Published on 12/06/2019 | Edited on 12/06/2019
இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள்,எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் நடைபெற்று வருகிறது.இந்த கூட்டத்தில் தேர்தலில் அதிமுகவிற்கு ஏற்பட்ட பின்னடைவு பற்றியும்,அதிமுக கட்சிக்கு ஒற்றை தலைமை தேவையா என்பது குறித்தும் முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.ஒற்றை தலைமை வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தவர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ.அவருடைய இந்த கருத்துக்கு ஆதரவாக பேசியவர் குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.ராமச்சந்திரன்.இந்த நிலையில் உடல்நலக் குறைவால் பெரம்பலூர் மாவட்ட செயலாளரும்,குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ராமச்சந்திரன் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தெரிகிறது.

அதோடு தினகரன் ஆதரவு 3 எம்.எல்.ஏ.க்களும் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.இது பற்றி விசாரித்த போது தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.இந்த நிலையில் சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்முகம் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை, சி.வி.சண்முகம் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் சமீபத்தில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் விழுப்புரத்தில் பேசிய சி.வி.சண்முகம் அதிமுக தோல்விக்கு பாஜகவுடன் கூட்டணி வைத்ததே காரணம் என்று கூறியிருந்தார்.