கிருஷ்ணகிரி அருகே சுமார் 13 வயது மதிக்கத்தக்க சிறுமி அங்குள்ள ஒரு அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு மாதம் காலமாக அந்த மாணவி பள்ளிக்கு வரவில்லை. உடனே இதுகுறித்து அந்த பள்ளியின் தலைமையாசிரியர் எதற்காக அந்த மாணவி பள்ளி வரவில்லை என்று சக மாணவிகளிடம் விசாரித்துள்ளார். அவர்களிடம் சரியான பதில் கிடைக்காததால், தலைமையாசிரியர் உடனே அந்த மாணவியை தேடி வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தினார்.
அப்போது சிறுமியின் தாயார், “எனது மகள் கர்ப்பமாக இருந்துள்ளார். அதனால் அவருக்கு கருகலைப்பு செய்வதற்காக மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளோம்” என்றார். இந்த தகவலை கேட்டு தலைமை ஆசிரியர் அதிர்ச்சியடைந்தார். மேலும், மாணவியின் கர்ப்பத்திற்கு அவர் பயின்ற பள்ளியில் பணிபுரியும் 2 பட்டதாரி ஆசிரியர்களும், ஒரு இடைநிலை ஆசிரியரும் தான் காரணம் என்றும், மூன்று பேரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்றும் தெரியவந்தது. உடனே இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவிக்க தாயாரை தலைமையாசிரியர் அறிவுறுத்தியுள்ளார்.
அதன்பேரில் சிறுமியின் தாயார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் அதிகாரிகள் அந்த மாணவியை அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மாணவி பயின்ற அரசுப் பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் பாரூரை சேர்ந்த சின்னசாமி(57). மத்தூரைச் சேர்ந்த ஆறுமுகம்(45), வேலம்பட்டியைச் சேர்ந்த பிரகாஷ்(37) ஆகிய 3 பேரும் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும், இதன் காரணமாக மாணவி கர்ப்பமானதும் உறுதியானது.
இதுதொடர்பாக பர்கூர் டி.எஸ்.பி. தலைமையில் அனைத்து மகளிர் போலீசார் அரசுப் பள்ளி ஆசிரியர்களான 3 பேரையும் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் ஏற்கனவே ஒரு தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாமில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போலி என்.சி.சி. பயிற்சியாளர், பள்ளி தாளாளர் உள்பட 14 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியுள்ளாகியது. இந்த நிலையில் கிருஷ்ணகிரி அருகே அரசுப் பள்ளியில் பயின்ற 8-ம் வகுப்பு மாணவியை 3 ஆசிரியர்களே பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.