Skip to main content

மொத்தம் 2,343 ஹெக்டேர் மற்றும் 10,000 கோடி!!! இது இத்தோடு நின்று விடாது, இது வெறும் தொடக்கம்தான்!!!

Published on 04/09/2018 | Edited on 04/09/2018
green corridor project


 

தற்போது உயர்நீதிமன்றம் பசுமை வழிச்சாலைக்காக நிலத்தை கையகப்படுத்தலாம் என தீர்ப்பு வழங்கியுள்ளது. பசுமை வழிச்சாலை என்றால் என்ன, அதை ஏன் மக்கள் எதிர்க்கின்றனர் என்று பார்ப்போம்... 


பசுமையை அழித்து போடப்படும் சாலைதான் பசுமை சாலை திட்டம். சேலம் மாவட்டத்திலுள்ள அயோத்தியாப்பட்டணம், அரமனூர், ஆச்சாங்குட்டப்பட்டி, ஆச்சாங்குட்டப்பட்டி புதூர்,  உடையாப்பட்டி, உத்தமசோழபுரம், எருமாபாளையம், கத்திரிப்பட்டி, குப்பனூர், குள்ளம்பட்டி, சித்தனேரி, சுக்கம்பட்டி, பாரப்பட்டி,  பூலாவரி அக்ரகாரம், மஞ்சுவாடி, மாசிநாயக்கன்பட்டி, மின்னாம்பள்ளி, மூக்கனூர், வெள்ளையப்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை  வெளியிட்டது அரசு. இதனால் சேலத்திலுள்ள கிட்டதட்ட ஒட்டுமொத்த விவசாயமும் பாதிக்கப்படும் என்று கூறினர் விவசாயிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும். இதற்கு அரசு சார்பில் கூறப்பட்ட பதில்  “நாங்கள் சாலையை பசுமையாக வைத்துக்கொள்வோம்” என்பதுதான். ஆனால் இங்குதான் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. பசுமை சாலை திட்டத்தின் கீழ் கையகப்படுத்தும் நிலங்களில் உங்களால் விவசாயம் செய்ய முடியுமா? 
 

 

 

ஒரு பொருள்(விஷயம்) உங்களுக்குத் தெரியுமா? இந்த திட்டத்திற்காக கிட்டதட்ட 2,343 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. பசுமை வழிச்சாலையின் மொத்த தூரம் 273 கி.மீ. இதில் 13 கி.மீ அடர்வனம். இந்த சாலை அமையவேண்டுமென்றால் அந்த 13 கி.மீ. அடர்வனத்தை அழித்துதான் அமைக்கவேண்டும். ஏற்கனவே அழித்த மரத்திற்கு மாற்றாக நடவேண்டிய மரத்தையே இன்னும் நடவில்லை. இதில் இனி வெட்டப்போகும் மரங்களுக்கான மாற்றை எப்படி ஈடுசெய்வார்கள். வனத்துறை அமைச்சருக்கு தனது நாவையே பாதுகாக்க தெரியவில்லை (உளரிக்கொட்டவே நேரம் போதவில்லை), பின் எப்படி வனங்களை பாதுகாப்பார்??? 

 

கானி நிலத்தில் விவசாயம் செய்து தன்னையும், மண்ணையும், மக்களையும் காக்கின்றார்கள் விவசாயிகள். அவர்களின் கானி நிலத்தையும் கையகப்படுத்திக்கொள்ள துடிக்கிறது அரசு. அதை எதிர்த்து போராடுகிறார்கள் விவசாயிகள், ஆர்வலர்கள். அதை ஒடுக்க நினைக்கிறது அரசு. இந்த சாலை வருவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் என அரசு தரப்பில் சொல்லப்படுவன. இந்த சாலை மூலம் சென்னை - சேலம் சாலை வழி போக்குவரத்தின் தூரம் 60 கி.மீ. குறையும், இதனால் நேரமும், எரிபொருள் செலவும் குறையும் இது நாட்டிற்கு நிறைய நன்மைகளை ஏற்படுத்தும். சாலையை விரிவாக்குவதன் மூலம் எதிர்கால வாகன நெரிசலை ஓரளவுக்கு குறைக்கலாம். இப்படி பல நன்மைகளை(?) அடுக்கிக்கொண்டே செல்கிறார்கள். பெட்ரோல், டீசல் போன்ற மரபுசாரா அல்லது தீர்ந்துபோகும் நிலை மற்றும் மாசு போன்ற காரணங்களுக்காக மரபுசாரா, மாசற்ற எரிசக்தியை கண்டுபிடிக்க ஏற்கனவே தொடங்கிவிட்டன. அதனால் இனியும் இந்த எரிபொருட்களின் பயன்பாடு எவ்வளவு நாள் நீடிக்கும் என்பதும் நிச்சயமில்லை(ஏற்கனவே அதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன). இன்னொரு பொருள் இந்த சாலை இல்லையென்றால், ஏற்கனவே இருக்கும் சாலையில் செல்லலாம். ஆனால் இந்த விவசாய நிலம் போனால் ஈடு செய்ய வேறு நிலம் இருக்கிறதா நம்மிடம்... விவசாயிக்கு நிலம் போவது, உயிர் போவதற்கு சமம்... 

 

 

சென்னைக்கும், சேலத்திற்கும் இது அமைந்தால்தான் சாலை என்று இல்லை. ஏற்கனவே மூன்று வழிகள் உள்ளன. இதில் சிறந்தவழி சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், சேலம் இந்த வழிதான். இதன் மொத்த தூரம் 297 கி.மீ. (ப.சாலை. 273கி.மீ) இந்த சாலையை முறையாக சீரமைத்தாலே பயணநேரம் கிட்டதட்ட ஒரு மணிநேரம் குறையும். அதுமட்டுமில்லாமல் இதற்கு 10,000 கோடி செலவும் ஆகாது, அருங்கொடையான மழையின் ஆதாரமாக இருக்கும் மரங்களும் அழியாது.  

 

இந்த பசுமை சாலை திட்டம் இதோடு நின்றுவிடாது. சாலை வசதி நன்றாக இருக்கிறது என்பதால் அதைத்தொடர்ந்து சில நிறுவனங்கள் அங்கு தன் கிளையை நிறுவும். அங்கு இருக்கும் வளங்களை கொஞ்சம், கொஞ்சமாக அழிக்கும். இது ஒரு பாதையில் சென்றுகொண்டிருக்கும் போது, அதற்கு இணையான பாதையில் அந்த நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்குவதற்கு இடம் தேவைப்படும். ஒரு ரியல் எஸ்டேட் கம்பெனி விளைநிலங்களை பணம் கொடுத்து வாங்கும் அல்லது தரமறுப்பவர்களிடம் தனது அதிகாரத்தைக் காட்டி மிரட்டி பறிக்கும். அதற்குபின் என்ன வீடுகள் அதிகரிக்கும், அங்கு பள்ளி, கல்லூரிகள் வரும். இப்படி அது ஒரு குட்டி நகரமாக மாறிவிடும். இது நடைமுறையில் சாத்தியமே. சென்னையைச் சுற்றியுள்ள 20 முதல் 40 கிலோமீட்டர்கள் தூரம்வரையிலும் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு மாறியவைதான். இதற்கு எடுத்துக்காட்டு சென்னைக்கும், செங்கல்பட்டிற்கும் இடைப்பட்ட தூரம்தான். அப்படிதான் தாம்பரம் இன்று முழு நகரமாகவே மாறியுள்ளது. தனியாருக்காக பாடுபடும் அரசு, மக்களுக்காகவும் பணிசெய்தால் நன்றாக இருக்கும். சாலையும், வளர்ச்சியும் அவசியமாக இருக்கலாம், ஆனால் உணவு இன்றியமையாத ஒன்று என்பதையும் கவனத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.


 

green corridor


 

 

 

போராடுவது என்பது ஒவ்வொருவரின் உரிமை. தனிமனித உரிமைகளுக்காக போராடுபவர்களைத் தடுக்கவே இங்கு யாருக்கும் உரிமை இல்லை. அப்படி இருக்கையில் பொதுநலனுக்காக போராடுபவர்களை ஒடுக்குவது என்பது ஜனநாயகத்தை கொலை செய்யும் செயல். பியுஸ் மனுஷ், வளர்மதி போன்ற செயற்பாட்டாளர்களையும், மன்சூர் அலிகான் போன்றவர்களையும், பல விவசாயிகளையும், அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் கைது செய்ய துடிக்கும் அரசு, சட்டத்தை சட்டை போல பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் சண்டாளர்களை எப்போது கைது செய்யும்...

 

 

 

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது