Skip to main content

மழைநீரை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை!

Published on 07/11/2021 | Edited on 07/11/2021

 

 

Wartime action to remove rainwater!

சென்னையில் நேற்று (06/11/2021) இரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக, சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. ஆங்காங்கே, மரங்களும் சாலைகளில் முறிந்து விழுந்து கிடப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். அதேபோல், பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 

 

மழைநீரை அகற்றும் பணிகளில் பெருநகர சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முகாம்களில் தங்க வைப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகமும், அரசும் முடுக்கிவிட்டுள்ளது. 

 

இந்த நிலையில் தனியார் செய்தித் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பெருநகர சென்னை மாநகராட்சியின் ஆணையர் ககன்தீப் சிங் பேடி, "மழைநீரை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை பாதிப்புள்ள பகுதிகளை மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மடிப்பாக்கம், வில்லிவாக்கம், கொரட்டூர், பகுதிகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். 

 

மழை பாதிப்புகள் தொடர்பாக அமைச்சர்களும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 507 இடங்களில் மோட்டார் மூலமாக தண்ணீரைஅகற்றும் பணி நடைபெற்று வருகிறது. கழிவுநீர் வடிகால்கள் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கனமழை பெய்து வருவதால், மழைநீர் வடிவதற்கு வெகு நேரமாகிறது. மதியத்திற்கு மேல் மழை குறையும் என எதிர்பார்க்கிறோம். கனமழை பெய்து வருவதால், மீட்பு நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

 

தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்களை பள்ளிகளில் தங்க வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மழைநீர் பாதிப்பு இருந்தால் அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்." இவ்வாறு பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்