
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (10.04.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''பாமக தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன். அன்புமணி இனி பாமக செயல் தலைவராக செயல்படுவார். 2026ஆம் சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளேன். நீட் தேர்வு என்ற ஒன்று இருக்கக் கூடாது. ஒழிக்கப்பட பட வேண்டும். இன்றைக்குத்தான் நான் தலைவராக பொறுப்பேற்று இருக்கிறேன். நான் தான் இனி கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர். நிர்வாகக் குழு, செயற்குழு, சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லோரையும் கூடிப் பேசி கூட்டணி குறித்து முடிவு எடுப்போம். அன்புமணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு பல காரணங்கள் உண்டு” எனப் பேசியிருந்தார்.
முன்னதாக புதுச்சேரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் ராமதாசும், அன்புமணியும் மேடையில் மோதல் போக்கு இருந்தது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அன்புமணியின் தலைவர் பதவி திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சூழலில் இந்த முடிவுக்கு அக்கட்சியின் பொருளாளர் திலகபாமா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் . சமூகவலைத்தளத்தில் வெளியிட்டியிருந்த பதிவில், 'பாட்டாளி மக்கள் கட்சியின் ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இதுவரை ராமதாஸ் எடுத்த எல்லா முடிவுகளும் சரியே . அய்யாவின் அன்பினை ருசித்தவள் நான். ஆனால் இந்த முடிவு தவறு. அன்புதானே எல்லாம்' என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து திண்டிவனம் காமாட்சி அம்மன் கோவில் தெருவில் உள்ள ராமதாஸின் இல்லத்தை முற்றுகையிட்டு பாமகவில் இருந்து நீக்கப்பட்ட திண்டிவனம் நகர மன்ற முன்னாள் தலைவர் ராஜேஷ் தலைமையில் கண்டன கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பாமக தலைவர் பதவி விவகாரம் தொடர்பாக ராமதாஸை செய்ய அக்கட்சியின் நிர்வாகிகள் அவருடன் சந்தித்து வருவதகாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பில் பாமக வழக்கறிஞர் பாலு, மயிலம் தொகுதி எம்.எல்.ஏ. சிவக்குமார் உள்ளிட்டோரும் ராமதாஸ் இல்லத்திற்கு வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் ராமதாஸ் அவரது வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அவரை சந்தித்துப் பேசி வருவதாகவும், கட்சி நிர்வாகிகளான திலகபாமா, பாலு உள்ளிட்டோரை ராமதாஸ் இன்னும் சந்திக்கவில்லை என மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது.