Skip to main content

'உங்களுக்கு வீட்டோ அதிகாரம் இல்லை'-ஆளுநருக்கு அடி கொடுத்த உச்சநீதிமன்றம்

Published on 08/04/2025 | Edited on 08/04/2025
'You don't have veto power': Supreme Court slaps Governor

தமிழக அரசு சார்பில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது, மசோதாக்களை கிடப்பில் போடுவது, அரசின் முக்கிய முடிவுகளில் தன்னிச்சையாக செயல்படுவது போன்ற செயல்கள் மூலம் ஆளுநர் அரசின் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்த முயல்வதாக அரசின் சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இதனால், ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே நெடுங்காலமாக மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.

இதற்கிடையில், தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. மசோதாக்களுக்கு அனுமதி அளிக்காதது மட்டுமல்லாது துணைவேந்தர் நியமனத்தில் ஆளுநர் தலையீட்டுக்கு எதிராகவும் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

பல கட்டமாக தொடர் விசாரணையில் இருந்து வரும் இந்த வழக்கில் ஆளுநருக்கு எதிராக பல்வேறு கேள்விகளை உச்சநீதிமன்றம் எழுப்பியிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் பார்திவாலா, ஆர்.மஹாதேவன் அமர்வில் விசாரிக்கப்பட்ட நிலையில் இறுதி விசாரணைகள் முடிந்து இன்று தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

வெளியான தீர்ப்பில்,  'தமிழக அரசின் பத்து மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்த ஆளுநரின் செயல் சட்டப்படி தவறானது. இரண்டாவது முறையாக  மசோதா நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டபோது அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கிறார். இது சரியா? ஆளுநருக்கு வீட்டோ  அதிகாரம் இல்லை.  (மசோதாவை நிராகரிப்பது, மசோதாவைத் திரும்பப் பெறுவது அல்லது மசோதாவுக்கு தனது ஒப்புதலைத் தடுத்து நிறுத்துவது இந்தியக் குடியரசுத் தலைவரின் பொறுப்பாகும். மசோதா மீது ஜனாதிபதியின் தேர்வு 'வீட்டோ அதிகாரம்' என்று அழைக்கப்படுகிறது)

மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது பல்வேறு தீர்ப்புகளில் உள்ளன. பஞ்சாப் ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் ஏற்கனவே தெளிவான தீர்ப்பை கூறியுள்ளது. மசோதாக்களுக்கு உரிய நேரத்தில் ஒப்புதல் அளிக்கும் முடிவை ஆளுநர் எடுக்க வேண்டும். மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைப்பதை ஏற்க முடியாது. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது திருப்பி அனுப்பி வைக்கும் முடிவை ஆளுநர்கள் ஒரு மாதத்திற்குள் எடுக்க வேண்டும்' என காலக்கெடு விதித்ததோடு, 'பதவி பிரமாணத்தின் படி ஆளுநர் செயல்பட வேண்டும். பத்து மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்த தமிழ்நாடு ஆளுநரின் முடிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்கிறது. அந்த பத்து மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாக  எடுத்துக்   கொள்ளப்படும்' என உச்சநீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி தீர்ப்பளித்துள்ளது.

சார்ந்த செய்திகள்