
அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பான விவாதம் எழுந்து பல்வேறு வழக்குகளுக்கு பிறகு எடப்பாடி தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளராக நிலைநிறுத்தியுள்ளார். தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்.வைத்தியலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் சார்பில் தனித்தனியாக நீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று தீர்ப்பளித்தார். தொடர்ந்து இபிஎஸ் அதிமுகவின் பொதுச்செயலாளராக உடனடியாக பதவி ஏற்றுக்கொண்டார்.
தற்பொழுது ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கொடுத்த மனுக்களின் விசாரணை வரும் ஏப்ரல் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இ.பி.எஸ் அதிமுகவின் பொதுச்செயலாளராக உடனடியாக பதவி ஏற்றுக்கொண்ட நேரத்தில் அவர் எம்.ஜி.ஆர் போல் தொப்பி மற்றும் கண்ணாடி அணிந்திருந்த புகைப்படங்கள் வெளியாகி விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்நிலையில், ராமநாதபுரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ''எம்ஜிஆரும் நான் தான் எடப்பாடியாரும் நான் தான்; சும்மா அதிருதில்ல' என 'சிவாஜியும் நான்தான் எம்ஜிஆரும் நான்தான்' என்ற ரஜினி நடித்த 'சிவாஜி' படத்தின் வசனத்தை உல்டா செய்து போஸ்டர் ஒட்டி பரபரப்பாக்கியுள்ளனர். அதில் 'சிம்மாசனம் என்றும் எங்கள் சிங்கத்திற்கே' என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.