![Flooding due to torrential rains; Kerala is reeling again](http://image.nakkheeran.in/cdn/farfuture/pWJXl_5k5eExiM6DeYTalv3Eovyx315HOswnCQM_dAs/1688739797/sites/default/files/inline-images/a130.jpg)
கடந்த சில நாட்களாகவே கேரளாவில் கனமழை பெய்து வரும் நிலையில் பலத்த காற்றும் வீசி வருகிறது. அதேபோல் கடல் பகுதிகளில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் கடலோரப் பகுதிகளில் மக்கள் மற்றும் மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் எனக் கேரள அரசு சார்பில் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளால் பலியானவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்பொழுது கேரளா அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இதுவரை கேரளாவில் மழை வெள்ளத்தால் 11 பேர் உயிரிழந்துள்ளனர். கண்ணூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு இருக்கும் மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். அதேபோல் இடுக்கியிலும் கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பொழியும் என்பதால் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது. பம்பா மற்றும் மணிமாலா ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.