காங்கோ நாட்டிலிருந்து ஹஜ் யாத்திரைக்காக சவூதி வருபவர்களுக்கு விசா வழங்குவதை அந்நாடு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

ஆப்பிரிக்கா நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கம் கடுமையாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அண்மையில் எச்சரித்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் அந்நாட்டில் பரவ ஆரம்பித்த எபோலா வைரஸ் காரணமாக இதுவரை 1700 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் இந்த நோயினால் பாதிக்கப்பட்ட மூன்றில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். காங்கோவில் இந்த நோயின் தாக்கம் அதிக அளவில் இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சவூதி அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து சவூதி வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "எபோலா வைரஸ் பாதிப்பு காரணமாக காங்கோ நாட்டிலிருந்து வரும் யாத்திரீகர்களுக்கு விசா வழங்குவது தடை செய்யப்படுகிறது. ஹஜ் பயணம் மேற்கொள்ளும் மற்ற பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கோ நாட்டிலிருந்து அடுத்த மாதம் ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக பலர் விண்ணப்பத்திருந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.