ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ காவலில் இருந்த ப.சிதம்பரத்தை நேற்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் சிபிஐ அதிகாரிகள். அப்போது சிபிஐ தரப்பில் நீதிமன்ற காவலில் ப.சிதம்பரத்தை திகார் சிறைக்கு அனுப்ப கோரிக்கை விடுத்தனர். இதனை ஏற்ற சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி, ப.சிதம்பரத்தை 14 நாட்கள் (செப்டம்பர் 19 ஆம் தேதி வரை) நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
![cbi reaches delhi highcourt in aircel maxis case](http://image.nakkheeran.in/cdn/farfuture/H1yS5OLLFVGsIQmZHy1USBNzPGgpGcpRn21KW4IU6Cw/1567755612/sites/default/files/inline-images/karti-p-chidambaram-collage-std_4.jpg)
இந்நிலையில் மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடியை முதலீடு செய்ய உதவியதாக சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீது தொடுக்கப்பட்டுள்ள மற்றொரு வழக்கில் அவர்கள் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி நேற்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி சிபிஐ, அமலாக்கத்துறை டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளளது.