Skip to main content

 கிரண்பேடி கேட்ட தடை -  உச்சநீதிமன்றம் நிராகரிப்பு! 

Published on 05/06/2019 | Edited on 05/06/2019

 

புதுச்சேரி அரசை பொறுத்தவரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் என லஷ்மி நாராயணன் எம்.எல்.ஏ தொடர்ந்த வழக்குகளில் உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தெரிவித்திருந்தது. ஆனால் மத்திய அரசு துணை நிலை ஆளுநருக்கு வழங்கிய அதிகாரம் ரத்து செய்யும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரி கிரண்பேடிக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சகம்  உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தது. 

 

k

 

இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  கிரண்பேடியின்  கோரிக்கையை நிராகரித்ததுடன் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில் 7 -ஆம் தேதி கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் கவர்னர் பங்கேற்று ஆலோசனை  சொல்லலாம். அதேசமயம்  திட்டங்களை கவர்னரே செயல்படுத்த கூடாது என்றும், இந்த வழக்கில் முதல்வரையும் எதிர் மனுதாரராக சேர்க்கவும்  நீதிமன்றம் நோட்டீஸ் வினியோகித்துள்ளது.  மேலும் வழக்கை வரும் 21-ஆம் தேதி ஒத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

இந்நிலையில் இந்த உத்தரவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, " மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் எனும் உத்தரவிற்கு இடைக்கால தடைபெறும் கிரண்பேடியின் முயற்சி வெற்றி பெறவில்லை.  


 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து புதுச்சேரி  துணைநிலை ஆளுநர் கிரண்பேடி  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு தடைவிதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.  உச்சநீதிமன்றத்தில் வழக்கு  விசாரணைக்கு  வந்தபோது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைக்க முடியாது எனவும்,  மேலும் முதல்வர் அந்த வழக்கில் பிரதிவாதியாக சேர்க்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் முயற்சி வெற்றி பெறவில்லை.  உச்சநீதிமன்ற உத்தரவு ஜனநாயகத்தை நிலை நிறுத்தியுள்ளது" என்று கூறினார்.
 

சார்ந்த செய்திகள்