
ஒடிசா ரயில் விபத்தில் தற்போதைய நிலவரப்படி 261 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 800 பேர் இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு செய்துள்ளதாகவும் சென்னையைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் இந்த ரயிலில் வந்ததாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில் 900க்கும் மேற்பட்டோர் இதுவரை காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
சம்பவம் நடந்த இடத்தை ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். இதையடுத்து சம்பவம் நிகழ்ந்த பகுதிக்கு ராணுவ ஹெலிகாப்டரில் சென்ற பிரதமர் மோடி மீட்புப் பணிகளை பார்வையிட்டார். இந்திய அளவில் மட்டுமல்லாது உலக அளவில் இருந்தும் பல்வேறு தலைவர்கள் இந்த விபத்து சம்பவத்திற்கு தங்களது வேதனைகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவரும், முன்னாள் ரயில்வே துறை அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ் இந்த விபத்து குறித்து தெரிவிக்கையில், "அலட்சியமே இந்த ரயில் விபத்துக்கு காரணம். உயர்மட்ட விசாரணை நடத்தி இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மிகப் பெரிய அலட்சியம் தான் இந்த கோர விபத்து நடைபெற்றதற்கு காரணமாக அமைந்துள்ளது. ரயில்வே துறையை சீரழித்துவிட்டார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.