Skip to main content

நேரில் வந்த பிரதமரை, ஆய்வு செய்யவும்விடாமல் அடைமழை கொட்டியுள்ளது! வேல்முருகன்

Published on 19/08/2018 | Edited on 19/08/2018
mo

 

நேரில் வந்த பிரதமரை, ஆய்வு செய்யவும்விடாமல் அடைமழை கொட்டியுள்ளது! எனவே இந்த கனமழை பாதிப்பை ”தேசிய பேரிடராக” அறிவித்து, தேவைப்படும் நிதியை கேரளாவுக்கு வழங்கவேண்டுமாய் ஒன்றிய அரசை வேண்டிக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்கிறார் அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன். இது குறித்த அவரது அறிக்கை:
 

’’கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தபடி,  ”100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான வெள்ள பாதிப்பை கேரளா எதிர்கொண்டுள்ளது. அணைகள் அனைத்தும் திறந்துவிடப்பட்டுள்ளன. இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளனர். 2,23,139 பேர் 1,500 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.”

 

கேரளாவின் 14 மாவட்டங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

 

பல பகுதிகளில் வீடுகளின் மாடி வரை வெள்ளம் சூழந்துள்ளது. இதனால் பலரும் மொட்டை மாடியிலும் கூரைகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்படுபவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் முப்படையும் இறக்கிவிடப்பட்டுள்ளது.

 

வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய பிரதமர் மோடி கேரளா வந்தார். திருவனந்தபுரத்தில் வந்திறங்கிய அவர், தனி விமானம் மூலம் கொச்சி சென்று, வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட ஹெலிகாப்டரில் புறப்பட்டார். ஆனால் கனமழை கொட்டத் தொடங்கியதாலும், மோசமான வானிலையாலும் ஹெலிகாப்டரை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் பிரதமர் கொச்சிக்கே திரும்பிச் செல்லவேண்டியதாயிற்று.

 

கொச்சியில் ஆளுநர் சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்திய பிரதமர், கேரளத்திற்கு வெள்ள நிவாரண உடனடி நிதியாக ரூ.500கோடி ஒதுக்குவதாகவும், முழுமையான சேத மதிப்பீட்டு ஆய்வுகளுக்குப் பிறகு உரிய நிதி அளிப்பதாகவும் அறிவித்தார்.

 

பிதமரின் இந்த அறிவிப்பை வரவேற்கிறது, பாராட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!நேரில் வந்த பிரதமரை, ஆய்வு செய்யவும்விடாமல் பெய்த இந்த அடைமழை-கனமழை என்பது முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தபடி, கடந்த 100 ஆண்டுகளில் இல்லாதது!

 

இந்தப் பேய்மழை பற்றிச் சூழலியலாளர்கள் கூறுகையில், ”நவீனமயமாக்கத்தின் விளைவாக, உலகில் அதாவது இந்தப் புவிக்கோளத்தில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றமும்; நவீனமயம், வளர்ச்சி என்ற பெயரில், மேற்குத்தொடர்ச்சிமலையின் கேரளப் பகுதிகளை ஆக்கிரமிப்பாளர்கள் கபளீகரம் செய்து இயற்கையை அழித்துவிட்டதும்தான் இதுபோன்ற பேரிடர்களுக்குக் காரணம்” என்கின்றனர்.

 

வரலாறு காணாத இந்தப் பெருமழையால் ஏற்பட்ட உயிரிழப்புகள்-உடமை இழப்புகளும் வரலாறு காணாததே! மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை மட்டுமல்லாது, முப்படையையுமே இறக்கிவிட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது!   எனவே இந்த கனமழை பாதிப்பை ”தேசிய பேரிடராக” அறிவித்து, தேவைப்படும் நிதியை கேரளாவுக்கு வழங்கவேண்டுமாய் ஒன்றிய அரசை வேண்டிக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! ’’

சார்ந்த செய்திகள்

Next Story

மின்னணு வாக்குப்பதிவு குறித்த புகார்; உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Complaint about electronic voting; The Supreme Court is in action

தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகை சீட்டையும் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ‘ஒப்புகைச் சீட்டு இயந்திரம் கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் வெளிப்படையாக தெரியும் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஒப்புகை சீட்டு உள்ளே விழுகிறதா? என்பது கூட வாக்காளர்களுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் உள்ள ஒரு சட்டப்பேரவை தொகுதியில் ஏதாவது 5 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்புகை சீட்டு சரிபார்க்கப்படுகிறது. இது வெறும் இரண்டு சதவீதம் மட்டுமே சரி பார்ப்பாகும். இதிலும் முறைகேடு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இதனைத் தடுக்க மின்னணு வாக்குப்பதிவை மக்கள் நம்பாத பட்சத்தில் ஒப்புகை சீட்டுகளை அதனுடன் ஒப்பிட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இந்தியாவில் வாக்காளர்களின் எண்ணிக்கை 1960ல் 50 லிருந்து  60 கோடிகளில் தான் இருந்தது. ஆனால் தற்பொழுது 97 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் சராசரியாக 65 சதவீதம் பேர் வாக்களிக்கிறார்கள், என்றால் கூட அத்தனை வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளையும் எப்படி, எப்போது எண்ணி முடிப்பது? இத்தனை கோடி வாக்கு ஒப்புகை சீட்டுகளை எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் எனத் தேர்தல் ஆணையம் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது என நீதிபதிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மனுதாரர் தரப்பில், ‘மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எந்த விதத்திலும் தவறாக பயன்படுத்த முடியாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது. இதுவரை தவறாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் கூறுகிறது. ஆனால் எதிர்காலத்திலும் இவ்வாறு நடக்காது என்று  சொல்ல முடியாது எனவே. 100% ஒப்புகை சீட்டுகளை சரி பார்ப்பதற்கு உத்தரவிட வேண்டும்’ என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு இரண்டாவது முறையாக இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜரானார். அவர் அப்போது வாதிடுகையில், “கேரளா மாநிலம் காசர்கோடு சட்டமன்ற தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவில் ஒரு முறை வாக்குப்பதிவு இயந்திரத்தின் பொத்தானை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டுகள் விழுவதாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனையடுத்து இது குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை பற்றி பல்வேறு கேள்விகளையும் நீதிபதி எழுப்பியுள்ளனர். 

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.