ஆகவும் உயர்ந்துள்ளது.
இந்த சிட் பண்டு நிறுவனங்கள் வங்கிகளைப் போல செயல்பட வேண்டுமென்றால் 100 கோடி ரூபாய் முதலீடு தேவை. ஆனால், அந்த அளவிற்கு முதலீடு செய்ய முடியாது. பெரும்பாலான நிறுவனங்கள் சுமார் மூன்று கோடிக்கும் அதிகமான சீட்டுகளை வாடிக்கையாளர்கள் இடமிருந்து பிடித்து அதன் மூலம் அரசுக்கு வருவாயை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் மட்டும் சிட் பண்ட் நிறுவனங்கள் மூலம் அரசுக்கு 2000 கோடி வருமானமாக கிடைக்கிறது. இந்த ஜிஎஸ்டி வரி உயர்வால் பெரும் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறுகின்றனர்.