![150-year-old house collapsed due to rain in Chidambaram](http://image.nakkheeran.in/cdn/farfuture/x4qnHyuhNfT8-vDBuivZGSwL_hGl1eF0HcpEFSPuYdU/1732708643/sites/default/files/inline-images/35_105.jpg)
சிதம்பரம் நகரத்திற்கு உட்பட்ட சின்ன செட்டி தெருவில் வசிக்கும் நரேஷ் ஜெயின் என்பவரின் வீடு கடந்த 150 ஆண்டுக் கால பழமை வாய்ந்தது. இந்த வீட்டில் யாரும் குடியிருக்கவில்லை. வீடு பூட்டிய நிலையில் உள்ளது. இந்த நிலையில் சிதம்பரம் பகுதியில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு பெய்த மழையால் கட்டிடம் முழுவதும் மழையால் சேதமடைந்து புதன்கிழமை கட்டிடத்தின் மேல் தளம் இடிந்து உள் வாங்கியது. உள்ளே யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் தளத்திலிருந்த ஜன்னல் உடைந்து பொதுமக்கள் நடமாடும் தெருவில் விழுந்தது. அப்போது நடமாட்டம் இல்லாததால் யாருக்கும் எந்த விபத்தும் ஏற்படவில்லை.
![150-year-old house collapsed due to rain in Chidambaram](http://image.nakkheeran.in/cdn/farfuture/mFtWD8luf233d9Ncs71LYx10F8wB5D1VRzhcMovSmC8/1732708666/sites/default/files/inline-images/37_74.jpg)
இதனை அறிந்த நகர மன்ற உறுப்பினர் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகர் சம்பவ இடத்திற்கு வந்து சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர் மல்லிகா மற்றும் பொறியாளர் சுரேஷ் உள்ளிட்டவர்களுக்கு தகவல் அளித்தனர். பின்னர் நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி மீதியுள்ள வீட்டின் பகுதிகள் இடிந்து விழுவதற்கு முன் வீட்டை இடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
![150-year-old house collapsed due to rain in Chidambaram](http://image.nakkheeran.in/cdn/farfuture/bZDbeuPTdj7GJ1OcFSM6XFt3ltr3_NWsc46mE77qrFA/1732708684/sites/default/files/inline-images/36_73.jpg)
ஜன்னல் இடிந்து விழுந்த இடத்தின் அருகே தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவுக்கு நகர்மன்ற தலைவர் செந்தில்குமார் அன்னதானம் வழங்கினார். அன்னதானத்தை பெற்றுக்கொண்டு பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்ற சிறிது நேரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. சிறிது தாமதமாக இந்த நிகழ்வு நடந்திருந்தால் பெரு விபத்து ஏற்பட்டிருக்கும். எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி அலுவலர்கள் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்களுக்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
மேலும் அதே பகுதியில் வலுவிழந்த கட்டிடங்களையும், வீடுகளையும் இடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.