Skip to main content

குடியரசுத்தலைவர் காலில் விழ முயன்ற பெண் பொறியாளர் பணியிடைநீக்கம்

Published on 14/01/2023 | Edited on 14/01/2023

 

rajasthan woman engineer suspended president draupadi murmu issue 

 

குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு வளையத்தை மீறி ஒரு பெண் பொறியாளர், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் காலில் விழ முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது பாதுகாப்புக் குறைபாடு என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

 

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் நடந்த சாரண சாரணியர் இயக்கம் தொடர்பான ஒரு நிகழ்வில் கலந்துகொள்ள இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த ஜனவரி 4 ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொண்டார். அப்போது ராஜஸ்தான் அரசு சார்பில் உயர் அதிகாரிகள் அவரை விமானநிலையத்தில் வரவேற்றனர். இந்த வரவேற்பில் பங்கேற்ற அம்மாநில அரசின் பொது சுகாதாரத் துறை இளநிலை பொறியாளரான அம்பா சியோல் என்பவர் குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு வளையத்தை மீறி அவரது காலில் விழ முயன்றார். அதற்குள் சுதாரித்துக்கொண்ட குடியரசுத் தலைவரின் பாதுகாப்பு அதிகாரிகள் அந்தப் பெண் பொறியாளரைத் தடுத்து நிறுத்தினர். மேலும், அவர் உடனடியாக அப்பகுதி காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

 

இந்நிலையில், பெண் பொறியாளர் அம்பா சியோலை ராஜஸ்தான் அரசு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் குடியரசுத் தலைவரின் வருகையின்போது ஏற்பட்ட இந்த பாதுகாப்புக் குறைபாடு பற்றி ராஜஸ்தான் மாநில அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்