
2000மாவது ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி வந்தது அந்த தீர்ப்பு. இந்திய வரலாற்றில் அதுவரை எந்த முதல்வரும் பெறாத கடுங்காவல் தண்டனையை பெற்றார் ஜெயலலிதா.
கொடைக்கானலில் விதிகளை மீறி, 7 தளங்கள் கட்ட பிளசன்ட்ஸ்டே ஹோட்டலுக்கு அனுமதி வழங்கிய வழக்கில், ஜெயலலிதாவுக்கு சிறப்பு நீதிமன்றம் மூன்றாண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கியது.
அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும், அ.தி.மு.க.,வினர் மிகப்பெரிய வன்முறையில் ஈடுபட்டனர். தர்மபுரி இலக்கியம்பட்டி அருகே, கோவை வேளாண்மை கல்லூரி மாணவ, மாணவியர் கல்விச்சுற்றுலா சென்று திரும்பிய பஸ்சுக்கு அ.தி.மு.க.,வினர் தீ வைத்தனர். இதில் அந்த பஸ்சில் வந்த, கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய, மூன்று மாணவிகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.



கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா
இந்தக் கொடூரமான சம்பவத்திற்கு ஜெயலலிதா ஒரு இரங்கல்கூடத் தெரிவிக்கவில்லை.
சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள, அரசு நிறுவனமான டான்சிக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்காக ஜெயலலிதா வாங்கியிருந்தார். அதை விற்ற வகையில் அரசுக்கு சுமார் 3 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
2000மாவது ஆண்டு அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி இரண்டு வழக்குகளுக்கும் சேர்த்து ஜெயலலிதாவுக்கு ஐந்தாண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையை சிறப்பு நீதிமன்றம் வழங்கியது.
சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தபோது 2000 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் அந்தத் தீர்ப்பிற்குத் தடை விதித்தது. ஆனால் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை ரத்து செய்யவில்லை.
இந்தியாவில் எந்த முதல்வரும் செய்யாத அளவில் யாருக்கும் பயப்படாமல், எதிர்க்கட்சிகளைக்கூட மதிக்காமல், மிகத் துணிச்சலாக ஊழல் செய்தார் ஜெயலலிதா. அதற்கான தண்டனைகள் அவருக்குக் கிடைக்கத் தொடங்கின. இந்நிலையில்தான் 2001 ஆம் ஆண்டு மே மாதம் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் அமைந்த அணிகள் வியப்பை மக்களுக்கே வியப்பை ஏற்படுத்தியது. ஊழல் வழக்கில் தண்டனை பெற்று தேர்தலில்கூட நிற்க முடியாத ஒரு கிரிமினல் குற்றவாளியுடன் கூட்டணி அமைக்கவும், திமுகவை தோற்கடிக்கவும் முன்வந்த கட்சிகளை பார்க்க முடிந்தது.
திமுக அணியில் பாஜக, எம்ஜியார் அதிமுக, மக்கள் தமிழ்தேசம், புதியநீதிக் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இடம்பெற்றன. அதிமுக அணியில் காங்கிரஸ், பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பார்வர்ட் பிளாக் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
திமுக, பாஜகவுடன் தேர்தலுக்கு சில நாட்கள் முன்புவரை இருந்த பாமகவும், மதிமுகவும் கடைசி நிமிடத்தில் கூட்டணியிலிருந்து விலகின. இதில் பாமக அதிமுக அணியுடன் இணைந்து போட்டியிட்டது. மதிமுக தனித்து போட்டியிட்டு வாக்குகளை பிரித்தது.
திமுக தனது ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி இருந்தது. எனவே திமுக அணிக்கு மக்கள் ஆதரவு அதிகமாகவே இருந்தது.
இந்நிலையில்தான், சட்டப்படி தேர்தலில் போட்டியிட முடியாத ஜெயலலிதா ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, புவனகிரி ஆகிய நான்கு தொகுதிகளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தார். நான்கு தொகுதிகளிலும் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
இதையடுத்து, கலைஞர்தான் சதிசெய்து தன்னை தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்துவிட்டார் என்று ஜெயலலிதா பொய்ப்பிரச்சாரம் செய்தார்.
இந்தத் தேர்தலில் திமுக செய்த மிகப்பெரிய தவறாக, சாதிக்கட்சிகளை அணிசேர்த்தைக் குறிப்பிட்டார்கள்.
தேர்தல் முடிவில் 141 இடங்களில் போட்டியிட்ட அதிமுக 132 இடங்களையும், 14 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 20 தொகுதிகளிலும், 8 இடங்களில் போட்டியிட்ட சிபிஐ 5 தொகுதிகளிலும், 8 தொகுதிகளில் போட்டியிட்ட சிபிஎம் 6 தொகுதிகளிலும், 32 தொகுதிகளில் போட்டியிட்ட தமாகா 23 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 3 பேரரும் ஆக அதிமுக கூட்டணி மொத்தம் 196 இடங்களளை வெற்றிபெற்றனர்.
திமுக அணியில் திமுக தனித்து 31 தொகுதிகளிலும், பாஜக 4 தொகுதிகளிலும், எம்ஜியார் அதிமுக 2 தொகுதிகளிலும் வெற்றிபெற்றன. மதிமுக தனித்து 211 தொகுதிகளில் போட்டியிட்டு 205 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்தாலும், 5.12 சதவீதம் வாக்குகளை பிரித்திருந்தார்.
அவரைத் தனித்துப் போட்டியிடச் செய்வதற்காக அன்றைக்கு ஜெயலலிதா சார்பில் 30 கோடி ரூபாய் தேர்தல் செலவுக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. திருச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திமுக கூட்டணி தேர்தல் மாநாட்டில் பஙகேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்த வைகோ, கடைசி நிமிடத்தில் தனது முடிவை மாற்றி திமுக எதிர்ப்பு நிலையை எடுத்ததால், அந்த மாநாட்டில் வைக்கப்பட்டிருந்த வைகோவின் பேனர்கள் கிழித்தெறியப்பட்டன.
தேர்தலில் வெற்றிபெற்றவுடனே, மறுநாளே அவசர அவசரமாக ஜெயலலிதாவுக்கு ஆளுநர் பாத்திமா பீவி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். தண்டனை பெற்ற குற்றவாளி ஒருவருக்கு அரசியல் சட்டத்தை மதிக்காமல் ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பதவியேற்ற உடன் திமுக தலைவர் கலைஞரை கைதுசெய்ய ஜெயலலிதா பரபரப்படைந்தார். ஆனால், அவரைக் கைதுசெய்ய உரிய காரணங்கள் இல்லை. ஏதேனும் ஒரு குற்றச்சாட்டில் அவரை கைதுசெய்ய உத்தரவிட்டார் ஜெயலலிதா.


இதையடுத்தே, ஜூன் மாதம் 29 ஆம் தேதி நள்ளிரவு கலைஞரை அவருடைய வீட்டிலேயே புகுந்து போலீஸார் கைது செய்தனர். அன்று அதிகாலை தமிழகமே சன் தொலைக்காட்சியைப் பார்த்து பதறியது. தமிழகத்தின் மூத்த தலைவர் கலைஞரை, கைது நடவடிக்கைகளுக்கு பயப்படாத அரசியல் தலைவரை நட்ட நடுராத்திரியில் கைது செய்த நிகழ்வு மக்கள் மத்தியிலும் திமுகவினர் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
ஆனால், கலைஞரை உரிய முகாந்திரம் இல்லாமல் கைதுசெய்த தமிழக போலீஸாரைக் கண்டித்த நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. ஜெயலலிதாவின் சாடிஸ்ட் மனப்பான்மை அன்று வெளிப்பட்டது. அதை தமிழகம் கண்கூடாக பார்த்தது.
இந்நிலையில்தான் கிரிமினல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றது செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதையடுத்து ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை துறந்தார். அவருக்குப் பதிலாக ஒ.பன்னீர் முதல்வராக்கப்பட்டார்.
2002 ஆம் ஆண்டு டான்சி நிலத்தை திரும்பவும் அரசிடம் ஒப்படைப்பதாக ஜெயலலிதா கூறியதை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம் அவருடைய தண்டனையை ரத்துசெய்தது. இது ஒரு வினோதமான தீர்ப்பாக அப்போது பேசப்பட்டது. திருடன் தான் திருடிய பொருளை திரும்பக் கொடுத்தால் தண்டனை ரத்து செய்யப்படுமா என்றெல்லாம் விமர்சனம் செய்தார்கள்.
முதல்வராக மீண்டும் பொறுப்பேற்ற ஜெயலலிதா, 2003 ஆம் ஆண்டு போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தை ஒடுக்க அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தார். எஸ்மா, டெஸ்மா என்ற சட்டங்களை அமல்படுத்தி அவர்களை பழிவாங்கினார். இதில் பலர் உயிரிழந்தனர். இருந்தாலும், அவர்களை அச்சுறுத்தும் போக்கை அவர் கைவிடவில்லை.
இந்த ஆட்சிக் காலக்கட்டத்தில்தான் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறத் தொடங்கினர். இதையடுத்து, ஜெயலலிதா வழக்கை தொடர்ந்து நடத்தும் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், இந்த வழக்கை கர்நாடகாவுக்கு மாற்றும் நடவடிக்கையை மேற்கொண்டார். இதையடுத்து அந்த வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது.
மீண்டும் முதலில் இருந்து சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். அங்கேயும் வழக்கை தாமதப்படுத்த பல தந்திரங்களை ஜெயலலிதாவும் சசிகலாவும் கையாண்டனர். தமக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை ஏதேனும் ஒருவகையில் முடிக்க நினைத்த ஜெயலலிதாவின் எண்ணம் ஈடேறவில்லை.
இந்நிலையில்தான் 2004 ஆம் ஆண்டு மக்களவைக்கு தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. வாஜ்பாய் தனது ஆட்சிக்காலத்தை முதல்முறையாக எந்தத் தொந்தரவும் இல்லாமல் நிறைவு செய்திருந்தார். ஆனால், பாஜகவுடன் கூட்டணியில் தொடர திமுகவில் கடும் எதிர்ப்பு இருந்தது. கலைஞர் கைதுசெய்யப்பட்டபோது மத்திய அரசு உரியவிதத்தில் தலையிடவில்லை என்ற வருத்தம் திமுகவினருக்கு இருந்தது.
அதேசமயம், கலைஞர் உடனடியாக எந்த முடிவுக்கும் செல்லவில்லை. மத்தியில் ஆட்சிமாற்றத்துக்கு எதிர்க்கட்சிகள் ஒற்றுமை அவசியம் என்ற அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித் அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்து வந்தார்.

திமுக தலைவர் கலைஞரையும் வந்து சந்தித்தார். மத்தியில் கூட்டணி ஆட்சிக்குத் தயார் என்று காங்கிரஸ் அறிவித்தால் யோசிக்கலாம் என்று கலைஞர் கருத்துத் தெரிவித்தார். உடனே டெல்லி சென்ற சுர்ஜித், சோனியாவைச் சந்தித்துப் பேசினார். பேச்சு முடிந்து, சோனியா கூட்டணி ஆட்சிக்கு தயார் என்று அறிவித்தார்.
இதையடுத்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு திமுக காங்கிரஸ் கூட்டணி உருவானது. தமாக காங்கிரஸுடன் இணைந்திருந்ததால் கட்சி முன்பைவிட வலுப்பெற்றிருந்தது.
இந்தத் தேர்தலில்தான் மூன்று மாநிலங்களில் காங்கிரஸை எதிர்த்துப் போட்டியிட வேண்டியிருந்த கம்யூனிஸ்ட்டுகள் முதன்முறையாக தமிழகத்தில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருந்தனர். பாஜகவை வீழ்த்த இந்த விஷப்பரீட்சையை சுர்ஜித் துணிச்சலாக மேற்கொண்டார்.
அந்த முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்தது. திமுக, காங்கிரஸ், மதிமுக, பாமக, சிபிஎம், சிபிஐ கட்சிகள் இணைந்த அணி மொத்தமுள்ள 39 தொகுதிகளையும் வாரிச் சுருட்டியது. திமுக 16 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாமக 5, மதிமுக 4, சிபிஎம், சிபிஐ தலா 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
பாஜகவுடன் கூட்டணி அமைத்த அதிமுக ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறவில்லை. இந்தத் தேர்தலும், கூட்டணி பலம்தான் தமிழக தேர்தலை தீர்மானி்ககும் என்ற உண்மையை மீண்டும் உணர்த்தியது.
(மத்திய அரசில் திமுகவின் செல்வாக்கு, 2006 சட்டமன்றத் தேர்தல் வெற்றி, சிறுபான்மையாக இருந்தாலும் கலைஞர் நடத்திய செம்மையான ஆட்சி குறித்தும், ஈழப்பிரச்சனை கலைஞர் எதிர்கொண்ட விதம் பற்றியும் வியாழக்கிழமை பார்க்கலாம்)
-ஆதனூர் சோழன்
முந்தைய பகுதி :