!['We will hoist the victory flag on June 4; Let's make a tribute to the kalaingar' - M.K.Stalin's flap for volunteers](http://image.nakkheeran.in/cdn/farfuture/pE0sLfGBPgpoiawFl_6eJXElKjNPyYig0dtAp_LKkB8/1716702570/sites/default/files/inline-images/a71885.jpg)
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அதில், 6 கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ளது. இதற்கிடையே, இறுதிக்கட்டத் தேர்தலான ஜூன் 1ஆம் தேதி அன்று நடைபெறும் ஏழாம் கட்ட வாக்குப்பதிவை எதிர்கொண்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஜூன் நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்நிலையில் கலைஞர் நூற்றாண்டு விழா நிறைவையொட்டி திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், 'கலைஞர் நம்மை இயக்குவதால் தான் திமுக எனும் அரசியல் பேரியக்கத்தை வெற்றிகரமாக இயக்க முடிகிறது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் நான்காம் தேதி வெற்றிக்கொடி ஏற்றுவோம். இந்தியாவின் வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக்குவோம்.
ஜூன் மூன்றாம் தேதி கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாட வேண்டும். உள்ளூர் மைதானங்களில் இளைஞர்கள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றியை கலைஞருக்கு காணிக்கையாக வேண்டும். மதவெறி அரசியல் நடத்துவோர் எந்த மாநிலத்திலும் பேசினாலும் திமுக மீது தாக்குதலை நடத்துகிறார்கள். திமுக மீது வன்மத்தை கக்குகிறார்கள். வதந்திகளை பரப்புகிறார்கள். தோல்வி பயத்தில் நடுங்குவது அவர்களின் குரலில் வெளிப்படுத்துகிறது. திமுக தோழமையில் புதிய இந்தியா உருவாகப் போவதை உணர்ந்து அவர்கள் புலம்புவதைக் காண முடிகிறது' என தெரிவித்துள்ளார்.