
அனைத்திந்திய சமூக நீதிக்கான கூட்டமைப்பு சார்பில் 3 வது தேசிய கருந்தரங்கம் புது தில்லியில் நடைப்பெற்றது. மூத்த வழக்கறிஞரும், திமுக எம்பியுமான பி. வில்சன் தலைமையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், சாதி வாரி கணக்கெடுப்பு, பெண் உரிமைகள் பாதுகாப்பு மற்றும் இடஒதுக்கீடு இவை தான் சமூக நீதியை காக்கும் தூண்கள் என்ற தலைப்பில் இந்தியாவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியை துவங்கி வைத்து பேசிய எம்பி வில்சன், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு சமூக நீதி என்ற கருவி மிகவும் அவசியமானது என்றும் அதற்கு சாதி வாரியான புள்ளி விவரங்கள் திரண்ட வேண்டும் என்றார். சாதி ரீதியான முறையான தரவுகள் இல்லாமல் இருப்பதால் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் முன்னேறி வரும் இந்த காலக்கட்டத்தில், சாதி ரீதியான புள்ளி விவரங்களை திரண்டுவது கடினமான பணி அல்ல என்று தெரிவித்தார்.

இதை தொடர்ந்து பேசிய விடுதலைக்கான இந்திய பொதுவுடமை கட்சியின் பொதுச்செயலாளர் தீபாங்கர் பட்டாச்சாரியா, பெண்களுக்கு சம அதிகாரமளித்தல், இடஒதுக்கீட்டை அதிகரிப்பது மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துதல் போன்றவற்றை உள்ளடக்கிய சமூக நீதியுடன் நமது மண்ணை ஜனநாயகப்படுத்த வேண்டும் என கூறினார்.
ஆம் ஆத்மி, நாடாளுமன்ற உறுப்பினர்,சஞ்சய் சிங் பேசிய போது, சாதி, நம்பிக்கை, மொழி, இடத்தின் பெயரால் தேசத்தை இத்தனை வருடங்களாகப் பிரித்தது ஆர்எஸ்எஸ் அமைப்பு. அந்த அமைப்பின் தலைவர்கள் யாரும் தாழ்த்தப்பட்ட சமூகங்களில் இருந்து வரவில்லை என்றும் அவர்கள் தான் இந்துக்களின் பாதுகாவலர்கள் என பேசி வருவது வேடிக்கையாக உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் சாதிவாரி மக்கள் தொகை குறித்த புள்ளி விவரங்கள் தெரியாவிட்டால், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாத நிலை உருவாகும் என்றும் அவர்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க முடியாமல் போகும் என தெரிவித்தார்.
முன்னாள் எம்.பி இந்திய தேசிய காங்கிரசின் செயற்குழு உறுப்பினருமான பி.எல்.ஹரிபிரசாத் பேசிய போது, இடஒதுக்கீடு தகுதி மற்றும் திறமையை சமரசம் செய்யும் என்று இடஒதுக்கீட்டிற்கு எதிராக திட்டமிட்ட பிரச்சாரம் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். அந்த பிரச்சாரத்தின் படி பார்த்தால் 69% உள்ள தமிழகம் வளர்ச்சியடையாமல் இருக்க வேண்டும். ஆனால், சமூக வளர்ச்சிகான குறியீட்டில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகவும், இடஒதுக்கீட்டுன் முன் மாதிரியாக தமிழ்நாடு திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் தமிழகம் போல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களும் இடஒதுக்கீட்டை பின்பற்றுவதால் அந்த மாநிலங்களும் வளர்ச்சி அடைந்து வருவதாக குறிப்பிட்ட அவர், இத்தகைய மாநிலங்கள் தான் மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி. மூலம் அதிக வருவாயை மத்திய அரசுக்கு வழங்கி வருவதாக குறிப்பிட்டார்.
வரியில் பங்களிக்க மாநிலங்கள் தயாராக இருந்தாலும் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நீதியும் கிடைக்காத நிலை இந்தியாவில் இருப்பதாகவும், உலகில் தீண்டாமை எங்கும் நடைமுறையில் இல்லாத நிலையில் இங்கு மட்டும் தான் சாதியின் பெயரால் தீண்டாமை தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். இந்தியாவின் வடக்குப் பகுதிகளைச் சேர்ந்த ஓபிசி தலைவர்கள் இதைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். பெரியார், நாராயண குரு, பசவண்ணா டிஎன்ஏ ரேவண்ணா, பூலே ஆகியோர் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களை பாதுகாத்து வருகின்றனர். இட ஒதுக்கீடு என்பது தொண்டு அல்லது வறுமை ஒழிப்பு திட்டமல்ல. அது சமத்துவம் என அவர் தெரிவித்தார்.
முன்னாள் எம்.பி., தெலுங்கு தேசம் கட்சி. சேர்ந்த மஸ்தான் ராவ், ஜாதிவாரி கணக்கெடுப்பு மிக அவசியம் என்றும் அனைத்து துறைகளிலும் ஓ.பி.சி(OBC) பிரதிநிதித்துவத்தை மேம்படுத்த வேண்டும் மற்றும் அவர்கள் வாழ்வாதரத்தை உயர்த்த வேண்டும் அந்த முயற்சியை தேசிய ஓ.பி.சி(OBC) வர்த்தக சபை ஏற்கனவே செய்து வருவதாக தெரிவித்தார். இடஒதுக்கீடு, சமூக நீதியை பெற தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் எம்பி வில்சன் எடுத்து வரும் முயற்சிகள் மிகவும் மெச்சத்தக்கது என பாராட்டினார்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்பி பௌசியா தஹ்சீன் அகமத்கான் கூறிய போது, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நிகழும் போதெல்லாம் நீதி உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்பதற்காக விரைவு நீதிமன்றங்கள் நமக்குத் தேவை. அதற்காக நீதித்துறையில் சீர்திருத்தங்கள் இன்னும் தேவைபடுவதாகவும், அதற்கு மாநில அரசுகள் முன் வர வேண்டும் என்றும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் என்பது பெண்கள் தொடர்பான பிரச்சனைகள் மட்டுமல்ல, இது ஒட்டுமொத்த மக்களின் பிரச்சனைகள் என்று தெரிவித்த அவர், எம்பி வில்சன் நடத்துவது போன்ற சமூக நீதி மாநாடுகள் நாட்டின் மூலை முடுக்கெல்லாம் நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இடஒதுக்கீட்டில் நீதித்துறை அரசியல் சாசனத்தின் அடைப்படையில் முடிவெடுக்க வேண்டும். மாறாக எந்த கடவுள் அல்லது எந்த நம்பிக்கையையும் கேட்டு முடிவெடுக்கு கூடாது என்று கூறிய அவர், ஜாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவும், இடஒதுக்கீட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யவும் வற்புறுத்துவதாக தெரிவித்தார்.

மதிமுக பொதுசெயலாளர் வைகோ, மதச்சார்பின்மையை சமூக நீதியின் மூலம் வளர்த்தது திராவிட இயக்கம் தான் என தெரிவித்தார். சாதிவாரி கணக்கெடுப்பு நாட்டின் மக்கள் நிலையை தெரிய வைப்பதால், அதற்கேற்ப கொள்கைகளை உருவாக்க அது வழி வகுக்கும் என்றார். மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை இந்த அரசு வலியுறுத்தினால், சோவியத் யூனியனில் நடந்தது இந்தியாவிலும் நடக்கும், இந்தியாவை பிளவுப்படுத்தும் எண்ணத்தை எச்சரிக்கிறேன் என வைகோ கூறினார். உச்ச நீதிமன்ற உத்தரவின் படி 50% இடஒதுக்கீடு உச்சவரம்பு என்பதை அகற்ற வேண்டும் என் வலியுறுத்திய பிருந்தா காரத், பக்கவாட்டு நுழைவு என்ற பெயரில், காலியிடங்களை ஆர்எஸ்எஸ்-ஐச் சேர்ந்தவர்களை கொண்டு நிரப்பத் திட்டமிட்டு வருவதாக தெரிவித்தார். அதேசமயம், ஒதுக்கப்பட்ட பிரிவுகளில் உள்ள பின்னடைவு காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதுபோன்ற முயற்சிகளை எதிர்த்துப் போராடுவதில் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இதனையடுத்து பேசிய தேஜஸ்வி யாதவ், ஜார்கண்டில் நாங்கள் கூட்டணியாக போராடி வெற்றி பெற்றோம். டெல்லி மற்றும் பீகாரில் தேர்தல் வரும்போது, கூட்டணியாக போட்டியிடுவோம், அந்த தேர்தலிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளதாக தெரிவித்தார்.
திராவிட கழகத் தலைவர் திரு.கி.வீரமணி, இட ஒதுக்கீடு அதிசயமாக நடந்ததா? இல்லை. மக்களை ஒருங்கிணைத்தால் நடந்தது என்றார். மேலும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் இடஒதுக்கீட்டை பெற்று கொடுக்க வேண்டும் என்றார். இடஒதுக்கீடு நமது உரிமை அது சலுகை அல்ல. அரசியலமைப்புச் சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளபடி அது நமது சொந்தமானது என வீரமணி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், இந்த மாநாட்டை நடத்த எம்பி வில்சன் மேற்கொண்ட முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுகளை தெரிவிப்பதாகவும், எம்பி வில்சன் சமூக நீதியை கொண்டு வருவதற்கான முன் முயற்சிகளை ஆர்வமாக மேற்கொள்வது மிகவும் பாராட்டுதலுக்கு உரியது எனவும் குறிப்பிட்டார். மேலும் இதில் கலந்து கொண்ட அனைத்து தலைவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியா முழுவதும் மக்கள் பாதுகாக்கப்பட இடஒதுக்கீடு அடிப்படையில் காலியிடங்களை நிரப்புதல், நீதித்துறை நியமனங்களில் இடஒதுக்கீடு, இடஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பை நீக்குதல், மாநிலங்கள் தங்கள் இடஒதுக்கீட்டுக் கொள்கையை வகுக்க அதிகாரம் அளிப்பது - இவையெல்லாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின், இடஒதுக்கீடு தொடர்பான முதல் அரசியல் சட்டத் திருத்தத்துக்கு வழிவகுத்தது தமிழகத்தில் அன்றைய காலக்கட்டத்தில் நடந்த் முயற்சியால் தான் என தெரிவித்தார். தமிழ்நாடு கொடுத்த அழுத்தம் தான் அன்றைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு இடஒதுக்கீடு தொடர்பான சட்டத்திருத்ததை கொண்டு வந்ததாகவும் குறிப்பிட்டார். சாதிவாரி கணக்கெடுப்புக்காக நாம் அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்றும் எஸ்சி எஸ்டி ஓபிசிக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், நீதித்துறை நியமனங்களில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா, பெண்கள் மற்றும் ஓபிசியினருக்கு தங்கள் அரசு நிறைய செய்துள்ளதாகவும், ஓபிசிக்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியதாகவும் குழந்தைகள் கல்வியை நிறுத்தாமல் இருப்பதை உறுதி செய்தோம், பெண்கள் புர்கா அணிந்து வீட்டில் எப்போதும் உட்கார வேண்டாம் என்று தெரிவித்தோம், பிளவுகளைத் தொடர்ந்தால் இந்தியாவை எப்படி வலிமையாக்க முடியும் என்றார். நிலத்தை கூட முஸ்லிம்கள் பறித்துவிடுவார்கள் என்று சிலர் அச்சத்தை உருவாக்கினர். ஆனால் வேறு கலாச்சாரமாக இருந்தாலும் தமிழ்நாட்டையும் ஜம்மு காஷ்மீரையும் இணைத்ததுள்ளது சமூக நீதி என்ற கொள்கை தான். இந்தியாவை வலிமையாக்க நாம் இணைந்து செயல்பட வேண்டும். இந்தியா மீண்டும் பிரகாசிக்கும், இந்த இருள் மேகம் நீங்கும் என்று நான் நம்புகிறேன் என பேசினார்.

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் பேசிய போது, மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த, ஆயிரக்கணக்கான சமாஜ்வாதி கட்சியினர் போராடி சிறை சென்றனர். அனைவருக்கும் எல்லாம் என்ற இலக்கை அடைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் எங்கள் கட்சி கைகோர்த்து போராடும் என்றார்.

அதனை தொடர்ந்து பேசிய விசிக தலைவர் திருமாவளவன், ஜாதிவாரி கணக்கெடுப்பு இல்லாமல் சமூக நீதிக்கான நோக்கத்தை முழுமையாக அடைய முடியாது என்பதால் சமூக நீதியை அடைய எந்த எல்லைக்கும் செல்வோம் என தெரிவித்தார்.

ஜார்கண்ட் முதல்வர் ஹேமன் சோரன் , முலாயம் சிங் யாதவ், கலைஞர் போன்ற தலைவர்கள் மக்களுக்கு சமூக நீதி கிடைக்க எப்படி போராட வேண்டியிருந்தது என்பதை அகிலேஷ் யாதவ் விவரித்தார். இதனை தொடர்ந்து சமூக நீதியை பெறுவதற்கான நீண்ட போர் இன்னும் முடிவடையவில்லை என தெரிவித்தார்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, ஜாதிவாரி கணக்கெடுப்பு இன்றியமையாதது, சாதிகளை கணக்கெடுக்க ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எது அளவிடப்படுகிறதோ அது மட்டுமே நன்றாக நிர்வகிக்கப்படும். விரிவான சாதி தரவு இல்லாமல், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொது நலனில் இட ஒதுக்கீடு போன்ற உறுதியான செயல்களை திறம்பட செய்ய முடியாது என தெரிவித்தார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசும் போது, பாஜக தூண்டுதலால் சில அரசியல் கட்சிகள் ஜாதிவாரி கணக்கெடுக்கும் பொறுப்பை மாநில அரசுகள் மீது சுமத்தி வருகின்றன. இது தாமதப்படுத்தும் தந்திரம். இடஒதுக்கீடு என்பது சமூக நீதியின் முக்கிய தூண், எந்த விலை கொடுத்தேனும் அதை பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரும், ஜார்கண்ட் மாநில முதலமைச்சருமான ஹேமந்த் சோரன், சமாஜ்வாடி கட்சியின் தலைவர், உத்தரபிரதேச முன்னாள் முதவரும் எம்பியுமான அகிலேஷ் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தள் கட்சியை சார்ந்தவரும் பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வராகவும் இருந்த தேஜஸ்வி யாதவ், இந்திய தேசிய காங்கிரஸ் காரிய கமிட்டியின் சார்ந்தவரும், முன்னாள் எம்பியுமான பீ.கே ஹரிபிரசாத், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், முன்னாள் மத்தியமைச்சரும், எம்பியுமான, ஃபரூக் அப்துல்லா, இந்திய கமியூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளரும், முன்னாள் எம்பியுமான டி.ராஜா, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சார்ந்தவரும் முன்னாள் எம்பியுமான பிருந்தா காரத், திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் டாக்டர் கி வீரமணி, மதிமுக பொதுசெயலாளரும், எம்பியுமான வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்பியுமான தொல்.திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் எம்பியுமான பேராசிரியர் எம் ஹெச் ஜிவாஹிரவைத்துள்ளது.குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவரும், எம்பியுமான இ.ஆர் ஈஸ்வரன், ஆம் ஆத்மி கட்சியை சார்ந்தவரும் எம்பியுமான சஞ்சய் சிங், தேசிய வாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி, டாக்டர் பெளசிஷியா தஹ்சின் அஹமத் ஹான், பாரதீய ராஷ்ரிய சமிதி கட்சியை சார்ந்த எம்பி கே.ஆர் சுரேஷ் ரெட்டி, ஜனதா தள் கட்சியின் எம்பி கிரிதரி யாதவ்,ராஷ்ரிய ஜனதா தள் எம்பி மனோஜ் குமார் ஜகா, தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்பி மஸ்தான் ராவ், ஐயுஎம்எல் கட்சியின் எம்பி முகமது பசீர், சிவ் சேனா கட்சியின் எம்பி பிரியங்கா சதுர்வேதி, விடுதலைக்கான இந்திய பொதுவுடமை கட்சியின் பொதுச்செயலாளர் தீபாங்கர் பட்டாச்சாரியா, அனைத்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் பொதுசெயலாளர் தேவராஜன், உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இந்த மாநாடு இந்திய அரசியலை திரும்பி பார்க்க வைத்துள்ளது.