Skip to main content

சசிகலா அரசியல் முழுக்கு! எந்தக் கட்சிக்கு லாபம்? -அதிரடி சர்வே முடிவுகள்!

Published on 15/03/2021 | Edited on 23/03/2021

 

ddd

 

"நான் அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன்' என சசிகலா அறிவித்தாலும், அவர் உண்மையிலேயே ஒதுங்குகிறாரா? அல்லது பாய்வதற்காகப் பதுங்குகிறாரா? என்பது புரியாமல் இருக்கிறார்கள் தமிழக மக்கள். "30 ஆண்டுகள் ஜெ.வின் நிழலாக இருந்து அரசியலில் ஆதிக்கம் செலுத்திய சசிகலாவின் அரசியல் துறவறம் பற்றி தமிழக மக்கள் என்ன நினைக்கிறார்கள்' என ஒரு பெரிய கருத்துக் கணிப்பைத் தமிழகம் முழுவதும் நக்கீரன் நடத்தியது.

 

சசிகலா ஒதுங்கியது ஏன்?
சசிகலா மீண்டும் அரசியலுக்கு வருவாரா?
மீண்டும் வந்தால் அ.தி.மு.க.வை வசப்படுத்துவாரா?
சசிகலா ஒதுங்கியதால் யாருக்கு லாபம்?
சசிகலாவின் அரசியல் துறவு என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?

 

என ஐந்துவிதமான கேள்விகளுடன் தமிழக மக்களின் மனதை படம்பிடித்தோம்.

 

ddd

 

"சசிகலா ஒரு நிழலுலக ஆளுமை தான். மேலோட்டமாகப் பார்த்தால் தமிழகத்தை கொள்ளையடித்த மன்னார்குடி மாஃபியாவின் தலைவி என்ப தோடு கடந்து போய்விடும். ஆழமாகச் சிந்தித்தால் ஜெயலலிதாவிற்காகவும் அ.தி.மு.க.விற்காகவும் தனது இளமைக்கால சுக துக்கத்தை துறந்து கணவனைக் கூடப் பிரிந்து துறவற வாழ்க்கையை வாழ்ந்தவர்.

 

"கடைசியாக ஜெ.வுடன் சேர்ந்து செய்த குற்றத்திற்காக நான்காண்டு சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டு வந்தவர். திடீரென அரசியலில் இருந்து துறவறம் பெற்று ஒதுங்கிவிட... அவர் சாதாரணமான ஆளுமை இல்லை, அவர் பிரம்மாண்டம்'' என்கிறார் திருவிடைமருதூர் ஜெய்சங்கர்.

 

ddd

 

"எங்க கிராமங்களில் ஒருசிலரை அவங்க வயனமிருக்காங்கன்னு சொல்லுவாங்க... எதுக்குத் தெரியுமா?

 

ஒரு காரியத்தை நெனைச்சா அதைச் செய்து முடிக்கிறதுக்குத் தேவையான சக்தியைப் பெற அமைதியாக இருப்பதற்கு அர்த்தம்தான் வயனம் காப்பாத்துறது. அதுபோல யானை தனது கோவத்தைக் கடவாயில் ஒதுக்கிவச்சிருக்கும். சமயம் வரும்போது பழி தீர்த்திரும். அது போல சசிகலாவின் அரசியல் துறவறம்'' என்கிறார்கள் நெல்லை, தூத்துக்குடி மக்கள்.

 

ddd

தமிழக மக்களில் 44 சத விகிதத்தினர் சசிகலா மீண்டும் அரசியலுக்கு வருவார் என உறுதியாகச் சொல்கிறார்கள். அதில் 43 சதவிகிதம் பேர் அவர் வந்தால் அ.தி.மு.க.வை வசப்படுத்துவார் என நம்புகிறார்கள்.

 

சசிகலா துறவற முடிவை ஏன் மேற்கொண்டார் எனக் கேட்டதற்கு... பா.ஜ.க.வின் அழுத்தம்தான் காரணம் என 30 சதவிகிதம் பேர் சொல்கிறார்கள்.

 

பா.ஜ.க. மட்டுமல்ல... எடப்பாடியின் பிடிவாதம்தான் என 26 சதவிகிதம் பேரும்... இல்லை தினகரனின் அடாவடி செயல்கள்தான் காரணம் என 11 சதவிகிதம் பேரும் சொல்கிறார்கள்.

ddd

"சசிகலா மீது ஊழல் கறை இருக்கிறது. அவர் சிறையிலிருந்து வந்தவர். அவரை சேர்த்துக்கொண்டால் கெட்டபெயர் வரும் என எடப்பாடி நினைக்கிறார். சசிகலா மீது ஜெ. மரண சந்தேகம் படிந்திருந்தது. இப்பொழுது மறைந்துவிட்டது. ஆனாலும் எடப்பாடி, சசியை ஏற்க மறுத்து, தினகரன், எடப்பாடிக்குப் போட்டியாக, " 'நான்தான் முதல்வர்' என சொன்னது எல்லாம் சசிகலாவை பாதித்துவிட்டது'' என்கிறார் பெண்ணாடத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் தங்கசெல்வி.

 

சசிகலாவின் துறவறத்தின் காரணமாக அவரது சமூக மக்கள் அ.தி.மு.க.வுக்கு எதிராகத் திரும்புவார்கள் எனவும், அவர் அரசியலுக்குத் திரும்பிவருவார் எனவும் அதே 44 சதவிகித மக்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.
 

ddd

"ஒட்டுமொத்த சமூகமே அ.தி.மு.க. மீது கடுமையான எதிர்ப்பில் உள்ளது. எடப் பாடி தென் மாவட்டத்துக்கு வரும்போது மக்கள் எதிர்ப்பைக் காட்டுவாங்க. என்னதான் இருந்தாலும் சசிகலா எங்கவீட்டுப் பொம்பளை. சசிகலா காலில் விழுந்துதான் எடப்பாடி முதல்வரானார். கட்சியைக் காப்பாற்றிய சசிகலாவைத் தூக்கி எறிந்ததை நாங்க எப்படி ஏற்போம்'' என்கிறார்கள் உணர்ச்சிப்பிழம்பாக.

 

அதேநேரத்தில் 'சசிகலா ஒதுங்கியதால் யாருக்கு லாபம்' எனக் கேட்டதற்கு, "தி.மு.க.விற்கு லாபம்" என 30 சதவிகிதம் பேரும் தெரிவிக்கிறார்கள்.

 

"கடந்த நான்கு ஆண்டுகளாக சின்னம்மா பெயரைச் சொல்லியே நாங்க குறிப்பிட்ட வாக்கு வங்கி வைத்துள்ளோம். அ.தி.மு.க. சின்னம்மாவை ஏற்காதவரை எதிரியான தி.மு.க. எளிதில் வெற்றிபெறும்'' என்கிறார் அ.தி.மு.க. தொண்டரான கண்டரமாணிக்கத்தைச் சேர்ந்த கனக கருப்பையா.
 

ddd

"சசிகலாவின் துறவறம் தி.மு.க.வுக்கு கூடுதல் பலம்'' என்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த பவானி.

 

"சசியின் நேரடி ஆதரவாளர்கள் அ.தி.மு.க. மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்'' என்கிறார் வீரபாண்டி மாஜி தலைமை ஆசிரியர் உதயகுமார்.

 

அதே நேரத்தில், "சசியின் துறவறம் அரசியலில் எந்தப் பாதிப்பையும் ஏற் படுத்தாது'' என 20 சதவிகிதம் பேர் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

 

"சசிகலா துறவறம் என்பது நாடகமே. நான்தான் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்கிற சசிகலாவை அ.தி.மு.க. ஏற்கவில்லை. அ.ம.மு.க.வை வழிநடத்தினால் பிற்காலத்தில் அ.தி.மு.க.வை தன்னால் சொந்தம் கொண்டாட முடியாது, ஆகையால் நான் ஒதுங்கிவிடுகிறேன் என அறிக்கை விட்டிருக்கிறார்'' என்கிறார் முதுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்த செல்வி.

 

"ஜெ.வுக்குப் பிறகு சசி அரசியலுக்கு வருவது முடியாத காரியம். காரணம் ஜெ. சினிமாவில் இருந்து மக்களைக் கவர்ந்தவர். திரைமறைவு அரசியல் செய்த சசிகலா, திரைமறைவில் துறவறம் அறிவித்துள்ளார். அதனால் எந்தப் பாதிப்பும் இல்லை'' என்கிறார் ஜெயங்கொண்டம் சக்திவேல்.

 

cnc

 

"பெட்ரோல், க்யாஸ் விலை ஏறிக்கொண்டே போகிறது. அதை குறைப்பதற்கு யாரும் முன்வரவில்லை. இதில் சசிகலாவாவது கத்திரிக்காயாவது'' என கோபத்தில் படபடக்கிறார் கள்ளக்குறிச்சி தனலட்சுமி.


"சசிகலாவால் பெரிய அளவில் சாதிக்க முடியாது. அவர் ஒன்றும் மக்கள் தலைவர் இல்லை. அவரை பெரிய தியாகிபோல சித்தரிப்பது நகைப்புக்குரிய செயலாகத்தான் தோன்றுகிறது'' என்கிறார் கூத்தக்குடியைச் சேர்ந்த ஏழுமலை.

 

பா.ஜ.க.வுடன் கூட்டணி! அ.தி.மு.க. வெற்றியைப் பாதிக்குமா?-நக்கீரன் சர்வே

 

-நக்கீரன் சர்வே குழு


ராம்கி, ஜீவாதங்கவேல், பரமசிவன், சக்திவேல், எஸ்.பி.எஸ், ராஜா, பகத்சிங், அருள்குமார், செல்வகுமார், மணிகண்டன், அரவிந்த், அருண்பாண்டியன், நாகேந்திரன், அண்ணல், சுந்தரபாண்டியன், இளையராஜா, மகேஷ், காளிதாஸ்
தொகுப்பு: -தாமோதரன் பிரகாஷ்

 

படங்கள்: ராம்குமார், விவேகானந்தன், விவேக்

 

 

Next Story

'2026 தேர்தலில் நான் யாரென்று காட்டுவேன்' - சசிகலா

Published on 21/03/2024 | Edited on 21/03/2024

 

nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஆனால் சசிகலா தரப்பில் எந்தவித தேர்தல் நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையில், புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன்வைத்தனர். அவர் பேசுகையில், ''இந்தத் தேர்தல் முடிவுக்கு பிறகு தான் அண்ணா திமுக என்ன என்பதை எல்லோரும் புரிந்து கொள்வார்கள். நிச்சயமாக அதிமுக ஒன்றாவதற்குரிய நேரம் வந்துவிட்டதாகத் தான் என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன். தமிழ்நாடு அரசு இப்பொழுது தேர்தல் என்ற காரணத்தைச் சொல்லி தேர்தலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று கூட ஒரு துப்புரவு பெண் தொழிலாளி தூத்துக்குடியில் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்டிருக்க சம்பவம் நடந்துள்ளது. எதற்காக நடந்தது என்பதை நான் சொல்ல விரும்பவில்லை. ஆனால் நான் கேட்கின்ற ஒரே கேள்வி முதலமைச்சர் கையில் இருக்கின்ற காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது? பூ கட்டிக்கிட்டு இருக்கா அல்லது இவர்களுடைய பிரச்சாரத்திற்கு துணையாக பின்னாடி போய்க் கொண்டிருக்கிறதா? என முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும்.

ஆவின் பாலில் புழு, பூச்சி இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது முதல் முறையல்ல தொடர்ந்து திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து இது நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் உடனே ஒரு அறிக்கை கொடுக்கிறார்கள். இந்த பாலை யாரும் உபயோகிக்க வேண்டாம். இதற்கா அரசாங்கம் இருக்கிறது. இதற்காகவா பால்வளத்துறை இருக்கிறது. அதற்கு ஒரு மந்திரி வேறு. எப்படி நிர்வாகம் நடத்துகிறீர்கள். அப்படி என்றால் உங்கள் நிர்வாகத்தில் குறை இருக்கிறது. அது பாலில் தெரியுது. இதே ஜெயலலிதா இருந்தபோதெல்லாம் இது நடந்ததா? இது மாதிரி ஒரு குறை நடந்திருக்குமா? இல்லையே. ஏனென்றால் அவர்களுடைய கவனம் எல்லா இடத்திலும் இருந்தது.

இப்போது வரைக்கும் முதலமைச்சர் நினைப்பு, எப்படியாவது இந்த தேர்தலில் பொய் சொல்லி ஜெயிக்கணும் என்பதுதான். இது நாடாளுமன்றத் தேர்தல். 2026 சட்டமன்ற தேர்தல் தான் எங்களுக்கும் திமுகவிற்கான நேரடி தேர்தல். அந்த தேர்தலில் நான் யார் என்று காட்டுவேன். திமுக என்ன ஆகும் என்பதையும் நான் கணித்து வைத்திருக்கிறேன்'' என்றார்.

Next Story

சசிகலாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த்!

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Actor Rajinikanth met and congratulated Sasikala

சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலைய இல்லத்துக்கு எதிரே வி.கே. சசிகலா புதியதாக வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். ஜெயலலிதா இல்லம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வீட்டிற்கு கடந்த மாதம் கிரகப் பிரவேசம் நடைபெற்றது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரஜினிகாந்திற்கு கிரகப் பிரவேசத்தில் கலந்த கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சசிகலாவின் வீட்டுக்கு நேரில் இன்று (24.02.2024) வருகை தந்தார். இதனையடுத்து சசிகலாவுடன் சிறிது நேரம் சந்தித்துப் பேசி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கிளம்பிய ரஜினிகாந்த்தை வீட்டின் வாசல் வரை வந்து சசிகலா வழியனுப்பி வைத்தார். அப்போது ரஜினிகாந்த் கையெடுத்துக் கும்பிட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், “இந்த வீடு கோயில் போல உள்ளது. இந்த வீடு சசிலாவுக்கு பெயர், புகழ், சந்தோஷம், நிம்மதி தர வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார். மேலும், ‘ஜெயலலிதாவின் ஆளுமை மிக்க இடத்தை தமிழகத்தில் யார் பூர்த்தி செய்வார் என நினைக்கிறீர்கள்’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “அரசியல் பற்றி பேச விரும்பவில்லை” எனத் தெரிவித்தார்.