![ramnath kovind visits chennai in new air india one flight](http://image.nakkheeran.in/cdn/farfuture/vtIqA44prezLi8x902ygYUvXwforOV-mZYjYGqeBc54/1606195584/sites/default/files/inline-images/fdgcf.jpg)
குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோரின் பயணங்களுக்காக வாங்கப்பட்ட 'ஏர் இந்தியா ஒன்' விமானத்தின் முதல் பயணமாகக் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வந்தடைந்தார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பயணிப்பதற்காக அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து பி 777 ரகத்தைச் சேர்ந்த 2 விமானங்கள் வாங்கப்பட்டன. அமெரிக்க அதிபரின் தனி விமானத்தில் உள்ளது போன்ற சிறப்பான பாதுகாப்பு மற்றும் சொகுசு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட இந்த விமானங்கள், கடந்த அக்டோபர் மாதம் இந்தியா வந்தடைந்தன.
அலுவலகப் பணிகள், கூட்டங்கள் நடத்துவதற்கான அரங்குகள், படுக்கை அறை, சமையல் அறை, 2,000 பேர் சாப்பிடுவதற்குத் தேவையான உணவுப் பொருட்களை வைக்கும் கிடங்கு, செயற்கைக்கோள் தொலைப்பேசி, இணைய வசதி, மருத்துவ அறுவை சிகிச்சை அறை, மருத்துவக் குழுவினர் தங்கும் அறை, பாதுகாப்பு வீரர்கள் தங்கும் அறை, முக்கிய நபர்கள் தங்கும் அறை உள்ளிட்ட சகல வசதிகளோடும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானங்கள் 8,400 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டது. இந்நிலையில், இவ்விமானம் இன்று தனது முதல் பயணத்தை மேற்கொண்டுள்ளது. இதில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சென்னை வந்தடைந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் அவர் திருப்பதி சென்று ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்கிறார்.