Skip to main content

இபிஎஸ் வசமானது அதிமுக தலைமையகம்... தொண்டர்களை அனுமதிக்கத் தடை!

Published on 20/07/2022 | Edited on 20/07/2022

 

AIADMK headquarters in possession of EPS... Ban on allowing volunteers!

 

அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை அகற்றக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியே வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கில் இபிஎஸ் வசம் சாவியை ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

முன்னதாக இந்த வழக்கில் காவல்துறை தரப்பில், வீடியோ மற்றும் புகைப்பட ஆதாரங்களையும் பார்க்க வேண்டும் எனக்கூறி அதனை தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. மேற்கொண்டு எந்த மோதலும் இல்லை என இரு தரப்பில் உத்தரவாதம் அளிக்கவில்லை. தற்போது வரை இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் ஏற்படவில்லை. சீல் வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தால், மேலும் பிரச்சனை ஏற்படலாம். அ.தி.மு.க. அலுவலக மோதலில் பொதுச்சொத்து சேதம் தொடர்பாக, இழப்பீட்டை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

 

ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஜூலை 11- ஆம் தேதி அன்று காலை வரை இருவரின் (ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ்.) கட்டுப்பாட்டில் தான் அலுவலகம் இருந்தது. கட்சியில் எனது பதவி என்ன என்பதை அலுவலக உரிமை தொடர்பான விசாரணையில் தீர்மானிக்க முடியாது. பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஆதரவினால் இ.பி.எஸ். பக்கம் மட்டுமே அனைவரும் இருப்பதாக கருத முடியாது என வாதிட்டனர்.

 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, காவல்துறை பதில் மனுவுக்கு ஆட்சேபனை மனுவைத் தாக்கல் செய்ய ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு வரும் திங்கள்கிழமை வரை அவகாசம் வழங்கி, வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். இந்நிலையில் இன்று இந்த வழக்கில் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் ஒப்படைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்களை தவிர்ப்பதற்காக ஒரு மாதத்திற்கு தொண்டர்களை அனுமதிக்கக் கூடாது, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிய போலீஸ் பாதுகாப்பு தர வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்