Skip to main content

அண்ணாமலையின் வார் ரூம் ரகசியம்! கோடிகளை இறைக்கும் பா.ஜ.க.!

Published on 28/12/2022 | Edited on 28/12/2022

 

Annamalai asset details

 

அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவாதத்துக்கு உள்ளான நிலையில், தி.மு.க. அமைச்சர்களின் சொத்து விவரங்களை வெளியிடப் போவதாக அண்ணாமலை மிரட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால், அண்ணாமலைக்காக இதுவரை பா.ஜ.க. என்ன செலவு செய்தது என்ற விவரம் வெளியாகியுள்ளது. நூற்றுக்கணக்கான கோடிகள் அண்ணாமலைக்காக பா.ஜ.க. செலவு செய்துள்ளது. அவருக்காக ‘வார் ரூம்’ எனப்படும் கணினித் தொடர்பு மையங்கள் மூன்று இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு வார் ரூம் உருவாக்க மூன்று கோடி ரூபாய் தேவை. ஒவ்வொரு வார் ரூமிலும் 80 கணிப்பொறி பட்டதாரிகள் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பளத்தில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

 

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடம், போலி நிதி நிறுவனமான சுரானாவுக்கு சொந்தமான இடம் மற்றும் பெங்களூருவில் உள்ள ஒரு இடம் ஆகிய மூன்று இடங்களில் வார் ரூம் எனப்படும் கணிப்பொறி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது நான்காவது வார் ரூம் ஒன்றை சென்னை மவுண்ட் ரோட்டில் அமைக்க முடிவு செய்துள்ளார்கள்.

 

Annamalai asset details

 

இந்த வார் ரூம் மூலம்தான் என் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டுகிறார். பெங்களூருவில் உள்ள வார் ரூம் மூலம் ‘அண்ணாமலை பிரதமராகத் தகுதியுள்ளவர்’ என்ற பிரச்சாரம் உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களுக்குச் செல்கிறது. இவை ஒவ்வொன்றையும் பராமரிக்க லட்சக்கணக்கான ரூபாய் பா.ஜ.க.வால் செலவழிக்கப்படுகிறது. இது தவிர தமிழகத்தில் இயங்கும் நூறு யூடியூப் சேனல்களை பா.ஜ.க. வாங்கியிருக்கிறது. ஒவ்வொரு யூடியூப்பருக்கும் மாதம் மூன்று லட்சம் ரூபாய் சம்பளம் அளிக்கப்படுகின்றது. இது மட்டுமில்லாமல், தி.மு.கவுக்கு தேர்தல் வேலை பார்த்த பிரஷாந்த் கிஷோர் போல, அவரிடமிருந்து பிரிந்து தற்பொழுது காங்கிரசுக்கு வேலை பார்க்கும் சுனில் மற்றும் வாராகி ஆகியோரை அண்ணாமலைக்காக பா.ஜ.க. களமிறக்கியுள்ளது. சுனில், அண்ணாமலைதான் அடுத்த பிரதமர் என்கிற பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். வாராகி தமிழகம் முழுவதும் சாதிக் கலவரத்தை உருவாக்கி, அதில் பா.ஜ.க எப்படி பலனடைய முடியும் என ஆய்வு மேற்கொண்டு வியூகம் அமைக்கிறார்.

 

இதுதவிர பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அண்ணாமலையின் பேச்சை ஒலிபரப்ப அந்தப் பேச்சுக்கு லைக்குகள் பெற பல அமெரிக்கன் கம்பெனிகள் பா.ஜ.க.வால் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் ட்விட்டருக்கு தலைமையேற்ற ‘எலான் மாஸ்க்’ அண்ணாமலைக்கு போலி லைக்குகள் போடும் கம்பெனிகளைக் கண்டுபிடித்து அவற்றை நீக்கிவிட்டார். அதனால் அண்ணாமலைக்கு ட்விட்டரில் லைக்குகள் குறைந்துவிட்டது என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.

 

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதினைந்து கோடி ரூபாய் பா.ஜ.க. கொடுக்க அண்ணாமலைக்கு மட்டும் நாப்பத்தைந்து கோடி ரூபாய் கொடுத்திருக்கின்றது. எந்த ஊரில் ஆர்ப்பாட்டம், போராட்டம் என எதை நடத்தினாலும் பா.ஜ.க. தலைமையகத்திலிருந்து அறுபது லட்சம் ரூபாய் மீட்டர் போட்டுவிடுவார் அண்ணாமலை. அதுபோல இந்த வருடத்தில் இருபது மீட்டிங் போட்டு பதினைந்து கோடி ரூபாய் வாங்கியிருக்கிறார் அண்ணாமலை.

 

அண்ணாமலைக்கென மூன்று செயலாளர்கள் இருக்கின்றார்கள். அவர்களுக்கு மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் பா.ஜ.க கொடுக்கின்றது. வீட்டுச் செலவுக்கென மாதம் பதினைந்து லட்சம் ரூபாய் வாங்குகிறார் அண்ணாமலை. இது தவிர முக்கியமான சந்திப்புக்களை ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமான கொடநாடு பகுதியில் உள்ள ஒரு பங்களாவில்தான் அண்ணாமலை நடத்துவார். ஜெமினி கணேசனுக்குச் சொந்தமான அந்த பங்களாவுக்கு லட்சக்கணக்கான ரூபாய் வாடகை கொடுக்கிறது பா.ஜ.க. இதுதவிர, கார் செலவு, கம்ப்யூட்டர் செலவு, உணவுச் செலவு என லட்சக்கணக்கில் பில் போடுகிறார் அண்ணாமலை.

 

Annamalai asset details

 

இப்படித்தான் அண்ணாமலை என்கிற உருவத்தைப் பராமரித்து அவர் வாயால் திராவிட இயக்கங்களைத் திட்ட வைத்து பா.ஜ.க.வை வளர்க்க கோடிக்கணக்கான ரூபாயை பா.ஜ.க. செலவு செய்து கொண்டிருக்கின்றது. அண்ணாமலையோ, “நான் சாணக்கியன்” என அடிக்கடி சொல்கிறார். அமர் பிரசாத் ரெட்டி, எந்த வேலையாக இருந்தாலும் நான் முடித்துத் தருகிறேன் என மக்களை ஏமாற்றும் நிதி நிறுவனங்களான சுரானா, ஐ.எப்.எஸ்., ஆருத்ரா போன்றவைகளை காப்பாற்றுகின்றார். இதில் கோடிக்கணக்கான ரூபாய் பணத்தை அண்ணாமலைக்கு வருமானமாக அமர் பிரசாத் ரெட்டி வசூலித்துத் தருகிறார். இவையெல்லாம் கேசவ விநாயகம் மூலம் புகாராக பா.ஜ.க. தலைமைக்குச் சென்றுள்ளது.

 

கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து பா.ஜ.க.வை வளர்க்க அண்ணாமலை என்கிற ஒரு பிம்பத்தை உருவாக்கினால் அவர் திருட்டுத்தனமாக கோடிக்கணக்கான ரூபாயை போலி நிதி நிறுவனங்கள் மூலம் வசூல் செய்கிறார் என்கிற தகவலை அறிந்து பா.ஜ.க. மேலிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரடியாக தமிழக பா.ஜ.க. அலுவலகத்துக்கே அனுப்பி வைத்தது. யாரிடமும் எதுவும் பேசாத அமைதி டைப்பான நிர்மலா சீதாராமனிடம் கட்சி நிர்வாகிகள் அண்ணாமலை மீதான புகார்களைக் கொட்டித் தீர்த்துவிட்டனர். அதையெல்லாம் கவனமாகக் குறிப்பெடுத்துக் கொண்டார் நிர்மலா சீதாராமன். நிதியமைச்சர் நிர்மலாவைச் சந்திக்க மிகவும் தாமதமாக வந்த அண்ணாமலை, அவரை அவமானப்படுத்துவது போல நடந்து கொண்டார். அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் டெல்லிக்குப் பயணமான நிதியமைச்சர் நிர்மலா, அண்ணாமலைக்கு எதிராக மத்திய பா.ஜ.க.வில் பேச இருக்கிறார் என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.

 

Annamalai asset details

 

"நான் ஐ.பி.எஸ். ஆபீசர் ஆனதிலிருந்து இதுவரை உள்ள சொத்துக் கணக்குகளைக் காட்டுவேன்” என ரபேல் வாட்சுக்கு பில் கேட்ட விவகாரத்தில் அறிவித்துள்ளார் அண்ணாமலை. ஒவ்வொரு வருடமும் ஐ.பி.எஸ். ஆபீசராக இருப்பவர் தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். அதனால், 2021 தேர்தலில் போட்டியிட்ட அண்ணாமலை தேர்தல் கமிஷனில் தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்துள்ளார். இன்னும் ஒரு வருடம்தான் அவர் கணக்குக் காட்டவில்லை.


அதைக் காட்டுவதென்ன பெரிய விசயமா? பா.ஜ.க. அண்ணாமலைக்காக செலவு செய்த நூற்றுக்கணக்கான கோடிகளுக்கு அண்ணாமலையால் கணக்குக் காட்ட முடியுமா? அமர் பிரசாத் ரெட்டி மத்திய அரசின் பேரைப் பயன்படுத்தி தமிழகத்தில் அண்ணாமலையுடன் சேர்ந்து அடித்த பெரும் கொள்ளைக்கு கணக்கு உண்டா? என பா.ஜ.க.வினர் கேள்வி எழுப்புகிறார்கள்.
 

 

 

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.