![Supreme Court order to UP Government for Sambal Masjid Affair](http://image.nakkheeran.in/cdn/farfuture/RnZKBX3NB4enkOeXzwQIRmQ4vzV5FqMm6vNMXr-hSDM/1732946193/sites/default/files/inline-images/sambhalsups.jpg)
உத்தரப்பிரதேசம் மாநிலம் சம்பல் நகரில் உள்ள ஷாஹி ஜமா மசூதியை, இந்து கோயிலை இடித்து விட்டு மசூதி கட்டப்பட்டது எனக் கூறி சம்பலில் உள்ள உரிமையியல் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின் என்பவர் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் குழு ஒன்றை அமைத்து மசூதியை ஆய்வு செய்ய உத்தரவிட்டிருந்தது. அதன்படி நவம்பர் 19ஆம் தேதி உள்ளூர் போலீஸார் மற்றும் மசூதி நிர்வாகத்தினர் முன்னிலையில் மசூதியில் ஆய்வு செய்யப்பட்டது. அச்சமயத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இத்தகைய சூழலில் தான் பலத்த போலீஸ் பாதுகாப்போடு கடந்த 24ஆம் தேதி ஜமா மசூதிக்கு ஆய்வுக் குழு சென்றடைந்தது. அப்போது ஆய்வு செய்வதற்காக வந்த ஆய்வுக் குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் மீது கல் வீச்சு சம்பவம் நடந்தது. இந்த மோதலில் வாகனங்கள் எரிப்பு போன்ற பயங்கர வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். அதனை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவி வருவதால் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக சம்பல் தொகுதி சமாஜ்வாதி கட்சி எம்.பி ஜியா உர்ரஹ்மான் பர்க், சமாஜ்வாதி எம்.எல்.ஏ இக்பால் மஹ்மூத் மகன் சோஹைல் மஹ்மூத் உள்ளிட்ட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.
இதற்கிடையில், மசூதியில் நடத்தப்பட்ட ஆய்வு தான் கலவரத்துக்கு காரணம் என்றும் இந்த ஆய்வு உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மசூதி நிர்வாகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பான மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதி சஞ்சய் குமார் ஆகியோர் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மசூதி குறித்த கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், வன்முறையால் பாதிக்கப்பட்ட அப்பகுதியில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உ.பி அரசுக்கு உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.