!["We are focusing on uplifting the social status of women" - Puducherry Governor Dr. Tamilisai Soundarajan's speech!](http://image.nakkheeran.in/cdn/farfuture/Wz0DJJ9jdRBrEESaOBOMUss4Tl7lpK8CRCxBu576hmw/1627221184/sites/default/files/inline-images/TAMIL8999.jpg)
இந்தியாவில் குழந்தையின்மைக் குறைபாடுகளுக்குத் தீர்வு காணுதல் குறித்த தேசிய அளவிலான இணையவழி கருத்தரங்கம் நடைபெற்றது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல ஆணையம் ஏற்பாடு செய்த இந்த கருத்தரங்கில் புதுச்சேரி துணைைநிலை ஆளுநர் (பொறுப்பு) டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர், "இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் குழந்தை இல்லாத தம்பதிகளை சமுதாயம் பலவீனமானவர்களாகப் பார்க்கிறது. அவர்களுக்கு பலரும் பலவிதமான மூட நம்பிக்கை ஆலோசனைகளை வழங்குகின்றனர். அறிவியல் பூர்வமான தீர்வுகளை நிபுணர்கள்தான் எடுத்துக் கூற வேண்டும்.
தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது என்றாலும் குறைந்த அளவிலான செயற்கைக் கருவூட்டல் சிகிச்சை முறையைப் பிரபலப்படுத்துவது அனைத்து பிரிவு பெண்களுக்கும் கருவூட்டல் சிகிச்சை கிடைக்க வழிவகுக்கும். கருவூட்டல் சிகிச்சை முறைக்கான செலவுகளைக் குறைக்க முயற்சி எடுக்க வேண்டும். குழந்தையின்மை குறையைப் போக்க ஆரோக்கியமான உணவு, வாழ்க்கை முறை, சுகாதார நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுதலின்படி பெண்கள் சமுதாய நிலையை உயர்த்துவதில் நாம் கவனம் செலுத்தி வருகிறோம்" என்று கூறினார்.
கருத்தரங்கில் பேசியவர்கள், "குழந்தையின்மைக்கான செயற்கை கருவூட்டல் சிகிச்சைக்கு அதிகம் செலவாகிறது. இதற்கான சிகிச்சைகளை 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தில் கொண்டு வந்தால் ஏழை தம்பதிகள் பலன் பெறுவார்கள்" என்றனர்.
"இது தொடர்பாக பிரதமரிடம், தெரிவித்தால் பலன் கிடைக்கும். அதற்கான முயற்சியை நான் மேற்கொள்வேன்" என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தெரிவித்தார்.