கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற எம்எல்ஏக்கள் 13 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததை அடுத்து குமாரசாமியின் ஆளும் அரசு கவிழும் நிலையில் உள்ளது.

எம்.எல்.ஏ க்களின் ராஜினாமா கடிதம் முறைப்படி வழங்கப்படாததால், அதில் 8 பேரின் ராஜினாமாவை ஏற்க முடியாது என்றும், மீதமுள்ள 5 பேர் இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் சபாநாயகர் அறிவித்தார். இதனை தொடர்ந்து மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ள ராஜினாமா செய்த எம்.எல்.ஏ க்கள் சபாநாயகரின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில் கர்நாடகா காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான சிவக்குமார், எம்.எல்.ஏ க்களை பார்க்க மும்பை சென்றார். ஆனால் அவர் எம்.எல்.ஏ க்கள் சந்திக்கவிடாமல் ஹோட்டல் வாசலிலேயே காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். இதனையடுத்து அங்கேயே அவர் காத்திருந்த நிலையில் காவலர்கள் அவரை கைது செய்துள்ளனர். மேலும் அங்கு கட்சி தொண்டர்கள் திரண்டதால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த ஹோட்டலை சுற்றி போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.