Skip to main content

“என்னை எதிர்த்தால் மீண்டும் 1989!” - சசிகலா திட்டவட்டம்!

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

dddd

 

பா.ஜ.க. நிர்வாகிகளுடன் அதிமுக அமைச்சர்கள் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியிருக்கும் நிலையில், அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பி.எஸ்.ஸும் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியபோது வெளிப்பட்ட அதிருப்தியை, ஒரு தரப்பினர் தகவலாக நம்மிடம் சொன்னார்கள். 

 

“கூட்டணி முடிவாகி ஒப்பந்தத்தில் அமித்ஷா கையெழுத்திடும் நிலை ஏன் வரவில்லை தெரியுமா? சசிகலா அதிமுக பொதுச்செயலாளராகி, அதிமுக ஒருங்கிணைந்து செயல்படாவிட்டால், 16-ஆம் தேதி சசிகலா பொதுச்செயலாளர் ஆகக்கூடிய நிலை உருவாகும். இல்லையென்றால் இரட்டை இலை முடக்கப்படும்.’ என்று அதிரடியாகப் பேசிவிட்டு கிளம்பினார் அமித்ஷா. 

 

அதன்பிறகு, சீனியர் அமைச்சர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ‘தென்மாவட்டம் எப்படி இருக்கிறது?’ என்று கேட்டிருக்கிறார். அப்போது, ‘சின்னம்மாவ சேர்த்தா ஃபுல்லா வந்திடலாம். சேர்க்கலைன்னா தென்மாவட்டத்துல ஒரு சீட் கூட வராது..’ என்று தங்களிடம் ராஜேந்திரபாலாஜி சொன்னதை அப்படியே ஒப்பித்திருக்கிறார்கள், இரண்டு அமைச்சர்கள். அதற்கு ஈ.பி.எஸ். ‘நாலரை வருஷம் அவரை காப்பாத்தி மந்திரியா வச்சிருக்கோம். இப்படியா சொல்லிட்டிருக்காரு?’ என்று டென்ஷனாக, அதற்கும் ராஜேந்திரபாலாஜி வாய்ஸையே ரிபீட் செய்திருக்கின்றனர். ‘என்னை அமைச்சராக்கியது அம்மா. அவங்க பொதுச்செயலாளரா இருந்தப்ப.. முதலமைச்சரா இருந்தப்ப.. எனக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு தந்து மந்திரியாவும் ஆக்கினாங்க. ஈ.பி.எஸ். என்ன பண்ணுனாரு? மாவட்டச் செயலாளர் பொறுப்புல இருந்து என்னை நீக்கினாரு. அப்புறம் மாவட்டப் பொறுப்பாளர் ஆக்கினாரு. இப்ப என்னோட விருதுநகர் மாவட்டத்த ரெண்டாக்கிட்டாரு. சின்னம்மாவ கட்சியில சேர்த்தால்தான் முக்குலத்தோர் ஓட்டு. இல்லைன்னா அந்த சமுதாய ஓட்டு அதிமுகவுக்கு விழாது..’ என்று கூற,  ‘இந்த மாதிரி பேசிக்கிட்டிருந்தா அவரை தொலைச்சிருவேன்’னு ஈ.பி.எஸ்., கூடுதலாகக் கொதித்திருக்கிறார். 

 

கட்சியில் சேர்த்து ‘மீண்டும் சசிகலாவுக்கு எடுபிடிகள்’ ஆவதை விரும்பாத தங்கமணி, வேலுமணி, கே.பி.முனுசாமி, மனோஜ்பாண்டியன் போன்றவர்கள், எடப்பாடி பழனிசாமி பக்கம் உள்ளனர். ஆனாலும், மனோஜ்பாண்டியன் வெளிப்படையாக எந்தக் கருத்தையும் முன்வைக்காமல், ‘ஓ.பி.எஸ். எவ்வழியோ அதுவே என் வழி’ என்பதில் உறுதியாக இருக்கிறார். ‘சின்னம்மாவை சேர்த்தால் நல்லது..’ என்ற ராஜேந்திரபாலாஜியின் கருத்து, ஓ.பி.எஸ்.ஸுக்கு உள்ளுக்குள் ‘ஓ.கே.’ என்றாலும், வெளிப்படையாக ‘ரியாக்ட்’ பண்ணவில்லை.   

 

‘சசிகலாவை சேர்த்தால் முக்குலத்தோருக்கு எதிரான மனநிலையில் உள்ள பிற சமுதாய வாக்குகள் அதிமுகவுக்கு  விழாது. குறிப்பாக பட்டியலின மக்களின் வாக்குகள் மொத்தமாக எதிரணிக்குப் போய்விடும்.’ என்ற கோணத்தில் நிர்வாகி ஒருவர் பேச, ‘ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்தவர் எடப்பாடி பழனிசாமி. இவரை எந்த சமுதாய மக்களும் நம்ப மாட்டார்கள்.’ என்று ‘கமெண்ட்’ அடித்திருக்கிறார் இன்னொரு நிர்வாகி. 


சசிகலா நிலைப்பாடு என்னவாம்? இரட்டை இலைக்கு எதிராக வாக்கு கேட்பதை ஒருநாளும் செய்யமாட்டார். அதேநேரத்தில், பொதுச்செயலாளர் பொறுப்பு இல்லையென்றால், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கவும் தயங்க மாட்டார். சசிகலாவுக்கு எதிரான போக்கினை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்தால், ‘மீண்டும் 1989’ என்ற நிலை ஏற்பட்டு, இன்றைய அதிமுகவே மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்கிவிடும்.” 


இப்படி புலம்பும் நிலைக்கு அதிமுகவினரைக் கொண்டுவந்துவிட்டார் சசிகலா! 

 

 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.