இந்து அறநிலையத்துறையில் பணியாற்றும் ஆணையர்கள் முதல் அனைத்து ஊழியர்களும், தான் ஒரு இந்து என உறுதிமொழி எடுக்க வேண்டும் என்ற விதியை 8 வாரத்தில் நடைமுறைப்படுத்த இந்து அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்து அறநிலையத்துறையில் பணிநியமனம் செய்யப்பட்ட அதிகாரிகள், எந்த கோயிலில் பணியாற்றுகிறார்களோ அந்த கோயிலின் மூலக்கடவுள் முன்பு உறுதிமொழி எடுக்க வேண்டுமென, அறநிலையத்துறையில் சட்டம் உள்ளது. இதுதொடர்பாக, தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் கேட்கும்போது, எந்த ஒரு அதிகாரியும் இந்து என்று உறுதிமொழி எடுக்கவில்லை, பணிக்கான நிபந்தனையை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்கள் கடைப்பிடிக்கவில்லை என்று தெரியவந்தது.
![Workers in the Hindu Charity Department are ordered to take oaths](http://image.nakkheeran.in/cdn/farfuture/QWHbyrBcy18vCwURaY4hs-w64mfa-JQ9oDsQ26k3SCw/1583256087/sites/default/files/inline-images/images%20%2818%29_1.jpg)
இது தொடர்பாக, இந்து அறநிலையத்துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், இந்து என உறுதி மொழி எடுக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த ஸ்ரீதரன் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகேயன், கோவில் அறங்காவலர் மற்றும் நிர்வாகிகள் இந்து என்று உறுதி மொழி எடுத்திருப்பதாகவும், இந்து அறநிலையத் துறையால் நியமிக்கப்பட்ட ஆணையர் மற்றும் அதிகாரிகள் அரசு ஊழியர்கள் என்பதால் இதுவரை இந்து என்று உறுதிமொழி எடுக்கவில்லை என்றும், நீதிமன்றம் உத்தரவிட்டால் அதிகாரிகளும் இந்து என்று உறுதி மொழி எடுக்கும் விதி கடைபிடிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள், இந்து அறநிலையத்துறை விதிகளின் படி, கோவிலில் பணியாற்றும் ஆணையர், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும், தான் இந்து என்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என்பதை 8 வாரங்களில் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டனர். இனி வரும் காலங்களில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நியமிக்கப்படும் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள், தாங்கள் பணியாற்றும் கோவிலில் இந்து என்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என்ற விதியை பின்பற்ற உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.