Skip to main content

“நான் ஜெயலலிதாவை விமர்சிக்கவில்லை.. ஆனால் அவர் ஏ1..” - அண்ணாமலை

Published on 14/06/2023 | Edited on 14/06/2023

 

annamalai explain about jayalalitha

 

ஜெயலலிதா ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தரப்பு கொந்தளித்து வருகிறது. அதிமுகவின் அனைத்து அமைச்சர்களும் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். தொடர்ந்து அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 

இந்த நிலையில் இது குறித்து பேசிய அண்ணாமலை, “நான் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவறாக புரிந்துகொண்டு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தொடர்ந்து ஊழலை எதிர்த்தும் ஊழலுக்கு எதிராக போராடியும் வருகிறேன். அவர்கள் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்தது போல் நான் செய்யமாட்டேன். ஆங்கில நாளிதழில் நான் கூறியிருந்தது, ஊழலில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. அதனை மாற்றுவதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும். அதுதான் ஆக்கப்பூர்வமான அரசியல் என்று தொடர்ந்து கூறி வருகிறேன்.

 

அதே நேரத்தில் மாண்புமிகு ஜெயலலிதா அம்மாவை பற்றி தொடர்ந்து பல இடங்களில் பேசியிருக்கிறேன். கடந்த மூன்று, நான்கு வருடங்களாக மாண்புமிகு அம்மாவின் ஆளுமை குறித்து பேசியிருக்கிறேன். அவர் ஏழை மக்களுக்கு செய்த நல்ல திட்டங்களை பற்றி பேசியிருக்கிறேன். இதெல்லாம் வீடியோவாக பதிவாகியிருக்கிறது. வேண்டுமென்றால் அதனைப் பாருங்கள். நான் யாரை பற்றியும் தவறாகவும், தரக்குறைவாகவும் பேசவில்லை. ஒரு பேட்டியில் நான் கூட சொல்லியிருக்கிறேன், ஜெயலலிதா அம்மையாரை போல சிறந்த ஆளுமைமிக்க தலைவராக வரவேண்டும் என்று. ஆனால் அதற்கு சிலர் கடுமையான விமர்சனங்களை வைத்தனர். அப்படி இருக்கும் நான் அவரை அவமானப்படுத்தி விட்டேன் என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

 

நான் அவரைக் குறிப்பிட்டுப் பேசவில்லை. என்னுடைய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது. இந்தியாவில் இரண்டு முறை எந்த மாநிலத்தின் தலைமை செயலகத்திலும் சோதனைகள் நடைபெற்றதில்லை. ஆனால் தமிழகத்தில் நடந்திருக்கிறது. அந்தளவிற்கு ஊழல் என்பது தமிழகத்தில் புரையோடிப் போயிருக்கிறது. அதனைத்தான் நான் தொடர்ந்து பேசி வருகிறேன். கூட்டணியில் இருந்தாலும் இதனைத்தான் பேசி வருகிறேன். என்னுடைய கொள்கையில் எந்த விதமான மாற்றமுமில்லை. அதனால் கூட்டணியில் இருப்போம், மற்றவர்களை மதிப்போம். நடந்த விஷயத்தை கூறியிருக்கிறேன். யாரையும் தவறாகக் கூறவில்லை. ஜெயலலிதா அம்மையாரின் ஆளுமை குறித்து பாராட்டிப் பேசியிருக்கிறேன்.

 

ஆனால் வழக்கில் அவரை ஏ1 என்று குறிப்பிட்டுள்ளார்கள். பலரும் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று சொல்லலாம். அதற்குள் நான் போக விரும்பவில்லை; அது என் வேலையுமில்லை. அவர் மறைந்துவிட்டார். அவரை பற்றி பேசுவது சரியாக இருக்காது. எந்த இடத்திலும் நான் அவரை தவறாகக் குறிப்பிடவில்லை. அப்படி பேசுவதற்கு எனக்கு தகுதியும் இல்லை. தமிழ்நாட்டில் நடக்கும் ஊழலை பற்றி தான் பேசியிருக்கிறேன். அவரை பற்றியும் எதுவும் பேசவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.