Skip to main content

“திருமா பேசினால் மட்டும் உங்களுக்கு ஏன் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது” - நாஞ்சில் சம்பத் கேள்வி!

Published on 09/01/2021 | Edited on 09/01/2021

 

jl

 

சென்னையில் நடைபெற்ற திருமாவளவனுக்கு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட நாஞ்சில் சம்பத், நடப்பு அரசியல் தொடர்பாக பேசினார். அவரின் பேச்சு வருமாறு, " நினைத்ததெல்லாம் பேசுவதற்கு தற்போது நேரமில்லை. இந்த நிகழ்ச்சிக்கு நான் வன்னி அரசால் அழைக்கப்பட்டபோது இந்த நிகழ்ச்சிக்கு நான் வர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். யாரும் செய்ய முடியாத விஷயங்களைச் செய்பவர்கள் ‘பெரியவர்கள்’ என்று அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் தமிழக அரசியலில் செய்ய முடியாத பல செயல்களைத் தொடர்ந்து செய்து வருபவர் திருமாவளவன். செயற்கறிய செயலைச் செய்திருக்கின்ற அவரை நான் பாராட்டினால் என்னையும் நான் புதுப்பித்துகொள்ள முடியும் என்கிற சுயநலத்தால் நான் இங்கே அவரை பாராட்ட வந்துள்ளேன். தொல்.திருமாவளவனுடைய ஒவ்வொரு நடவடிக்கைகளையும் ஒரு பார்வையாளனாக நான் பார்த்து வருகிறேன். மனுநீதிக்கு எதிராக அவர் சொன்னதை வைத்து அவரைச் சிதைத்துவிடலாம் என்று சிலபேர் நினைத்தபோது, நான் ஒரு ஊடகத்துக்கு சொன்னேன், ‘திருமா தோண்டினால் தங்கம், சீண்டினால் சிங்கம்’ என்றேன். அதில் எப்போதும் மாற்றமில்லை. திருமா தொடமுடியாத உயரத்தில் இருக்கிறார் என்பதை அவர்களும் அறிவார்கள். 

 

திருமாவளவன், தூசிகள் தொடமுடியாத வானம். ஆனால் அவரை அவமரியாதை செய்ய வேண்டும் என்பதற்காக இந்த பிரச்சனைகளைக் கையில் எடுத்தார்கள். அவர்கள் அதில் தோல்வி அடைந்தார்கள். இன்று கலைஞர் இல்லை, ஜெயலலிதா இல்லை என்பதற்காக பாசிசத்தை இங்கே பரப்ப, காலில்லாத கயவர்கள் எல்லாம் இன்றைக்கு ஆட்சி அதிகாரம் நம்மிடம் இருக்கிறது என்று முயன்று பார்க்கிறார்கள். இதனை அரசியல் ரீதியாக சொல்கிறேன், இதனை எதிர்க்கிற ஆற்றல் ஒருவருக்குப் பரிபூரணமாக இருக்கிறது என்றால் அது திருமாவளவனுக்கு மட்டும்தான் இருக்கிறது. ஆகவே அதில் அவர் சமரசம் செய்துகொள்ளவில்லை. எப்போதும் அவர் அதற்கு முயல மாட்டார் என்பதைக் கூட நம்மால் உறுதியாக சொல்ல முடியும். மாயாவதி, விபி.சிங் பெற்ற இந்த விருதை தற்போது எங்கள் திருமாவளவன் பெற்றுள்ளார். அந்த வகையில் ஒரு புதிய அரசியல் வரலாற்றை அவர் படைத்துள்ளார் என்றால் அது மிகையல்ல. அவர் தமிழகத்துக்கும் மட்டுமான தலைவர் இல்லை, ஒட்டுமொத்த இந்திய தேசத்துக்கான தலைவராக தன்னை அவர் தயார்படுத்திக்கொண்டுள்ளார். அவரின் பயணம் தற்போது முழுமூச்சில் ஆரம்பித்துள்ளதாகவே கருதுகிறேன்.

 

இன்றைக்கு கடவுள் முருகளை அடிப்படையாகக் கொண்டு சிலர் நாடகம் நடத்துகிறார்கள். அவர் எங்களை ஏற்றுக்கொண்டாலும், உங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பதை அவர்கள் எப்போது புரிந்துகொள்வார்கள் என்று தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது முருகனைப் பற்றி தெரியுமா? பச்சை வேட்டி கட்டி, காவி சட்டை போட்டு ஊடக வெளிச்சத்தில் உயிர்வாழ பார்க்கிறீர்களா? இது உங்களுக்கே மலிவாக தெரியவில்லையா? ஊடகம் உங்களுக்கு எப்போது ஒத்துழைக்க ஆரம்பித்துள்ளதோ அப்போதே உங்களுக்கு சனி பிடிக்க ஆரம்பித்துவிட்டது என்று அர்த்தம். உங்களின் கேந்திரம் நாக்பூர், அங்கேயே நீங்கள் தோல்வி அடைந்தீர்கள். தெலூங்கானாவில் உள்ளாட்சி தேர்தலில் அந்த மாநில முதல்வருக்கே தெரியாமல் தேர்தல் பிரச்சாரம் செய்ய தலைவர்கள் வருகிறார்கள், உள்துறை அமைச்சர் வருகிறார், ஆனால் தேர்தல் முடிவு என்ன. அவர்களால் வெற்றி பெற முடிந்ததா? எல்லா இடங்களிலும் தோற்றுக்கொண்டே வருகிறீர்கள். ஆனால் அது பத்திரிக்கை செய்திகளில் வருவதில்லை. எனவே வல்லாதிக்கத்திற்கு எதிராக மக்கள் அணிதிரண்டு வருகிறார்கள். திருமாவளவன் பேசினால் மட்டும் அவர்களுக்கு ஆத்திரம் வருகிறது என்றால் அவர் தலைவராகிவிட்டார் என்று அர்த்தம். எனவே அவரின் தோளுக்குத் தோள்கொடுக்க வேண்டிய கட்டாயம் நமக்கு உண்டு" என்றார்.

 

Next Story

இது கலாச்சார யுத்தம்; வெட்கி தலை குனியும் ஆளுநர்!

Next Story

“50 ரூபாய்க்கு சிங்கியடிச்ச ஜெய்ஷா...” - நாஞ்சில் சம்பத் தாக்கு

Published on 01/08/2023 | Edited on 01/08/2023

 

nanjil sampath interview about manipur issue and bjp

 

சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து மூத்த திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் பேட்டி கண்டோம். அப்போது அவர் நம்மிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அதில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்..

 

“மணிப்பூர் பிரச்சனை என்பது ஒரு இனப்படுகொலை. இரட்டை எஞ்சின் ஆட்சியின் தோல்வி. பெண்களை நிர்வாணப்படுத்தி, பாலியல் வன்புணர்வு செய்து, 80 நாட்கள் பல்வேறு கொடுமைகளை அங்கு நிகழ்த்திய பிறகும் பிரதமர் அங்கு நேரில் சென்று பார்க்கவில்லை. ஆனால், இந்த 80 நாட்களில் அவர் எட்டு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இதுவரை மக்களின் வரிப்பணத்திலிருந்து 400 கோடி ரூபாய் செலவழித்து 124 நாடுகளுக்கு அவர் பயணம் செய்திருக்கிறார். தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கு மட்டும்தான் இந்தப் பதவியை அவர் பயன்படுத்துகிறார். நாட்டு மக்களின் சுக துக்கங்களைத் தீர்மானிப்பதற்கு அவர் முன்வரவில்லை.

 

இந்திய வரலாற்றில் பாராளுமன்றத்துக்கு வராத பிரதமர், நரேந்திர மோடி மட்டும்தான். எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு அவர் பதில் சொல்ல வேண்டும். சபை இவ்வளவு நாட்கள் முடக்கப்பட்ட பிறகு, இப்போது சிபிஐ விசாரணை என்று பொய் சொல்கிறார்கள். போலீசாரிடமும் ராணுவத்தினரிடமும் இருக்கும் துப்பாக்கி, வன்முறையாளர்களிடம் வந்தது எப்படி? குறைந்தபட்சம் தன் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று கூட அந்த மாநில முதலமைச்சர் சொல்லவில்லை. அண்ணாமலையின் யாத்திரை முடியும்போது பாஜகவுக்கு தமிழ்நாட்டு வாக்காளர்கள் முடிவுரை எழுதி விடுவார்கள். மோடியின் சாதனைகள் என்ன?

 

இந்திய நாட்டின் முக்கியமான மொழிகளை ஆட்சி மொழியாக இவர்களால் அறிவிக்க முடியவில்லை. 1000 ரூபாய் செல்லாது என்று சொல்லிவிட்டு 2000 ரூபாயை அறிமுகப்படுத்தினார்கள். இந்தியப் பணத்துக்கு இன்று உலக அளவில் மரியாதை கிடையாது. பாராளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெறும். திமுகவை மிகப்பெரிய ஊழல் கட்சி என்கிறார் அமித்ஷா. அவருடைய மகன் ஜெய்ஷாவிடம் கேட்டால் ஊழல் என்றால் என்ன என்பது தெரிந்துவிடும். 50 ரூபாய்க்கு சிங்கி அடித்த ஜெய்ஷா இன்று 50 ஆயிரம் கோடிக்கு அதிபதியாக இருக்கிறார். கிரிக்கெட் சங்க பதவி அவருக்கு எப்படி கிடைத்தது?

 

ராகுல் காந்திக்கு சென்ற இடமெல்லாம் மக்களின் வரவேற்பு கிடைக்கிறது. இந்தியா கூட்டணியைப் பார்த்து பாஜக இன்று பயந்து போயிருக்கிறது. எந்தவித ஆசாபாசமும் இல்லாமல் இந்திய நாட்டின் நலனுக்காக காங்கிரஸ் கட்சி புதிய அவதாரம் எடுத்திருக்கிறது. அந்தக் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியைப் பிரதமராக்க வேண்டியது இந்த நாட்டின் கடமை. மோடிக்கு முடிவுரை எழுதுவதற்கு நாடு தயாராகி விட்டது. தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் தங்களால் வெல்ல முடியும் என்று பாஜகவால் சொல்ல முடியுமா? பிரதமருக்கு தக்காளி விலை என்னவென்று தெரியுமா? 

 

பல மாநிலங்கள் சேர்ந்தது தான் இந்தியா. ஆனால் மாநிலங்களே இருக்கக் கூடாது என்று பாஜக நினைக்கிறது. ஒரே நாடு, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு என்று கொண்டுவர நினைக்கிறார்கள். இதனால் இந்தியாவின் பன்முகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் கொண்டுவரும் நாளில் மக்கள் இவர்களுக்கு குழிதோண்டி விடுவார்கள். மத்தியப்பிரதேசத்தில் மக்கள் வாக்களித்தது காங்கிரஸ் கட்சிக்கு. ஆனால் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சிக்கு வந்தது. இவர்கள் இப்போது தமிழ்நாட்டில் நடத்துவது யாத்திரை அல்ல, உல்லாசப் பயணம். இதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்”.