Skip to main content

எம்.பி.யாக தேர்வாகியுள்ள செல்வகணபதி... புதுச்சேரி அரசியல் வரலாற்றில் பாஜக!

Published on 23/09/2021 | Edited on 23/09/2021

 

Selvaganapathi elected as MP ... BJP in Puducherry political history

 

புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினரான கோகுலகிருஷ்ணனின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 6ஆம் தேதி முடிவடைகிறது. அதற்காக புதிய மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு செய்வதற்காக அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் (22.09.2021) முடிவடைந்தது. இதுவரை 3 சுயேச்சைகள் மட்டுமே மனு தாக்கல் செய்துள்ளனர். ஆளுங்கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக இடையில் மாநிலங்களவை எம்.பி. பதவியை யாருக்குத் தருவது, பெறுவது என்பதில் போட்டி நிலவிவந்தது. பாஜக தலைமை நேரடியாக முதலமைச்சர் ரங்கசாமியிடம் பேசியதைத் தொடர்ந்து சுமுக உடன்பாடு ஏற்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து பாஜகவின் மாநிலங்களவை எம்.பி. வேட்பாளராக மாநிலப் பொருளாளரும், முன்னாள் நியமன எம்.எல்.ஏவுமான செல்வகணபதியை கட்சி மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று செல்வகணபதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரின் வேட்புமனுவை முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்ட அமைச்சர்களும், என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக எம்.எல்.ஏக்களும் பரிந்துரை செய்தனர். சட்டமன்றச் செயலாளர் முனுசாமியிடம் செல்வகணபதி வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், சாய். சரவணகுமார் மற்றும் எம்.எல்.ஏக்கள் உடனிருந்தனர்.

 

எதிர் தரப்பில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. பெரும்பான்மை பெற்றிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருப்பதால் செல்வகணபதி போட்டியின்றி தேர்வாகிறார். வேட்பு மனுக்கள் நாளை பரிசீலனை செய்யப்படுகிறது. இதில் சுயேச்சையாக தாக்கல் செய்யப்பட்டவர்களின் மனுக்கள், எம்.எல்.ஏக்கள் பரிந்துரை இல்லாததால் தள்ளுபடி செய்யப்படும். 27ஆம் தேதி வேட்புமனுக்கள் வாபஸ் பெற இறுதி நாளாகும். அன்றைய தினம் புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினராக செல்வகணபதி போட்டியின்றி தேர்வானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

 

Selvaganapathi elected as MP ... BJP in Puducherry political history

 

புதுச்சேரியில் மக்களவை, மாநிலங்களவை தேர்தலில் பாஜகவைச் சேர்ந்தவர்கள் இதுவரை வெற்றிபெற்றதில்லை. ஆனால் பலமுறை மக்களவைத் தேர்தலில் பாஜக போட்டியிட்டுள்ளது. புதுச்சேரி அரசியல் வரலாற்றில் முதன்முறையாக மாநிலங்களவை எம்.பி.யாக பாஜகவைச் சேர்ந்தவர் தேர்வாகிறார். இதன்மூலம் செல்வகணபதி புதுவையின் முதல் பாஜக எம்.பி. ஆகிறார். இதனிடையே புதுச்சேரி மாநிலம், ஏனாம் பிராந்தியத்தைச் சேர்ந்த மல்லாடி கிருஷ்ணாராவ் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமிக்கு மிக நெருக்கமாக இருந்தார். ஆனால் அவர், காங்கிரஸ் ஆட்சியின் நிறைவுகாலத்தில் காங்கிரசிலிருந்து விலகி என்.ஆர்.காங்கிரசில் சேர்ந்தார்.

 

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாமல் விலகியிருந்த மல்லாடி கிருஷ்ணாராவ், ரங்கசாமி மூலம் மாநிலங்களவை உறுப்பினராகிவிடலாம் என கனவு கண்டார். எப்படியும் எம்.பி. ஆகிவிடுவோம் என்று எண்ணியிருந்த மல்லாடியின் கனவு பொய்யானது. ஆட்சியின் கடைசி நேரத்தில் கட்சி மாறிய மல்லாடி கிருஷ்ணாராவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்காததால், காங்கிரஸ் கட்சியினர் மகிழ்ச்சியடைந்து, காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பாக பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Next Story

வேட்பாளரை வசைபாடும் நிர்வாகிகள்; அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோவால் பரபரப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Argument to party officials with Vellore candidate AC Shanmugam

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நடந்து முடிந்த பின் சில இடங்களில் உட்கட்சி மோதல் உச்சத்துக்குச் சென்றுள்ளது. வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதி கட்சியின் நிறுவனர் ஏசி சண்முகம் போட்டியிட்டார். தமிழ்நாட்டில் பணமழை பொழிந்த சிலதொகுதிகளில் மிக முக்கியமானது வேலூர் நாடாளுமன்ற தொகுதி. வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய், ஒரு பூத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் என சுமார் 100 கோடிக்கு மேல் தேர்தல் களத்தில் செலவு செய்துள்ளாராம் ஏசி சண்முகம்.

பாஜக நிர்வாகிகள், பாமக நிர்வாகிகள் மாவட்டம் ஒன்றியம் நகர கிளை வரை லட்சங்களில் தேர்தல் பணிக்காக ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்கி உள்ளனர். இப்படி பணம் வாங்கியவர்கள் வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் பங்கு பிரிப்பதில் அடித்துக்கொண்டு இருக்கின்றனர். தேர்தலுக்கு முன்பே ஏ.சி.சண்முகத்திடம் பணம் வாங்குவதில் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து சில ஆடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. வாக்குப்பதிவு முடிவுக்கு பின்னர் இப்பொழுது ஏ.சி. சண்முகத்தை கடுமையான முறையில் விமர்சிக்கும் ஆடியோக்கள் வெளியாகி உள்ளன. அதன் தொடர்ச்சியாக தினமும் சண்டையும் அடித்துக் கொண்டும் சாலை மறியலிலும் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ-கஸ்பா பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்ததும் பணம் பங்கு பிரிப்பதில் பாஜகவினர் இடையே மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பாஜக வழக்கறிஞர் கோகுல் தரப்பினரை மற்றொரு தரப்பினர் தாக்கியதில் காயம் அடைந்த கோகுலை காவல்துறையினர் மீட்டு அழைத்து வந்த போது காவல்துறையினர் முன்னிலையில் மீண்டும் சரமாரியாக தாக்கினர். இதனைத் தொடர்ந்து ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்ட சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் கோகுல், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், மற்றும் ஸ்ரீ வர்ஷன் ஆகிய மூன்று பேரை போலீஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு ஒன்றியத்தில் பாஜக நிர்வாகிகள் பணம் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் புதிய நீதிக் கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஏ.சி. சண்முகத்தை ஆபாசமான வார்த்தைகளில் கொச்சையாகத் திட்டி பேசி உள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகி, பாஜக தரப்பை நெருக்கடிக்கு உள்ளாக்கியது. இதனால் வேலூர் மாவட்ட பாஜக தலைவர் மனோகரன்,  பேரணாம்பட்டு ஒன்றியத்தை மொத்தமாக களைத்து விட்டார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் யாரும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என அறிக்கை வெளியிட்டுள்ளார். இப்படி தேர்தல் முடிந்த பின்னரும் தினம் தினம் வேலூர் மாவட்ட பாஜகவில் அடிதடியும் சண்டையும் நடந்து வருகின்றது.

புதிய நீதிக் கட்சியின் குடியாத்தம் பகுதி நிர்வாகிகளும், வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சிலரும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான பணியில் ஏ.சி. சண்முகம் ஈடுபட்டுள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்