Skip to main content

அதிமுக உட்கட்சி தேர்தல்! தொண்டருக்கு அடி உதை!!

Published on 03/12/2021 | Edited on 03/12/2021

 

ADMK party election... member has been beaten

 

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் தலைமையில் வெற்றிடம் ஏற்பட்டிருந்தது. கட்சியின் பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்ந்தெடுத்தது அதிமுக பொதுக்குழு. முதலமைச்சராக வருவதற்கு சசிகலா ஆசைப்பட, ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு ஊழல் வழக்கில் சிறைக்குச் செல்ல நேரிட்டது.

 

சிறைக்கு செல்வதற்கு முன்பு தமிழகத்தின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியையும், கட்சியின் துணை பொதுச்செயலாளராக தினகரனையும் உருவாக்கிவிட்டுச் சென்றார் சசிகலா. இவருக்கு எதிராக ஓ.பி.எஸ். தொடர்ந்த தர்மயுத்தம், பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாததால் அதிமுகவில் மீண்டும் இணைந்தார் ஓ.பி.எஸ். அவரது இணைப்புக்கு மத்தியில் ஆட்சியில் இருந்த பா.ஜ.க.வின் அழுத்தம் அதிகமிருந்தது.

 

ஓ.பி.எஸ். மீண்டும் அதிமுகவில் இணைந்த பிறகு நடந்த பொதுக்குழுவில், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை ஒட்டுமொத்தமாக ஒழித்து விட்டு, அதற்கு பதிலாக ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவியை உருவாக்கினர். அதற்கேற்ப கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது. இந்த பதவிகளின் முறையே ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். துணை ஒருங்கிணைப்பாளர் பதவியும் உருவாக்கப்பட்டது.

 

இத்தகைய சட்ட திருத்தங்களை எதிர்த்து சசிகலாவும், முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமியும் தனித்தனியாக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள் இன்னமும் நிலுவையில் இருக்கிறது. அதேசமயம், அதிமுக ஆட்சியில் இருந்ததால் இந்த இரட்டைத் தலைமைக்கு பிரச்சனை இல்லாமல் இருந்தது. இந்த நிலையில், 4 ஆண்டுகால சிறை தண்டனையை நிறைவு செய்து விட்டு விடுதலையாகி வெளியே வந்த சசிகலா, அதிமுகவை கைப்பற்ற, கட்சியின் பொதுச் செயலாளர் நான் தான் என்று உரிமை கோரி வருகிறார்.

 

இதனால், கட்சிக்கு இரட்டைத் தலைமை வேண்டாம்; ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்ற குரல்கள் அதிமுகவின் இரண்டாம் நிலை தலைவர்களிடையே உயிர்ப்பித்து அது வலிமையாகத் துவங்கியது. இந்த சிந்தனை வலிமையாவதை எடப்பாடி உள்ளிட்டவர்கள் ரசிக்கவில்லை; விரும்பவில்லை. இதனையடுத்து, கட்சியின் விதிகளை மீண்டும் திருத்தி பொதுச்செயலாளராகிவிட வேண்டும் என ஓ.பி.எஸ். எடுத்த முயற்சிகள் பலனிளிக்கவில்லை.

 

அதேசமயம், ஓ.பி.எஸ்.சிடம் பேச்சுவார்த்தை நடத்திய ஆதரவாளர்கள், இரட்டை தலைமையை வலிமையாக்கும் வகையிலும், அந்த இரட்டைத் தலைமைக்கு அதிகாரத்தை கூடுதலாக்கும் வகையிலும் சட்டத்தை திருத்தம் வேண்டும் என வலியுறுத்தினர். முதலில் இதற்கு ஓ.பி.எஸ். எதிர்ப்புத் தெரிவித்தாலும், ஒரு கட்டத்தில் ஒப்புக்கொண்டார்.

 

இதனையடுத்து டிசம்பர் 1ந் தேதி நடந்த செயற்குழுவில், கட்சியின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள், இனி கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் ஓட்டுப் பேட்டு தேந்தெடுப்பார்கள் என்றும், இந்த விதியை மட்டும் மாற்றவோ திருத்தவோ பொதுக்குழுவுக்கு அதிகாரமில்லை என்றும், அந்த இரட்டைத் தலைமையை ஒற்றை வாக்கில் தேர்ந்தெடுக்கப்படுவர் என்றும் கட்சியின் சட்டவிதிகளில் திருத்தம் செய்தனர். அந்த திருத்தத்துக்கு செயற்குழு ஒப்புதல் தந்தது.

 

செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், பொதுக்குழுவில் ஒப்புதல் பெறவேண்டும். அதற்காக விரைவில் அதிமுக பொதுக்குழு கூடும் என எதிர்ப்பார்க்கபப்ட்ட நிலையில், அதிமுகவின் உள்கட்சி தேர்தலை திடீரென ஓ.பி.எஸ்.சும், இ.பி.எஸ்.சும் அறிவித்துவிட்டனர். கிளைக்கழகம் தொடங்கி, தலைமை பதவியான ஒருங்கிணைப்பாளர் - இணை ஒருங்கிணைப்பாளர் பதவி வரை வாக்களித்து தேர்ந்தெடுப்பதற்கான தேதியையும் அவசரம் அவசரமாக அறிவித்து விட்டனர்.

 

கட்சி தேர்தலில் எந்த ஒரு பதவிக்கும் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், போட்டியிடுவதற்கான வேட்பு மணுவை இன்றும் (3.12.2021) நாளையும் கட்சி தலைமையகத்தில் பெற்றுக்கொண்டு, நாளை (4.12.2021) மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவித்தனர்.

 

அதனால் இன்று (3.12.2021) அதிமுக தலைமைக் கழகத்தில் தொண்டர்கள் குவிந்தனர். அவர்களுக்கு விண்ணப்பப் படிவங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், யார் யாருக்கு படிவங்கள் தரலாம், யார் யாருக்கு தரப்படக் கூடாது என  சில ரகசிய உத்தரவுகளை தலைமைக் கழக நிர்வாகிகளிடம் பிறப்பித்திருக்கிறார் எடப்பாடி.

 

அந்த வகையில், வேட்பு மனுக்கள் விருப்பு வெறுப்புகளுடனேயே விநியோகிக்கப்பட்டன. பலருக்கும் விண்ணப்பங்கள் கிடைக்காமல் திரும்பினர். கட்சியின் உறுப்பினர் அட்டை வைத்திருக்க வேண்டும்; தற்போது வரை அந்த அட்டை புதுப்பித்திருக்க வேண்டும். அதனை காட்டி வேட்பு மனுவை வாங்கிக் கொள்ளலாம். ஆனால், உறுப்பினர் அட்டை லைவில் இருந்தும் பலருக்கும் வேட்பு மனுக்கள் தராமல் மிரட்டி அனுப்பி வைத்தனர் அதிமுக நிர்வாகிகள். எதிர்த்துக் கேட்ட தொண்டர்களுக்கு அடி உதையும் விழுந்தது. உதாரணமாக, 1972 முதல் கட்சியின் உறுப்பினராக இருந்து வரும் சென்னையைச் சேர்ந்த பிரசாத்சிங் என்பவர், ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட விரும்பி, விண்ணப்பப் படிவம் பெற அதிமுக கழகம் வந்திருந்தார்.

 

முறைப்படி வேட்பு மனுவுக்கான கட்டணத்தை கட்டி விண்ணப்ப படிவம் கோரினார். ஆனால், அவருக்கு தரமுடியாது என தலைமைக் கழக நிர்வாகிகள் மறுத்தனர். அதனை எதிர்த்து கேள்வி கேட்டார். ஒருமையில் அவரை வெளியே போகச் சொல்லி மிரட்டினார். அதற்கும் அசராத அவர், நிர்வாகிகளிடம் நியாயம் கேட்க, அவரை அடித்து உதைத்து வெளியேற்றினர். ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். தூண்டுதலின் பேரிலேயே தன்னைத் தாக்கியதாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் பிரசாத்சிங்.

 

கட்சியின் உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் எந்தப் பதவிக்கும் போட்டியிடலாம் என்கிற நிலையில், விண்ணப்பப் படிவங்களை தராமல் மிரட்டுவதும் அடித்து உதைப்பதும் அதிமுகவில் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த நிலையில், அதிமுகவின் உட்கட்சி தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசரம் அவசரமாக மனுதாக்கல் செய்திருக்கிறார் முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி. இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும், நான்கு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறும், தேர்தலில் முறைகேடுகள் நடந்தால் தேர்தலை ரத்து செய்வோம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.