
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அண்மையில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்ததை தொடர்ந்து தமிழக பாஜக தலைமை மாற்றப்படுவதாக கூறப்பட்டது.
தமிழக பா.ஜ.க.வின் அடுத்த தலைவருக்கான பட்டியலில் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பா.ஜ.க. சட்டமன்ற குழுத் தலைவரும், அக்கட்சியின் மாநில துணைத்தலைவரான நயினார் நாகேந்திரன் ஆகியோர் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில் தான் மத்திய உள்துறை அமைச்சர் 2 நாள் பயணமாக நேற்று (10.04.2025) இரவு 10.20 மணியளவில் சென்னை வருகை தந்தார். கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள அமித்ஷா இன்று காலை 35க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனும் அமித்ஷா ஆலோசனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

அண்மையில் காலமான குமரி அனந்தனின் மகள் தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுவிட்டு பின்னர் அங்கிருந்து மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டிற்கு அமித்ஷா சென்றுள்ளார்.
பாஜக முக்கிய தேசிய செயல்பாடுகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கருத்தை கேட்பது வழக்கம் என்ற நிலையில் தமிழக பாஜக தலைவர் நியமனம் குறித்து ஆர்.எஸ்.எஸ் சார்பிலான குருமூர்த்தியிடம் அமித்ஷா கருத்து கேட்க வீட்டிற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆடிட்டர் குருமூர்த்தியை நேற்று பாஜக தலைவர் சந்திருந்தார். இந்நிலையில் தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரனை நியமிக்க ஆர்.எஸ்.எஸ் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. இந்த குழப்பம் பாஜகவில் தொற்றியுள்ள நிலையில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற இருந்தது.
கூட்டணியில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் உள்ள நிலையில் மறுபுறம் கூட்டணியில் உள்ள பாமகவில் அன்புமணியின் தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது உட்கட்சி பூசலாக வெடித்துள்ளது.
இதனால் பாமக, அமமுக தலைமைகள் என்டிஏ கூட்டணி செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் செய்தியாளர் சந்திப்பு நேரத்தை தள்ளிவைத்துள்ளார் அமித்ஷா என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.