பெற்ற மகனையே விஷ ஊசி போட்டு கழுத்தை நெரித்து தாயும், தந்தையும் கொன்ற சம்பவம் மகாராஷ்டிராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் கோல்ஹாபூரில் வசித்து வரும் அருண் சக்காராம் (வயது 55) மற்றும் ரேகா (வயது 40). இவர்களின் மகனான அனிகேத் எனும் அபிஜீத் அருணின் உடல் அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் அங்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் அனிகேத்தின் பெற்றோரே அவரை விஷ ஊசி போட்டு கழுத்தை நெரித்து கொன்றுள்ளது தெரிய வந்தது. 24 வயதான அனிகேத் வீட்டில் தொடர்ந்து பணம் கேட்டு வந்த நிலையில், பெற்றோரும் பணம் தந்துள்ளனர். ஒரு கட்டத்திற்கு பிறகு அவர்கள் பணம் தருவதை குறைத்த நிலையில், அனிகேத் பணம் கேட்டு தொடர்ந்து பிரச்சனை செய்துள்ளார்.
இதனால் மனமுடைந்த பெற்றோர் அனிகேத்தை கொன்றுள்ளனர். அப்பகுதியில் வசிக்கும் 3 பேரின் உதவியுடன் விஷ ஊசி போட்டு கழுத்தை நெரித்து அருகிலுள்ள கிணற்றில் தூக்கி வீசியுள்ளனர். இந்த கொலைக்கு உதவிய சுராஜ் ராமசந்திரா (வயது 24), அவினாஷ் (வயது 22) மற்றும் அபிஜீத் (வயது 26) என அனைவரும் இளைஞர்கள் என்பதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் இந்த கொலை குறித்த முழு விபரத்தையும் கண்டறியும் பொருட்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.