Skip to main content

தேர்தல் ஆணையத்திடம் இருந்து வந்த லெட்டர்; மா.செ.க்களை அவசரமாக அழைத்த இபிஎஸ்

Published on 16/05/2023 | Edited on 16/05/2023

 

Letter from Election Commission; EPS urgently called the admk officials

 

நாளை மாலை 5 மணிக்கு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி அதிமுக சட்ட விதிகளில் மாற்றம் செய்து அதிமுக பொதுக்குழு செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியது. சட்ட விதிகளில் மாற்றம் செய்ததை அங்கீகரிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் அதிமுக விவகாரத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்ததன் காரணமாக இந்த சட்ட விதிகளை தேர்தல் ஆணையம் இணையத்தில் பதிவேற்றாமல் இருந்தது. இதனிடையே கடந்த ஏப்ரல் மாதத்தில் மாற்றம் செய்யப்பட்ட அதிமுக சட்ட விதிகளை நாங்கள் அங்கீகரிக்கிறோம் என்று தேர்தல் ஆணையம் அதிமுகவிற்கு கடிதம் எழுதி இருந்தது.

 

இந்நிலையில் இன்று இந்த சட்ட விதிகளை முழுமையாக அங்கீகரித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இணையத்திலும் பதிவேற்றியுள்ளது. மேலும் இன்னும் ஓரிரு தினங்களில் அதிமுகவின் முழுமையான சட்ட விதிகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் அதிமுக வழக்கறிஞர்களுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. தேர்தல் ஆணையம் இணையத்தில் அதிமுகவின் சட்ட விதிகளை பதிவேற்றம் செய்ததன் மூலம் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. இரட்டை இலை சின்னம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்ற கடிதம் அதிமுகவின் தலைமை அலுவலகத்திற்கு அதிமுக பொதுச்செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் நாளை அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தேர்தல் ஆணையம் அதிமுக சட்ட விதிகளை இணையத்தில் பதிவேற்றிய நிலையில் நாளையே மா.செ.க்கள் கூட்டம் கூடுவது குறிப்பிடத்தக்கது. கட்சி மற்றும் சின்னம் இரண்டும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதால் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள், பூத் கமிட்டிகள் போன்றவை குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்