பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல் மிரள வைத்திருக்கிறது. இந்தியாவின் இந்த அதிரடித் தாக்குதலை சர்வதேச நாடுகள் உற்று கவனிக்கத் துவங்கியுள்ளன. அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையும் வெளியுறவுத் துறையும் இணைந்து அவசர ஆலோசனை நடத்தியிருக்கிறது.
இந்த நிலையில், பாகிஸ்தான் - இந்தியா எல்லையில் தொடர்ந்து பதற்றம் சூழ்ந்து வருவதால் இரண்டு நாடுகளுக்கும் இடையே யுத்தம் வெடிக்குமோ என்கிற அச்சம் உருவாகி வருகிறது.
இதனால், பாகிஸ்தானில் வெளியுறவுத்துறை அமைச்சகமும், பாதுகாப்புத்துறை அமைச்சகமும் அவசர ஆலோசனை நடத்தியதையடுத்து தனது ராணுவத்தை தயார்படுத்தி வருகிறார் பாக் பிரதமர் இம்ரான்கான். மேலும், இன்று இரவு சில முக்கிய முடிவுகளை பாகிஸ்தான் எடுக்கலாம் என்கிற செய்திகளும் கசிகின்றன.
இந்த நிலையில், இரண்டாவது சர்ஜிக்கல் தாக்குதலை இந்தியா தொடங்குமோ ? என்கிற விவாதங்கள் சர்வதேச அளவில் எதிரொலிக்கின்றன.
இந்தச் சூழலில், இந்தியா - பாகிஸ்தானின் ராணுவ வலிமை குறித்து ஒரு கண்ணோட்டம் :
இந்தியா- பாகிஸ்தான் நாடுகளின் ஆயுதங்கள் மற்றும் ராணுவ வலிமை பற்றி, அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள சர்வதேச ஆய்வுகள் மையத்தின் தகவல்களை ஆராய்ந்த போது பல புள்ளி விபரங்கள் கிடைத்தன.
இந்தியாவில் 5,000 கி.மீ. முதல் 9,000 கி.மீ. வரை பாயும் அக்னி -3 ரகங்கள் உள்பட 9 வகையான ஏவுகணைகள் இருக்கின்றன.
பாகிஸ்தானின் உள்ள ஏவுகணைகள் சீன நாட்டின் உதவியுடன் உருவாக்கப்பட்டவை. இவைகள், இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும் சென்றடைய கூடியதாகவும், குறுகிய அளவிலான ஆயுதங்களை சுமந்து செல்லக்கூடியதாகவும் உள்ளன. ஆனால், அந்த வகையில் 2 ஏவுகணைகள் மட்டுமே வைத்திருக்கிறது பாகிஸ்தான்.
அணு ஆயுதங்களை ஒப்பிட்டளவில் பார்க்கும் போது இந்தியாவிடம் 130-140 ஆயுதங்களும், பாகிஸ்தானிடம் 140 முதல் 150 அணு ஆயுதங்களும் இருப்பதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
இந்திய ராணுவம் 10 லட்சத்து 20 ஆயிரம் ராணுவ வீரர்களை பெற்றிருக்கிறாது . மேலும், 3565 போர் டாங்கிகளை வைத்திருக்கின்றது. தவிர, 3 ஆயிரத்து 100 காலாட்படை போர் வாகனங்கள், 9 ஆயிரத்து 719 பீரங்கிகள், 336 கவச வாகனங்களை வைத்திருக்கிறது இந்திய பாதுகாப்புத்துறை.
பாகிஸ்தான் ராணுவத்தை எடுத்துக்கொண்டால், 5,60,000 போர்வீரர்கள், 2496 டாங்கிகள், 1605 கவச வாகனங்கள், 4472 பீரங்கிகள், 375 தானியங்கி பீரங்கிகள் மட்டுமே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, 1 லட்சத்து 27 ஆயிரத்து 200 பணியாளர்களும், 814 போர் விமானங்களும் இந்தியா விமானப்படையிடம் இருக்கிறது.
ஆனால், 425 போர் விமானங்களை மட்டுமே கொண்டுள்ளது பாகிஸ்தான். இதில் சீன நாட்டின் எஃப். என்.ஜி. - 7 மற்றும் அமெரிக்க நாட்டின் எப்-16 சபோர் ரக விமானங்கள் மட்டும்தான் ஸ்பெசல் ! அதே சமயம், வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு விமானங்கள் 7 இருக்கின்றன. இந்தியாவிடமோ இவைகள் 4 தான் உள்ளது.
இந்திய கடற்படையிடம் 16 நீர்மூழ்கிக் கப்பல்களும் , 14 ஆழத்துளைத்து அழிக்கும் கப்பல்களும், 13 போர்க்கப்பல்களும், 106 கடற்கரை ரோந்து போர் கப்பல்களும், 75 அதி திறன் கொண்ட போர் விமானங்களும் இருக்கின்றன. கடற்படை வீரர்களை கணக்கிட்டால் 67 ஆயிரத்து 700 வீரர்களை வைத்திருக்கிறது இந்தியா.
ஆனால், பாகிஸ்தானின் கடற்பரப்பு மிக குறுகிய எல்லைகளை கொண்டது. அந்த வகையில் 17 கடற்கரை ரோந்து கப்பல்களையும், 8 நீர்மூழ்கிக் கப்பல்களையும் , 9 போர்கப்பல்களையும் , போர் திறன் கொண்ட 8 விமானங்களையும் கொண்டுள்ளது பாகிஸ்தான்.
இரு நாடுகளையும் ஒப்பிடும் போது, இந்தியாவை விட பாகிஸ்தானின் ராணுவ வலிமை குறைவுதான். சர்வதேச அளவில் ராணுவ வலிமையில் 4-வது ரேங்கில் இந்தியாவும் , 17-வது ரேங்கிலும் பாகிஸ்தானும் இருப்பது குறிப்பிடத் தக்கது.