Skip to main content

“அணிக்குத் திரும்ப ஓராண்டு ஆகலாம்” - ரிஷப் பந்த் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் விளக்கம்

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

"It may take a year to return to the team" doctors explain about Rishabh Pant's health

 

பந்த் முழு உடற்தகுதியுடன் மீண்டும் அணியில் இணைந்து விளையாட ஒரு ஆண்டு ஆகலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் தனது தாயினை பார்ப்பதற்காக காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டது. இதனால் கடுமையாக காயமடைந்த பந்த் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

 

நேற்று இது குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரிகள், “பந்த் சாலையில் குறிப்பிட்ட வேகத்திற்கு அதிகமாகச் செல்லவில்லை. அவர் மது அருந்திவிட்டும் வாகனத்தை இயக்கவில்லை. அவர் மது அருந்தி இருந்தால் டெல்லியிலிருந்து வாகனத்தை இயக்கிக் கொண்டு வந்திருக்க முடியாது. பந்த் குடிக்கவில்லை என்பதை டெல்லியிலிருந்து விபத்து நடந்த இடம் வரை இருக்கும் சிசிடிவி காட்சிகள் உறுதி செய்கின்றன” எனக் கூறினர்.

 

மேலும் ரிஷப் பந்த்தினை மருத்துவமனையில் நேரடியாக சந்தித்துப் பேசிய டெல்லி கிரிக்கெட் அசோசியேட் டைரக்டர் ஷியாம் சர்மா அவர் குறித்து தகவல்களைக் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, ‘பந்த் குணமாகி வருகிறார். பிசிசிஐ அவரை வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற வைக்க ஏற்பாடு செய்து வருகிறது என்றும் சாலையில் இருந்த பள்ளத்தில் விடாமல் காரை திருப்ப முற்பட்டபோது தான் விபத்து ஏற்பட்டது என ரிஷாப் பந்த் கூறியதாகவும்’ ஷியாம் சர்மா கூறியுள்ளார்.

 

பந்த்திற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் பந்த்-இன் உடல்நிலை குறித்து கூறியதாவது, “பந்த்தின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் மீண்டும் அணிக்குத் திரும்ப ஓராண்டு ஆகலாம். பந்த் ஓய்வெடுப்பதற்கான போதுமான நேரம் கிடைக்க வேண்டும். காயங்கள் காரணமாக பந்த் இன்னும் வலியுடன்தான் இருக்கிறார். ஆனாலும் பந்த் தன்னைப் பார்க்க வருபர்களிடம் பேசுகிறார். இது அவரது காயங்கள் குணமாகும் திறனைக் குறைக்கிறது. பந்த் நன்றாக ஓய்வெடுத்தால் விரைவில் குணமடையலாம்” எனத் தெரிவித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரோஹித் சொன்னதைச் செய்த பண்ட்; கலக்கிய டெல்லி அணி!

Published on 25/04/2024 | Edited on 26/04/2024

 

gt vs dc pant delivered the rohit wish delhi capitals victory

ஐபிஎல் 2024இன் 40 ஆவது லீக் ஆட்டம் டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கிடையே நேற்று (ஏப்.24) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய டெல்லி அணிக்கு ஜேக் ஃப்ரேசரின் தொடக்க அதிரடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 23 ரன்களில் வெளியேறினார். புதுமையான முயற்சியாக அக்சர் 3ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கினார். அடுத்து பிரித்வி பவர்பிளேயிலே 11 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த சாய் ஹோப்பும், டெல்லி அணியின் ஹோப்பை போக்கும் வகையில் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். 44-3 என்று மோசமான நிலையில் இருந்த அணியை அக்சருடன் இணைந்து மீட்டார் கேப்டன் பண்ட். பரீட்சார்த்த முயற்சியைப் பயன்படுத்திக் கொண்ட அக்சர் சிறப்பாக விளையாடினார்.

பண்ட்டுக்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்த அக்சர் அதிரடியாக 43 பந்துகளில் 5 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிக்சர்களில் கலக்கிய பண்ட் 8 சிக்சர்கள், 5 பவுண்டரிகளுடன் 43 பந்துகளில் 88 ரன்கள் குவித்தார். முத்தாய்ப்பாக மொஹித் சர்மாவின் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்சர்கள் உட்பட 4 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி சேர்த்து அந்த ஓவரில் மட்டும் 30 ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக வழக்கம் போல கலக்கிய ஸ்டப்ஸ் 7 பந்துகளில் 2 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் எடுக்க 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் மட்டும் இழந்து 224 ரன்கள் குவித்தது. சந்தீப் வாரியர் 15 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்த, மற்ற பவுலர்கள் சொதப்பினர். குறிப்பாக மொஹித் சர்மா 4 ஓவர்களில் 73 ரன்களைக் கொடுத்து ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக ரன்கள் கொடுத்தவர் என்கிற மோசமான சாதனையைப் படைத்தார்.

gt vs dc pant delivered the rohit wish delhi capitals victory

பின்னர் 225 ரன்கள் என்கிற கடின இலக்கை துரத்திய குஜராத் அணிக்கு கேப்டன் கில் 6 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்சன் எப்போதும் போல பொறுப்பாக ஆடினார். 2ஆவது விக்கெட்டுகு சஹாவும், சாயும் சேர்ந்து 82 ரன்கள் எடுக்க சஹா 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சில பந்துகளில் நன்றாக ஆடி அரை சதம் கடந்த சுதர்சனும் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஒமர்சாய் 1, ஷாருக்கான் 8, டெவாட்டியா 4 என விக்கெட்டுகள் சீட்டுக்கட்டு போல சரிந்தது.

பின்னர் வந்த மில்லர் தன் அதிரடியை ஆரம்பித்தார். சிறப்பாக ஆடி அணியை வெற்றி பெற வைப்பார் மில்லர் என்று ரசிகர்கள் எதிரபார்த்த வேளையில், 23 பந்துகளில் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் ரஷித் 23, கிஷோர் 13 முயன்றும் குஜராத் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 220 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி த்ரில் வெற்றி பெற்றது. பண்ட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் டெல்லி அணி 8 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பண்ட்டின் இந்த அதிரடி பேட்டிங் ரோஹித்தின் கூற்றை நிரூபித்துள்ளது. இங்கிலாந்து வீரர் பென் டக்கெட், இங்கிலாந்தின் பேஸ்பால் ஆட்டத்தால் தான் ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆடினார் என்று கூறியதற்கு பதிலளிக்கும் வகையில் ரோஹித், ரிஷப் பண்ட்டின் அதிரடியைப் பார்த்ததில்லையா என்று கூறியிருந்தார். அந்தக் கூற்றை நிரூபிக்கும் வகையில் பண்ட் நேற்றைய போட்டியில் ஆடியுள்ளார். இதன் மூலம் உலகக்கோப்பை டி20 அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் போட்டியில் பண்ட் முன்னிலை வகிக்கிறார் என கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பெங்களூருவுக்கு மட்டும் மற்ற அணிகளின் வெற்றியைப் பொறுத்து பிளே ஆஃப் வாய்ப்பு உள்ளது. மற்ற அனைத்து அணிகளுக்கும் பிளே மீதமிருக்கும் போட்டிகளை வென்றால் பிளே ஆஃப் வாய்ப்பு இருப்பதால், ஐ.பி.எல் தொடர் மேலும் சுவாரசியமடைந்துள்ளது.

Next Story

ஒரு ஆட்டம், இவ்வளவு சாதனைகளா? கலக்கிய கொல்கத்தா அணி!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
dc vs kkr record break victory for kolkata

ஐபிஎல் 2024இன் 16ஆவது லீக் ஆட்டம் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணிக்கு சால்ட், நரைன் பேட்டிங்கின் அதிரடியால் டெல்லி அணி நிலை குலைந்தது. விசாகப்பட்டினம் மைதானத்தில் ரசிகர்கள் அனைவரும் விண்ணைப் பார்த்தபடியே இருந்தனர் என்றால் அது மிகையாகாது. அந்த அளவுக்கு கொல்கத்தாவின் பேட்டிங்கில் சிக்சர்களும், பவுண்டரிகளும் பறக்கத் தொடங்கின.

2023 இல் நரைன் துவக்க ஆட்டக்காரராக மூன்று போட்டிகளில் களமிறக்கப்பட்டார். ஆனால், மூன்று போட்டிகளிலும் சொதப்ப, அந்த முடிவு கைவிடப்பட்டது. ஆனால், இந்த முறை கம்பிரின் துணிவான முடிவால் மீண்டும் நரைன் மீது நம்பிக்கை வைத்து துவக்க வீரராக களமிறங்க வைத்தார். ஆனால் முதல் போட்டியில் 2 ரன்னில் அவுட் ஆகி ஏமாற்றினார். இருந்தாலும் மீண்டும் நம்பிக்கை வைத்து அவரையே களமிறக்க முடிவு செய்தார் காம்பிர். அந்த முடிவுக்கு கைமேல் பலன் கிடைத்தது. பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் 22 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார்.

நேற்றைய ஆட்டத்தில் முத்தாய்ப்பாக 39 பந்துகளில் 85 ரன்கள் குவித்து கொல்கத்தா அணியின் இமாலய ரன் குவிப்புக்கு உறுதுணையாக இருந்தார். அவருக்கு துணையாக ரகுவன்சி 27 பந்துகளில் 54 ரன்களும், ரசல் 41 ரன்கள், ரிங்குவின் 26 ரன்கள் என அதிரடி கூட்டணியின் அசர வைத்த பேட்டிங்கால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்தது.

பின்னர், 273 என்ற இமாலய இலக்கை துரத்திய டெல்லி அணி 17.2 ஓவர்களில் 166 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக ஸ்டப்ஸ் 32 பந்துகளில் 54 ரன்களும், கேப்டன் பண்ட் 25 பந்துகளில் 55 ரன்களும் எடுத்தனர். இதன் மூலம் கொல்கத்தா அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் ரன்ரேட் தாறுமாறாக எகிறி +2.518 என முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.

இந்த ஆட்டத்தில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. ஐபிஎல் போட்டிகளில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோராக 272 பதிவாகியுள்ளது. டெல்லி அணிக்கு எதிராக அதிகபட்சமாக 18 சிக்சர்கள் இந்த ஆட்டத்தில் அடிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக உலக டி20 வரலாற்றில் ஐந்தாவது அதிகபட்ச ஸ்கோராகும். இந்த ஆட்டத்தில் ஆட்டநாயகனாக நரைன் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் 14 ஆவது முறையாக ஆட்டநாயகன் விருதை பெற்றுள்ளார். இதன் மூலம் கொல்கத்தா சார்பில் அதிக ஆட்டநாயகன் விருது பெற்ற ரசலை சமன் செய்துள்ளார்.