Skip to main content

“மோடியின் முகத்திரையை கிழித்துள்ளது” - வெளியான முதலமைச்சரின் ஆடியோ!

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

MK Stalin's Broad cast episode one

 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவுக்காக பேசுவோம் எனும் பிராட்காஸ்ட் மூலம் இன்று பேசியுள்ளார். அதில் அவர், “2014 மற்றும் 2019ம் ஆண்டுகளில் ஏமாறியதுபோல் நாடு 2024ல் ஏமாறிவிடக்கூடாது. 2014 தேர்தலின்போது 60 ஆண்டுகளாக இந்தியாவை காங்கிரஸ் ஆட்சி செய்திருக்கிறது. எனக்கு 60 மாதங்கள் கொடுங்கள் நாட்டை வளர்ச்சி மிக்க நாடாக மாற்றிக்காட்டுகிறேன் என்று சொன்னார் மோடி. ஆனால், வெறும் 60 மாதங்கள் மட்டுமல்லாமல் கூடுதலாக 60 மாதங்கள் ஆட்சி செய்யும் வாய்ப்பை இந்திய மக்கள் வழங்கினார்கள். வளர்ச்சி மிகு நாடாக மாற்றிவிட்டாரா என்பது தான் அவர் பதில் சொல்ல வேண்டிய கேள்வி. 

 

திறமை, வர்த்தகம், பாரம்பரியம், சுற்றுலா மற்றும் தொழில்நுட்பம் இந்த ஐந்து தான் எனக்கு முக்கியம் என்று சொன்னார். ஆனால், இந்த ஐந்தில் ஒன்றாவது நிறைவேற்றப்பட்டிருக்கிறதா? என்னைப் பொறுத்தவரை வகுப்புவாதம், ஊழல் முறைகேடுகள், மூலதன குவியல், மோசடி மற்றும் அவதூறுகள் என இந்த ஐந்தைக் கொண்ட ஆட்சிதான் இது. 

 

இதுவரை இதனையெல்லாம் விளம்பரங்கள் மூலம் பாஜக மறைத்து வந்தது. ஆனால், உருவான இந்தியா கூட்டணியும், அந்தக் கூட்டணி தலைவர்களின் பரப்புரையும் பா.ஜ.கவின் முகத்திரையை, பிரதமர் நரேந்திர மோடி எனும் பிம்பத்தைக் கிழித்துள்ளது. 

 

இந்தியா கூட்டணியைப் பார்த்து ஊழல் கூட்டணி எனும் சொல்லும் மோடி, உங்கள் ஆட்சியைக் குறித்து சி.ஏ.ஜி. அறிக்கை என்ன சொல்லியிருக்கிறது என படித்து பார்த்தீர்களா? இதைப் பற்றி சிறப்புக் கூட்டத்தொடரில் விவாதித்தீர்களா அல்லது பதில் சொன்னீர்களா? அயோத்தி திட்டத்தில் கூட ஊழல் செய்த கட்சிதான் பாஜக என சி.ஏ.ஜி. அறிக்கை சொல்லியுள்ளது. 

 

எல்லாத் திட்டங்களுக்கும் நம் வாயில் நுழையாத பெயர்களாக பார்த்து வைப்பார்கள். காரணம் அப்படி வைத்தால்தான் அதில் என்ன நடக்கிறது என யாராலும் கண்டுபிடிக்க முடியாது. 

 

ராமாயணம் நடந்த இடத்திற்கெல்லாம் அழைத்து செல்லப்படுவார்கள் என ஒரு சுற்றுலா திட்டத்தை கொண்டுவந்தார்கள். அதில், உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹிமாச்சல் பிரதேசம், சிக்கிம், கோவா மற்றும் தெலுங்கானா ஆகிய ஆறு மாநிலங்களில் செயல்படுத்தப்போவதாக சொன்னார்கள். இந்தத் திட்டத்தில் பல கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டிருப்பதாக சி.ஏ.ஜி. குற்றஞ்சாட்டி இருக்கிறது. 

 

மிகப்பெரிய பீடிகையோடு உதான் திட்டம் துவங்கப்பட்டது. ஏழைகள் விமானத்தில் பயணிக்கலாம், நடுத்தர நகரங்களிலும் விமான நிலையம் அமைக்கப்போகிறோம் என இந்தத் திட்டத்தை 2016ம் ஆண்டு துவங்கினார்கள். இந்த உதான் திட்டத்திற்காக ஒன்றிய அரசு ரூ. 1089 கோடியை ஒதுக்கியது. திட்டமிடப்பட்ட 774 வழித்தடங்களில் விமான சேவை வழங்க திட்டமிடப்பட்டதில், வெறும் 7 விழுக்காடு தடங்களிலேயே இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 93% வழித்தடங்களில் விமானங்கள் இயக்கப்படவில்லை. எடுத்துக்காட்டிற்கு, தமிழ்நாட்டில், சேலம், வேலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு உதான் திட்டத்தில் விமான சேவை வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த நான்கு பகுதிகளில் சேலத்திற்கு மட்டுமே உதான் திட்டத்தின் அடிப்படையில் விமான சேவை இயக்கப்பட்டது. அதுவும் கூட தற்போது இல்லை. இதனை சி.ஏ.ஜி. அறிக்கை சொல்லியுள்ளது. 

 

2021 - 2022ம் ஆண்டில் ரயில்வே துறையில் 100 ரூபாய் வருவாய் ஈட்டுவதற்கு 107 ரூபாய் செலவு செய்ததாகவும், இதனால் இந்திய ரயில்வேயின் நிதிநிலை கவலைக்குரியதாக ஆகிவிட்டதாகவும் சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

ஒன்றிய அரசின் பல்வேறு ஓய்வுத் திட்டங்களில், 2017 முதல் 2021ம் ஆண்டு வரை ஒதுக்கப்பட்ட நிதி, ஒன்றிய அரசின் விளம்பரத்திற்கு பயன்படுத்தப்பட்டு, முறைகேடு நடந்திருக்கிறது என  அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. 

 

இந்த முறைகேடுகளுக்கெல்லாம் உச்சம் சுங்கச்சாவடி முறைகேடுதான். சுங்கச்சாவடி மூலம் நாள்தோறும் பெரும் மோசடி நடந்துள்ளது. வெறும் ஐந்து சுங்கச் சாவடிகளை தணிக்கை செய்ததன் மூலம், வாகன ஓட்டிகளிடம் இருந்து 132 கோடியே, 5 லட்சம் ரூபாயை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வசூலித்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது. அப்படியானால், இந்தியா முழுக்க உள்ள சுங்கச் சாவடிகளில் எவ்வளவு முறைகேடுகள் நடந்திருக்கும் என கணக்கிட்டு பாருங்கள். 

 

நாடு முழுக்க இருக்கும் சாலைகளை இணைக்க 2015ம் ஆண்டு பாரத் மாலா எனும் திட்டத்தை கொண்டுவந்தார்கள். இதில் ஒரு கி.மீ. தூரத்திற்கு 15 கோடியே, 37 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டதை 32 கோடியே, 17 லட்சமாக ஆக்கி ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். அதேபோல், இந்த 8 ஆண்டு காலத்தில் வெறும் 13,000 கி.மீ.க்கு தான் சாலை போடப்பட்டுள்ளது. 40% வேலை கூட முடியவில்லை. அதேபோல், துவாரகா நெடுஞ்சாலை திட்டம், பாரத்மாலா பரியோஜனா-1 எனும் திட்டத்திலும் முறைகேடுகள் நடந்திருக்கிறது. திட்டமிட்ட மதிப்பைவிட 1,278 மடங்கு கூடுதல் தொகை செலவிடப்பட்டுள்ளது. 

 

இந்தியாவுக்கே முன்மாதிரியாக 2009 ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் கலைஞர் ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்டது. கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் கழித்து பிரதமர் அறிவித்த பிரம்மாண்டமான திட்டங்களில் ஒன்று ஆயுஷ்மான் பாரத் திட்டம். ஏழை குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் வரை காப்பீடு வழங்குவதாக பா.ஜ.க. சொல்கிறது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று இறந்த நோயாளிகளுக்கு இறந்த பிறகும் சிகிச்சை பெறுவதாக சொல்லி காப்பீட்டு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, காப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. ஒரே ஆதார் எண், ஒரே போன் நம்பரை பலர் பதிவு செய்வது, இதற்கெல்லாம் மேல், போன் நம்பரையே கொடுக்காமல் பதிவு செய்வது என எக்கச்சக்கமாக முறைகேடுகள் நடந்துள்ளன. எத்தனை பேர், எத்தனை கோடி என தனி தனி நம்பர்களாக சொன்னால் கேட்பவர்களுக்கு தலை சுற்றும். 

 

அயோத்தியில் துவங்கி ஆயுஷ்மான் பாரத் திட்டம் வரை 7.5 லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக சி.ஏ.ஜி. அளவிட்டுள்ளது. ஆனால், இதுவரை இதற்கு பிரதமரோ அல்லது சம்பந்தப்பட்ட ஒன்றிய அமைச்சர்களோ பதில் சொல்லவில்லை. அவர்களால் பதில் சொல்லவும் முடியாது. அதன் காரணமாகவே இதில் இருந்து மக்களை திசை திருப்புவதற்கு வெவ்வேறு அரசியலை கையில் எடுக்கிறார்கள். 

 

ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட பட்டியலின பழங்குடியின மக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருபவர்தான் நரேந்திர மோடி என நாட்டின் மக்கள் அனைவரும் உணர்ந்து கொண்டார்கள். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் பா.ஜ.க. வீழ்த்தப்பட்டுள்ளதே இதற்கான அடையாளம். 

 

2024 தேர்தலில் பா.ஜ.க. ஒட்டுமொத்தமாக வீழ்த்தப்பட வேண்டும். பா.ஜ.க.வின் வகுப்புவாத, ஊழல், கார்ப்பரேட் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்திய மக்கள் அனைவரும் ஒரே குரலாக முழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.  

 

 

சார்ந்த செய்திகள்