Skip to main content

“சிம்பிளி வேஸ்ட்...” - பட்ஜெட் குறித்து இ.பி. எஸ். கருத்து!

Published on 16/03/2025 | Edited on 16/03/2025

 

Simply a waste EPS opinion on the budget

தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று முன்தினம் (14.03.2025) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியிருந்தன. முன்னதாக தமிழக அரசின் மாநில திட்டக்குழு சார்பில் தயாரிக்கப்பட்ட 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கையைத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் கடந்த 13ஆம் தேதி(13.03.2025)  வெளியிட்டார். பொருளாதார ஆய்வு அறிக்கையைத் தமிழக அரசு வெளியிடுவது இதுவே முதல்முறையாகும்.

அதோடு பட்ஜெட் இலச்சினையில் ரூபாய் (₹) என்ற அடையாளக் குறியீட்டிற்குப் பதிலாகத் தமிழ் எழுத்தான ‘ரூ’ என்பதைக் குறிக்கும் வகையில் இலச்சினை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். இது இந்திய அளவில் சர்ச்சை ஏற்படுத்தியிருந்தது. மற்றொரு புறம் உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் சமூக வலைத்தளங்கள் வாயிலாகக் கேள்விகளுக்குக் காணொளி வாயிலாகப் பதிலளித்து வருகிறார். அந்த வகையில் இன்று (16.03.2025) ‘ரூ’ என்பது பெரிதானது ஏன்? எனக் கேள்வியுடன் தமிழக பட்ஜெட் எல்லாத் திட்டங்களும் எனக்கு நெருக்கமானவைதான் என்றாலும்; சில திட்டங்களை உருவாக்கியது எப்படி என்று பகிர்ந்துகொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த காணொளியில், “தமிழ்நாடு பட்ஜெட் லோகோவை வெளியிட்டு இருந்தேன். மொழிக் கொள்கைகளில் எந்த அளவு உறுதியாக உள்ளோம் என்று காட்ட அதில் ‘ரூ’ என்று வைத்திருந்தோம். அவ்வளவுதான். ஆனால் தமிழைப் பிடிக்காதவர்கள் அதைப் பெரிய செய்தி ஆக்கிவிட்டனர். ஒன்றிய அரசிடம் 100 நாள் வேலைத் திட்டத்திற்கான சம்பளத்தைத் தாருங்கள். பேரிடர் நீதி தாங்கள். பள்ளிக் கல்வி நிதியை விடுவியுங்கள் என்று தமிழ்நாடு சார்பாக 100 கோரிக்கைகள் வைத்திருப்பேன். அதற்கு எல்லாம் பதில் பேசாத மத்திய நிதி அமைச்சர் இதைப் பற்றிப் பேசி உள்ளார். அவரே பல பதிவுகளில் ‘ரூ’ என்றுதான் வைத்துள்ளார். ஆங்கிலத்திலும் எல்லோரும் ருபீஸ் (RUPEES) என்பதை எளிதாக ஆர்.எஸ். (Rs) என்று தான் எழுதுவார்கள். அதெல்லாம் பிரச்சினையாகத் தெரியாதவர்களுக்கு இதுதான் பிரச்சினையாகத் தெரிகிறது போல. மொத்தத்தில் இந்திய அளவில் நம்ம பட்ஜெட்டும் ஹிட்; தமிழும் ஹிட்” எனப் பேசியுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மக்களுக்கு ஒன்றுமே இல்லாத வெற்று பட்ஜெட்டை மறைக்க,  ஒரு வீடியோஷூட் நடத்தி வெளியிட்டுள்ளார் முதல்வர் மு.க. ஸ்டாலின். உலகப் பொருளாதார அறிஞர்களுடன் இணைந்து இந்த பட்ஜெட்டை தயாரித்ததாக அவர் கூறியிருப்பது, இந்த பொருளாதார ஆண்டின் நல்ல நகைச்சுவை. தன் பட்ஜெட் பற்றி நாளேடுகள் என்ன சொல்கின்றன என்பதை ஆர்வத்தோடு படித்துக் காட்டும் இவர், அதே நாளேடுகளில் நாள்தோறும் வருகின்ற இந்த ஆட்சியின் அவலங்கள் குறித்த செய்திகளை இதே அர்ப்பணிப்புடன் படித்துக் காண்பிப்பாரா?.

Simply a waste EPS opinion on the budget

உலகத்திலேயே தன் கட்சியின் ஐ.டி. விங்கைச் சேர்ந்தவர்களின் பதிவுகளையே, மக்கள் கருத்தாகக் கருதி புளகாங்கிதம் அடையும் ஒரே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான். தன் பட்ஜெட் பற்றி தலைமைச் செயலக ஊழியர்கள் நினைப்பது என்ன? ஆசிரியர்கள் நினைப்பது என்ன? இதர அரசு ஊழியர்கள் நினைப்பது என்ன? விவசாயிகள், தொழில் முனைவோர், உழைக்கும் மக்கள் நினைப்பது என்ன என்பதே அறியாமல், ‘ரூ’ போட்டதால் பட்ஜெட் ஹிட் ஆகிவிட்டது என்று சினிமா வசனம் பேசுகிறார். பட்ஜெட் ஹிட் ஆவது என்பது அறிவிப்பதில் இல்லை- செயல்படுத்துவதில் என்பதே உண்மை. அப்படி பார்த்தால், திமுக ஆட்சிக்கு வந்து போட்ட 5 பட்ஜெட்டுமே அட்டர் பிளாப் (UTTER FLOP) தான்.

72 ஆண்டுகால தமிழ்நாட்டு ஆட்சிகளின் மொத்த கடனையும் 4 ஆண்டுகளில் வாங்கி, கடன் வாங்குவதில்  ரெக்கார்ட் பிரேக் (Record Break) மற்றும் பிளாக் பஸ்டர் (Blockbuster) சாதனை செய்த ஒரே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் இந்த பட்ஜெட் தான் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ‘தி.மு.க.-வின் இறுதி பட்ஜெட்’ என்பது மக்களின் கருத்து. இந்த பட்ஜெட்…, சிம்பிளி வேஸ்ட் (SIMPLY WASTE..!) எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்