
ஒரு பெண்ணின் மார்பகங்களைப் பிடிப்பது பாலியல் வன்கொடுமையோ அல்லது பாலியல் வன்கொடுமை முயற்சி குற்றச்சாட்டுகள் ஆகாது என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
12 வயதுடைய சிறுமி ஒருவரை, குற்றம் சாட்டப்பட்ட பவன் மற்றும் ஆகாஷ் என்பவர்கள் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று சிறுமியின் மார்பகங்களைப் பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதில் ஆகாஷ், பெண் அணிந்திருந்த பைஜாமாவின் கயிற்றை அவிழ்த்ததாகக் கூறப்படுகிறது. உடனடியாக, அப்பகுதி மக்கள் அங்கு வந்தவுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து பவன் மற்றும் ஆகாஷ் மீது போக்சோ, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தங்களுக்கு எதிராக போடப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்த்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு பாலியல் வன்கொடுமை முயற்சிக்கு சமமாகாது என்றும், போக்சோ சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளுடன் சேர்த்து, ஐபிசி பிரிவு 354 மற்றும் 354-பி ஆகியவற்றின் விதிகளின் கீழ் வர வேண்டும் என்றும் மனுவில் குறிப்பிட்டனர்.
இந்த வழக்கு நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘ஆகாஷ் மீதான குறிப்பிட்ட குற்றச்சாட்டு என்னவென்றால், சிறுமியை இழுத்துச் செல்ல முயன்று, அவரது பைஜாமாவின் கயிற்றை அவிழ்த்தார் என்பதே. குற்றம் சாட்டப்பட்டவரின் இந்த செயலால், பாதிக்கப்பட்டவர் நிர்வாணமாகிவிட்டார் என்று சாட்சிகள் கூறவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்டவருக்கு எதிராக பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக எந்த குற்றச்சாட்டும் இல்லை. ஒரு சிறுமியின் மார்பகங்களைப் பிடிப்பது, அவரின் ஆடைகளை கலைத்து இழுக்க முயற்சிப்பது பாலியல் வன்கொடுமையோ அல்லது பாலியல் வன்கொடுமை முயற்சி குற்றச்சாட்டுகளாகாது’ எனத் தெரிவித்து அவர்கள் மீது போடப்பட்ட பாலியல் வன்கொடுமை குற்றங்களில் இருந்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கை மாற்றி அமைக்க உத்தரவிட்டார்.