
உத்தர பிரதேசம் மாநிலம், பால்லியா மாவட்டத்தில் உள்ள ஜமுனா கோபால்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சோனு (30). இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் லாவண்யா (25, பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், சோனு கடந்த 9 மாதங்களாக ஒரு இளம்பெண்ணுடன் பழகி வந்துள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.
இதனையடுத்து, கணவரின் உறவை தெரிந்து கொண்ட லாவண்யா சோனுவை பலமுறை கண்டித்து வந்துள்ளார். அதுமட்டுமல்லாமல், சோனுவின் குடும்பத்தினர் முதற்கொண்டு சோனுவை கண்டித்துள்ளனர். ஆனால், சோனுவின் மறைமுக உறவு நீடித்துக் கொண்டே தான் இருந்துள்ளது. இதனால், சோனுவுக்கும் லாவண்யாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று முன் தினம் சோனு, தனது காதலியுடன் ஊர் சுற்றிப் பார்க்க ஒரு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சோனுவை அவரது மனைவி லாவண்யா செல்போன் மூலம் வீடியோ காலில் தொடர்பு கொண்டிருக்கிறார். வீடியோ காலை எடுத்த பின்பு சோனுவின் காரில் அந்த இளம்பெண் இருப்பதை பார்த்த லாவண்யா அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால், சோனுவுக்கும் லாவண்யாவுக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த சோனு, தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டுக்கொண்டார்.
இதில் அதிர்ச்சியடைந்த காரில் இருந்த அந்த இளம்பெண், அக்கம்பக்கத்தினரை உதவிக்காக அழைத்துள்ளார். உடனடியாக அங்கு வந்த சிலர், சோனுவை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர். அங்கு சோனுவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சோனு வரும் வழியிலேயே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.