Skip to main content

நீட் தேர்வு : தமிழக அரசு செலவில் மாணவர்களை விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும்: அன்புமணி

Published on 03/05/2018 | Edited on 03/05/2018
anbumani ramadoss

 

 

தமிழக மாணவர்களுக்கு அண்டை மாநிலங்களில் நீட் தேர்வு மையம் ஒதுக்குவது சமூக அநீதி என்றும், மாணவர்களை அரசு செலவில் விமானத்தில் அழைத்துச் சென்று, வசதியான இடத்தில் தங்க வைத்து திரும்ப அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
 

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளம் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது சரி தான் என்றும் அதில் எந்த மாற்றமும் செய்ய முடியாது  என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. நடைமுறைக்கு சாத்தியமற்ற செயலை மாணவர்கள் செய்தே தீர வேண்டும் மத்திய அரசு கட்டாயப்படுத்துவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
 

திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு உள்ளூரில் தேர்வு மையம் ஒதுக்குவதற்கு பதிலாக கேரள மாநிலம் எர்ணாகுளம், இராஜஸ்தான் மாநிலம் ஆகிய இடங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மாநிலம் விட்டு, மாநிலம் சென்று நீட் தேர்வில் பங்கேற்பதில் ஏராளமான சிக்கல்கள் இருப்பதால், தமிழகத்திலேயே அவர்களுக்கு நீட் தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என்று ஆணையிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்க வேண்டும்  என்று நீட் தேர்வுகளை நடத்தும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திற்கு அண்மையில் ஆணையிட்டிருந்தது.
 

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மிகவும் நியாயமானது; பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நியாயம் வழங்கும் நோக்கம் கொண்டது. இத்தீர்ப்பை செயல்படுத்தி தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமிழகத்திலேயே தேர்வு எழுதுவதை உறுதி செய்திருக்க வேண்டியது மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் கடமையாகும். இதில் எந்த சிரமமும் இல்லை. தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களில் சுமார் 200 பேருக்கு  மட்டுமே வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள இரு தேர்வு மையங்களின் கொள்ளளவை தலா 100 இருக்கைகள் வீதம் அதிகரித்தால் போதுமானது. ஆனால், சமூக நீதியை நிலை நிறுத்துவதற்கான இந்த நடவடிக்கையைக் கூட செய்வதற்கு மத்திய அரசின் கல்வி வாரியம் தயாராக இல்லை. மாறாக, சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தடை வாங்கியுள்ளது. இது சமூக அநீதி.
 

 தமிழகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கேரளத்துக்கும், இராஜஸ்தானுக்கும் சென்று நீட் சென்று தேர்வு எழுதுவது எளிதான காரியம் அல்ல. தொடர்வண்டியில் இரு நாட்கள் பயணம் செய்து தான் இராஜஸ்தான் செல்ல வேண்டும். பயணச் செலவு, தங்குமிடச் செலவு ஆகியவற்றை ஏழை மற்றும் நடுத்தர மாணவர்களால் தாங்க முடியாது. இதையெல்லாம் விட இராஜஸ்தானில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியசை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தமிழக மாணவர்களால் இதை நிச்சயமாக தாங்கிக் கொள்ள முடியாது. இதனால் அவர்களுக்கு உடல்நலன் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படலாம். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இராஜஸ்தான் சென்று தான் தேர்வெழுத வேண்டும் என்று மத்திய அரசு  பிடிவாதம் பிடிப்பதும், அதில் உள்ள நடைமுறை சிக்கல்களைக் கருத்தில் கொள்ளாமல் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்வதும் சமூக நீதியை குழிதோண்டி புதைக்கும் செயல்களாகும்.
 

இந்த விஷயத்தில் தமிழக அரசு காட்டிய அலட்சியம் கடுமையாக கண்டிக்கத்தக்கது. இந்த சிக்கல் முதன்முதலில் தெரியவந்ததுமே இதற்கு தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசை பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தியது. ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்காத தமிழக அரசு,  இப்போது இவ்விஷயத்தில் எதையும் செய்ய முடியாது என கைவிரித்து விட்டது. தமிழக ஆட்சியாளர்களுக்கு எந்தவித கடமையுணர்வும், பொறுப்பும் இல்லை என்பதையே இது காட்டுகிறது. இராஜஸ்தானில் தான் நீட் தேர்வு எழுத வேண்டுமென்றால் பல மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்படும் வாய்ப்புள்ளது.
 

எனவே, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் அதிகாரிகளும் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரை தொடர்பு கொண்டு தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யும்படி வலியுறுத்த வேண்டும். அது சாத்தியமில்லை என்றால் சம்பந்தப்பட்ட மாணவர்களை அரசு செலவில் விமானத்தில் இராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்று, வசதியான இடத்தில் தங்க வைத்து திரும்ப அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவர்களை அழைத்துச் சென்று வர பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரி தலைமையில் குழு ஒன்றையும் தமிழக அரசு அமைக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

“உழவர்களுக்கு எதிரான அரசு வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” - அன்புமணி கண்டனம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
  day when the anti-farmer government will fall is not far says Anbumani

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவர் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் அவருடன் இணைந்து உழவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் நாள் படாளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதையும், அவ்வாறு கையூட்டு வாங்கும் சக்திகளுக்கு காவல்துறையினர் துணை போவதையும் கண்டித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருவது தான்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடர்கிறது. படாளம், பழையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கச் செல்லும் உழவர்களிடம் மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களுக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி சென்ற மணி, பரமசிவம் ஆகியோர் உழவர்களிடம் கையூட்டு பெறப்படுவது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்காத நெல் கொள்முதல் நிலையப் பணியாளர் செல்வம் என்பவர், மணியும், பரமசிவமும் தம்மை மிரட்டியதாக படாளம் காவல்நிலையத்தில் மார்ச் 20&ஆம் தேதி புகார் அளித்தார். அதன் மீது மார்ச் 24&ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படாளம் காவல்நிலைய அதிகாரிகள், அதன் பின் ஒரு  மாதத்திற்கும் மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம்  ஒழுங்கு சீர் கெட்டதையும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் துணை நிற்பதையும் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மணி, பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மணி, பரமசிவம் ஆகியோரை விசாரணை என்ற பெயரில்  படாளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவர் மீதும் ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்த வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவர் சங்க நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நன்றி மறந்து உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. நிலவுரிமையை பாதுகாப்பதற்காக போராடிய மேல்மா உழவர்களை கைது செய்தும், அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும் கொடூர முகத்தைக் காட்டிய தமிழக அரசும், காவல்துறையும் இப்போது ஊழலை எதிர்த்து போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து அதன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை மருந்து நடமாட்டம் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிற்கு காரணமான  குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி உழவர்களையும், கிளி சோதிடர்களையும், வெயிலின் தாக்கத்தை உணர்த்த சாலையில் ஆம்லேட் போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாட்டில் நடப்பது யாருக்கான அரசு என்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த்தொட்டியில் மாட்டுச்சாணம் கலப்பு; ராமதாஸ் கண்டனம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Ramdas said mixing of cow dung in the drinking water tank of Sangamviduthi panchayat is reprehensible

சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் சங்கம்விடுதி ஊராட்சிக்குட்பட்ட குருவண்டான் தெருவில் பட்டியலின மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்  அதிர்ச்சியளிக்கின்றன. பொதுமக்கள் குடிப்பதற்கான குடிநீர்த் தொட்டியில்  மாட்டுச்சாணம் கலக்கப்பட்டது மனிதநேயமற்றது மட்டுமின்றி, மனிதத் தன்மையற்ற செயலாகும்.  இது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாகவே மாட்டுச்சாணம் கலக்கப்பட்டிருக்கக் கூடும் என்று தெரியவந்துள்ளது. அத்தொட்டியிலிருந்து விநியோகிக்கப்பட்ட குடிநீரை குடித்த குழந்தைகள் உள்ளிட்ட பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை ஆய்வு செய்த போது தான் இந்த உண்மை வெளிவந்திருக்கிறது. மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான குடிநீர்த் தொட்டியில் இது போன்ற மிருகத்தனமான செயல்கள் நடப்பதைக் கண்காணிக்க வேண்டியதும், ஒவ்வொரு நாளும் குடிநீர் மக்கள் பயன்படுத்தத் தக்க வகையில் பாதுகாப்பாக இருக்கிறதா?  என்பதை ஆய்வு செய்ய வேண்டியதும் அரசின் பணி. ஆனால், இந்த இரு கடமைகளிலும் திராவிட மாடல் அரசு தோல்வியடைந்து விட்டது.

தமிழ்நாட்டில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் அதிகரித்து விட்டன. அதிலும் குறிப்பாக பள்ளிகளிலும், பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளிலும் இத்தகைய நிகழ்வுகள் தொடர்வது மிகுந்த கவலையும், வேதனையும் அளிக்கிறது. பட்டியலின மக்களுக்கு எதிராக இத்தகைய கொடுமைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் அவற்றைத் தடுக்க தமிழக அரசு தவறி விட்டது.

வேங்கைவயல் குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்து இன்றுடன் 17 மாதங்களாகி விட்டன. ஆனால்,  அதில் தொடர்புடைய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் இத்தகைய கொடுமைகள் மீண்டும், மீண்டும் நிகழ்வதற்கு காரணம் ஆகும். வேங்கைவயல் விவகாரத்தில் தமிழக அரசு இனியும் உறங்கிக் கொண்டிருக்காமல்  குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

குருவண்டான் தெரு குடிநீர்த் தொட்டியில் சாணம் கலக்கப்பட்ட நிகழ்வும் வேங்கைவயல் நிகழ்வு எந்த அளவுக்கு கொடூரமானதோ, அதே அளவுக்கு கொடூரமானது. அனைவரும் மனிதர்கள் தான். பிடிக்காதவர்களை பழிவாங்குவதற்காக இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மன்னிக்கப்படுவதற்கு தகுதியற்றவர்கள். இந்த நிகழ்வின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத்தர தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.