Skip to main content

பேஸ்பால் டெஸ்டை பேட்டிங்கால் தகர்த்து சரித்திரம் படைத்த இந்தியா

Published on 19/02/2024 | Edited on 19/02/2024
ind vs eng bazball test match update india gets a historical win

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ரோஹித் 131 ரன்களும், ஜடேஜா 112 ரன்களும்,  சர்பராஸ் கான் 62 ரன்களும் எடுத்தனர்.  இங்கிலாந்து சார்பில் மார்க் வுட் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக  சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 126 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை துவங்கிய இந்திய அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. ஆனால் அடுத்து களமிறங்கிய கில் பொறுப்புடன் ஆட இந்திய அணியின் ஸ்கோர் 196-2 என மூன்றாவது நாள் ஆட்டம் முடிந்தது.

தொடர்ந்து 4ஆவது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த இந்திய அணிக்கு கில் மற்றும் குல்தீப் சிறப்பாக ஆடினர். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கில் 91 ரன்களில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். பின்னர் ரிட்டையர்டு ஹர்ட் ஆன ஜெய்ஸ்வால் மீண்டும் ஆடக் களமிறங்கினார். சிறப்பாக நைட் வாட்ச்மேன் இன்னிங்ஸ் ஆடிய குல்தீப் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஜெய்ஸ்வாலுடன் சர்பிராஸ் கான் இணைந்தார். இந்த இணை அதிரடி ஆட்டத்தில் கவனம் செலுத்தியது. சிறப்பாக மற்றும் அதிரடியாக ஆடிய ஜெய்ஸ்வால் மற்றும் சர்பிராஸ் கான் இணை பவுண்டரி மற்றும் சிக்ஸர்களையும் அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் டெஸ்ட் போட்டிகளில் தனது இரண்டாவது இரட்டை சதத்தைப் பதிவு செய்தார். மறுமுனையில் சர்பிராஸ் கானும் அரைசதம் கடந்தார். இந்திய அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 430 ரன்களுக்கு இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.  557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடத் தொடங்கியது. ஆனால் தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து திணறத் தொடங்கியது. இந்திய அணியின் சுழலில் இங்கிலாந்து வீரர்கள் சுழற்றி அடிக்கப்பட்டனர். அந்த அணியின் டாப் 4 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.  கேப்டன் ஸ்டோக்ஸ் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். டெயிலெண்டரான மார்க் வுட் மட்டும் அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 122 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக சிறப்பாக செயல்பட்ட ரவிந்திர ஜடேஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி எனும் பெருமை கிடைத்துள்ளது. இதற்கு முன்பு 2022இல் நியூசிலாந்துக்கு எதிராக 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது. இங்கிலாந்து டெஸ்ட் வரலாற்றில் இது இரண்டாவது மோசமான தோல்வியாகும். இதற்கு முன் 1934 இல் ஆஸி.க்கு எதிராக 562 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதே மிகவும் மோசமான தோல்வியாகும்.

மேலும் இந்த ஆட்டத்தில் ஜெய்ஸ்வால் அடித்த சிக்சர்கள் மூலம் பல சாதனைகள் படைக்கப்பட்டுள்ளது.  அவர் அடித்த 12 சிக்சர்கள் மூலம் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் எனும் வாசிம் அக்ரம் சாதனையை சமன் செய்துள்ளார். இந்த சீரிஸில் 48 சிக்சர்கள் அடிக்கப்பட்டதன் மூலம் ஒரு சீரிஸில் அதிக சிக்சர் அடித்த அணி எனும் தன் சாதனையை இந்திய அணி, தானே முறியடித்துள்ளது.

- வெ.அருண்குமார்