![nobel prize for medicine 2020](http://image.nakkheeran.in/cdn/farfuture/o0YUtvhpzHlKYY6btdZ7ZgeASfGty85p3nnY5sONfio/1601895091/sites/default/files/inline-images/dhfsfh.jpg)
உலகின் மிக உயரிய விருதுகளுள் ஒன்றாகக் கருதப்படும் நோபல் பரிசு இன்று முதல் அறிவிக்கப்பட உள்ளது.
மனித குலத்துக்குப் பயனளிக்கும் வகையில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயலாற்றியவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் தொழிலதிபர் மற்றும் அறிவியலாளரான ஆல்ஃபிரெட் நோபலின் விருப்பத்திற்கு இணங்க, அவரது நினைவாக ஆண்டுதோறும் வழங்கப்படும் இதில், இந்த ஆண்டு 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என மொத்தம் 318 பேர் விருதிற்காகப் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெறுபவர்களின் பெயர்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன . இதன்படி நோபல் பரிசுக்கு ஹார்வே ஜே ஆல்டர், மைக்கேல் ஹாங்டன், சார்லஸ் எம் ரைஸ் ஆகிய 3 பேரின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. நோவல் வைரஸ் மற்றும் ஹெபடைட்டிஸ் சி வைரஸ் கண்டுபிடிப்புக்காக 3 பேருக்கும் இந்த கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது. நாளை (6ம் தேதி) இயற்பியல் துறைக்கும், 7ம் தேதி வேதியியல் துறைக்கும், 8ம் தேதி இலக்கியத்திற்கும், 9ம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், 10ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது.