Skip to main content

அ.தி.மு.கவை கைப்பற்றுவாரா சசி? எதிர்பார்ப்பும் அச்சமும்! - கட்சியினர் மனநிலை!

Published on 17/02/2021 | Edited on 17/02/2021

 

Sasikala

 

சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு, 4 ஆண்டு சிறைவாசம் சென்ற சசிகலா விடுதலையாகி, பெங்களூருவிலிருந்து வழிநெடுக வரவேற்புடன் 23 மணி நேரம் பயணித்தார். சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர். இல்லத்தில் மரியாதை செலுத்தி, தியாகராய நகரில் உள்ள வீட்டுக்கு சசிகலா சென்ற நிலையில், நாட்டு நடப்பு இனி எப்படி இருக்கும் என அ.தி.மு.க.வினரிடம் கேள்வி உள்ளது.

 

சசிகலாவை வரவேற்று போஸ்டர் ஒட்டிய அ.தி.மு.க.வினர் கட்டம் கட்டப்பட்டனர். அ.தி.மு.க. கொடி பறக்க சசிகலா பயணிக்க கார் தந்தவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், கிரேன் மூலம் ஆப்பிள் மாலை, செண்டை மேளம், பூரண கும்பம், சுவரொட்டிகள் என அமர்க்களம் ஒருபுறம். இன்னொருபுறம், போஸ்டர்களில் சசிகலா படத்தை மட்டும் கச்சிதமாகக் கிழிப்பது, கண்ணை நோண்டுவது போன்ற செயல்பாடுகள்.

 

என்னதான் நினைக்கிறார்கள் அ.தி.மு.க.வினர்?

 

‘தலைமை என்ன நடவடிக்கை எடுத்தாலும் கவலையில்லை. நாங்கள் சசிகலா ஆதரவு நிலையில் உறுதியாக இருக்கிறோம்..’ என்பதை வெளிப்படுத்தும் விதமாக விருதுநகர், செந்நெல்குடியைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர்கள் நால்வர், "தொண்டர்களைக் காக்கவரும் தியாகத் தலைவியே! வருக தாயே!'’ என்று தங்களது முகவரியோடு, அ.தி.மு.க. அடையாள அட்டைகளையும் போஸ்டரில் அச்சிட்டு ஒட்டியிருந்தனர். "அடிமட்டத் தொண்டராக இருந்த எடப்பாடி பழனிசாமியை முதல்வராக உருவாக்கியவரே சசிகலாதான்'’ என்று, அக்கட்சியின் தலைமைக்கும், போஸ்டரில் ‘செக்’வைத்தனர்.

Sasikala

 

இதுகுறித்து, விருதுநகர் அதிமுகவில் முக்கிய பொறுப்பு வகிக்கும் ஒருவர், “விருதுநகரில் நான்குபேர் முகத்தைப் போட்டு போஸ்டர் ஒட்டி பரபரப்பு ஏற்படுத்திவிட்டால், தமிழகத்தில் சசிகலாவுக்குப் பெரும்பாலானோர் ஆதரவு இருப்பதாக அர்த்தம் ஆகிவிடுமா? இதெல்லாம் லோக்கல் பாலிடிக்ஸ். விருதுநகர் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பதவி தனக்குக் கிடைக்காததால், ஒரு அணி சேர்த்துக்கொண்டு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரான, ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுமதிக்குக் குடைச்சல் தந்தபடியே இருக்கிறார் ஒன்றிய கவுன்சிலரான செந்நெல்குடி மாரியப்பன். சசிகலா ஆதரவு போஸ்டர் ஒட்டியது அவருடைய மகன் செல்லப்பாண்டியும், அவருடைய ரத்த சொந்தங்களும்தான். இதையெல்லாம் பார்க்கும்போது, 1991 - 96ல் சசிகலாவும், அவரது பெயரைச் சொல்லி அந்தக் குடும்பத்தினரும் போட்ட ஆட்டம் நினைவுக்கு வருகிறது.

 

எம்.ஜி.ஆர். இருந்தபோது, தாழ்த்தப்பட்ட மக்களின் பெருவாரியான ஆதரவு அ.தி.மு.க.வுக்குக் கிடைத்தது. சசிகலா குடும்பத்தினர் தலையெடுத்தப் பிறகே, ஒரு சாதிக்கான கட்சி என்ற இமேஜ் ஏற்பட்டு, தலித் வாக்கு வங்கி எங்கெங்கோ சிதறிப்போனது. எம்.ஜி.ஆர். காலத்தில், நாயுடு சமுதாயத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தார். பிறகு, முக்குலத்தோரான கே.கே.சிவசாமி, ஆர்.பி.உதயகுமார் போன்றவர்களெல்லாம் இங்கே மாவட்டச் செயலாளர் ஆனதற்கு, கட்சியை சசிகலா பின்னால் இருந்து இயக்கியதே காரணம். தற்போது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பிறகு, நிலைமை கொஞ்சம் மாறியிருக்கிறது. ‘ஓ.பன்னீர்செல்வம் பின்னுக்குத் தள்ளப்பட்டதும் கூட, ஒருவகையில் சரிதான். அ.தி.மு.க.வில் மீண்டும் ஒரு சாதி ஆதிக்கம் ஏற்படுமோ என்பது, எங்கள் கட்சியில் உள்ள பிற சமுதாயத்தவர்களின் அச்சமாக, இப்போதும் இருக்கிறது'' என்றார்.

 

மாநில அளவிலான மற்றொரு நிர்வாகியோ தன் பெயரைத் தவிர்க்கச் சொல்லி கருத்து தெரிவித்தார். “தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, அரியலூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய 6 டெல்டா மாவட்டங்களிலும், ஒன்பது தென் மாவட்டங்களில், கன்னியாகுமரி நீங்கலாக, தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய எட்டு மாவட்டங்களிலும், முக்குலத்தோர் வாக்கு வங்கி கணிசமாக உள்ளதாகவும், இந்த மாவட்டங்கள் அனைத்திலும் தற்போது சசிகலா அலை வீசுவதாகவும், பொய்யான ஒரு பிம்பத்தை, திட்டமிட்டே உருவாக்கி வருகின்றனர்.

 

dddd

 

சசிகலாவுக்கு அப்படி எந்தவொரு செல்வாக்கும் இல்லை என்பதற்கு, கடந்த 2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளே சான்றாக உள்ளன. ஜெயலலிதா இருந்த காலத்திலேயே, அ.தி.மு.க. கோட்டை என்று சொல்லப்படும் டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் உள்ள 87 தொகுதிகளில், 53 தொகுதிகளில்தான் அ.தி.மு.க. வால் வெற்றிபெற முடிந்தது.

 

கோடிகளில் சொத்துகளைக் குவித்து, ஊழல் குற்றச்சாட்டு நிரூபணமாகி, சிறைத் தண்டனையை முடித்துவிட்டு, விடுதலையாகி வெளியில் வருபவரை, ‘தியாகத் தலைவி’ என்று, கொஞ்சம் கூட கூச்சப்படாமல் எப்படித்தான் சொல்ல முடிகிறதோ?'' என்று சீறலாக வெடித்தார்.

 

செங்கல்பட்டு மாவட்டம் நெமிலிகுப்பத்தைச் சேர்ந்த கருணாகரன், "நாங்க மீனவர்கள். எப்போ எம்.ஜி.ஆர். ‘படகோட்டி' படத்தில் எங்க கஷ்டத்தை வெளிப்படுத்தி நடித்தாரோ... அப்போவே பெரும்பாலான மீனவர்களின் மனதைப் பிடித்துவிட்டார். அ.தி.மு.க. கட்சி ஆரம்பித்ததில் இருந்தே அவருக்காக இரட்டை இலைக்கு ஓட்டு போட்டோம். பின்னர் ஜெயலலிதா அம்மா தலைமையேற்றதில் இருந்து அம்மாவ நாங்க ஏத்துக்கிட்டோம். ஆனா அவுங்க மறைவுக்குப் பின்னாடி எடப்பாடி எப்படி முதல்வர் ஆனாருனு தெரியல. அதுவும் மக்களால் தேர்வு செய்யப்படல. இந்த நேரத்துல சசிகலா வந்தா எப்படி ஏத்துப்போம். அம்மா ஜெயலலிதாவையே என்ன செய்தாங்கனு தெரியல. அந்த மர்மமே விளங்கலை. இந்த சந்தேகம் இவுங்க மேல இருக்கு.''

 

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹரி, "சசிகலா வந்தாத்தான் நல்லது. இவ்வளவு நாளா அ.தி.மு.க.காரங்கள தட்டிக் கேட்கவோ, எதிர்த்து கேள்வி கேட்கவோ ஆளே இல்லை. அதனால இவுங்க வெக்கிறதுதான் சட்டமா இருந்துச்சு. எல்லாரோட முகத்திலும் இப்போ ஒரு பயம் தெரியுது. மாத்தி மாத்தி பேசியாவது, ஜெயலலிதாம்மா சாவு மர்மம் வெளி உலகத்துக்குத் தெரியுதானு பார்ப்போம்.''

 

கிண்டி பட்ரோட்டைச் சேர்ந்த ரமணி, "நான் அ.தி.மு.க.காரிதான். ஆனா எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மாவ ஏத்துக்கலாம். சசிகலா யாரு..?''

 

திருப்போரூரைச் சேர்ந்த சிவராமன், "இது மேலிடத்து விவகாரம். சசிகலா வருகையினால் அ.தி.மு.க.வுக்கு எந்தப் பாதிப்புமில்லை. மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள்னு வரவேற்புக்குக் கூட யாரும் செல்லவில்லேயே..? ஒருவரும் அ.ம.மு.க.வில் சேரவில்லையே! எடப்பாடியின் சிறப்பான ஆட்சி தொடரும்.''

 

ஓ.எம்.ஆர் சாலை நாவலூரைச் சேர்ந்த ரகு, "நான் மீட்டிங்ல இருக்கேன். அப்புறம் பேசுறேன்.''

 

ரகுவைப் போலவே அ.தி.மு.கவில் பொறுப்பில் உள்ள பலரும் சட்டென தொடர்பைத் துண்டித்தனர். “எங்க தலையைப் போட்டு உருட்டாதீங்க. அவங்களே ஒரு முடிவு எடுத்துட்டு வரட்டும்'' என்று சொன்னவர்கள் அதிகம். சசிகலா என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும், அவர் எதுவும் செய்வார் என்ற அச்சம் கலந்த உணர்வும் அ.தி.மு.க.வினரிடம் தெரிகிறது.

 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.