Skip to main content

2 வருடங்கள் ஆகப்போகும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை... சொன்னதும்.. நடந்ததும்..

Published on 13/10/2018 | Edited on 13/10/2018

2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி நேரம் 8மணி. இந்தியாவின் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று கூறி நடப்பில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் தாள்களை தடைசெய்யும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். திட்டம் அறிவிக்கப்பட்டபோது அதை ஒரு தரப்பினர் ஆதரித்தனர், ஒரு தரப்பினர் எதிர்த்தனர். ஆனால் திட்டம் நடைமுறைபடுத்தப்பட்ட சில நாட்களில் அதை ஆதரித்த மக்களில் சிலரே தீவிரமாக எதிர்க்க தொடங்கினர். இதற்கு காரணம் திட்டம் அமலுக்கு வந்த விதம் தான்.

 

nn

 

பழைய 500 மற்றும் 1000 ரூபாய்களின் மீது பணமதிப்பு இழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு 2 வருடங்கள் ஆகப்போகின்றன. அதன் தாக்கமோ இன்னும் அடங்கியபாடில்லை. அந்த திட்டத்திற்கு கூறப்பட்ட இலக்குகள் மற்றும் பொதுவாக பொருளாதாரம் மீதான அதன் தாக்கம் எப்படிப்பட்டது என்பதை மதிப்பிடுவது அவசியமான ஒன்று.

 

கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதியை பா.ஜ.க. கருப்பு பண எதிர்ப்பு நாளாகவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் வரலாற்றின் கருப்பு நாளாகவும் அனுசரித்தன. வழக்கம்போல அரசியல் கட்சிகள் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றன. சற்று ஆராய்ந்து பார்த்தால் இந்த திட்டம் ஒரு வகையில் நன்மையையும், மற்றொரு வகையில் மிகப்பெரிய பாதிப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

 

கருப்பு பண ஒழிப்பு, வரி செலுத்துவோர் எண்ணிக்கையை அதிகரித்தல், ஊழலுக்கு எதிரான முக்கிய நடவடிக்கை, பயங்கரவாத கும்பலிடம் நடமாடும் கள்ளப்பணத்தை தடுத்தல் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் என பல மிகபெரிய நோக்கங்களுடன் அமலுக்கு வந்தது பணமதிப்பிழப்பு நடவடிக்கை. குறிப்பிட்ட அனைத்து நோக்கங்களும் முழுமையாக வெற்றிபெறவில்லை. இருப்பினும் அரசாங்க அறிக்கைகளின்படி, வரி கட்டாமல் பணத்தை பதுக்கி வைத்தவர்களின் எண்ணிக்கை சற்று குறைக்கப்பட்டுள்ளதாகவும். வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான வருடாந்திர அதிகரிப்பை விட 80% அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

பொருளாதார மந்தநிலைக்கு பணமதிப்பிழப்பும், ஜி.எஸ்.டி.யும் முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகிறது. 2017-ல் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) 5.7 சதவீதமாக வீழ்ச்சியடைந்த நிலையில், பொருளாதார மந்த நிலை உண்மையில் புறக்கணிக்கப்படவில்லை. 2017-18ல் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7% ஆக குறைந்துள்ளது. 

 

nn

 

இந்தியாவை டிஜிட்டல் மயமாக்கல் பணமதிப்பிழப்பின் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. அந்த முயற்சி ஓரளவு வெற்றி கண்டுள்ளது. பல அத்தியாவசிய பொருட்களை வாங்கும் இடங்களில் டிஜிட்டல் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. பெரும்பாலானோர் வேறுவழியின்றி டிஜிட்டல் பரிமாற்றங்களை நோக்கி திரும்பினர். ஆனால் டிஜிட்டல் பரிமாற்றங்களில் பல முறைகேடுகளுக்கு வாய்ப்புகள் உள்ளன. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சொன்னது போல இது பல இடங்களில் சட்டபூர்வ கொள்ளைக்கு வழிவகுத்துள்ளது. 

 


இன்று முறைப்படுத்தப்படாத நிறுவனங்களில் செல்லாகாசு மற்றும் ஜி.எஸ்.டி. ஆகியவை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் உள்ள மொத்த நிறுவனங்களில் 90% நிறுவனங்கள் முறைப்படுத்தப்படாத நிறுவனங்கள் என்பதும், 10% நிறுவனங்கள் மட்டுமே முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. வேலையின்மை, மந்தமான தொழில் என்று சிறு, குறு தொழில் நிறுவனங்களை வெகுவாக பாதித்துள்ளது பணமதிப்பிழப்பு நடவடிக்கை. 

 


பெருமளவில் கருப்பு பணம் பிடிபடும் என்று அரசு எதிர்பார்த்தது. ஆனால் 99% அளவிலான பணம் மீண்டும் வங்கிக்கு வந்தது. இது அரசுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கள்ள பணம் ஒழியும், ஊழல் அகற்ற பணமதிப்பிழப்பு நடவடிக்கை உதவும் என்று காரணம் சொல்லப்பட்டது. நாளுக்கு நாள் கள்ள நோட்டுகள் பிடிக்கபடுகினறன, ஊழல் குறைந்ததாக எந்த புள்ளிவிவரமும் சொல்ல வில்லை. 

 

பொருளாதார மந்தநிலை, வேலை வாய்ப்பு, நடுத்தர, சிறு மற்றும் நுண் நிறுவனங்கள் ஆகியவற்றில் செல்லாகாசு பெரும் பாதிப்புகளை உருவாக்கியுள்ளது. இந்த திட்டம் சாதித்தது சில; ஆனால் சோதித்தது பல. ஒரு திட்டத்தினை அமல்படுத்துவதற்கு முன்னர் அதனுடைய விளைவுகளை அலசி ஆராய்ந்து அமல்படுத்துவது அவசியம் என்பதை இந்த திட்டம் எடுத்துக் காட்டியுள்ளது. மக்களுக்கு நன்மை புரியும் அனைத்து நிகழ்வுகளும் பாராட்டத் தக்கவையே. ஆனால் எந்த மாதிரி திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை உணர்ந்து அரசு செயல்படுவதே அனைவருக்கும் நன்மை பயக்கும்.

 

 

Next Story

ரூ. 4.8 கோடி பறிமுதல்; பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 87 தொகுதிகள் தேர்தல் நடைபெறுகிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொகுதியில் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதியில் மட்டும் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஈடுபட்டுள்ளனர். கேரள மாநிலம் வயநாட்டில் மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தல் உள்ள வாக்குச்சாவடிகளில் தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பெங்களூரு தெற்கு, ஹாசன், தட்சிண கன்னடா, மைசூரு, மாண்டியா உள்ளிட்ட 14 தொகுதிகளில் இன்று மாலை வரை 144 தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. 2ஆம் கட்ட தேர்தலில் சுமார் 15.88 கோடி பொதுமக்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

Rs. 4.8 crore forfeited Case filed against BJP candidate

முன்னதாக கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் தொகுதி பாஜக வேட்பாளர் கே. சுதாகருக்கு நெருக்கமானவர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 4.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ. 4.8 கோடியை பாஜக வேட்பாளர் சுதாகர் பயன்படுத்த இருந்ததாக பறக்கும்படை அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது குறித்து சுதாகர் மீது வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக குற்றவியல் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ் மாதநாயகனள்ளி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு தொடங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க, வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பாஜக உட்கட்சி மோதல்; 3 பேரிடம் போலீசார் விசாரணை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police investigation of 3  BJP people 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் சென்னை பாஜக கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருக்கும் முத்து மாணிக்கம் என்பவர் கடந்த 20ஆம் தேதி துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் பாஜக கட்சி நிர்வாகியான ஜெகநாதன் என்பவரின் வீட்டில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாஜக நிர்வாகிகளான டிக்காராம், வெங்கட் என சிலர் மக்களவை தேர்தலின் போது பூத் ஏஜெண்ட் ஆக வேலை செய்ததற்கு பணம் தரவில்லை எனக்கூறி முத்து மாணிக்கத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து முத்து மாணிக்கம் அளித்த புகாரின் பேரில் பாஜகவினர் 8 பேர் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் துரைப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பாஜகவின் துரைப்பாக்கம் மண்டல துணைத் தலைவர் வாசு, 95 ஆவது வட்டத் தலைவர் ஜெயக்குமார், 191 வது வார்டு வட்டத் தலைவர்  வெங்கடேசன் ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பூத் ஏஜெண்ட்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராற்றில் பாஜக மாவட்ட செயலாளருக்கு சொந்த கட்சியினரே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.