Skip to main content

காய் நகர்த்தும் ப.சிதம்பரம்! பிரேமலதா தீவிரம்! ராஜேந்திரபாலாஜிக்கு சாதகம்!

Published on 12/03/2019 | Edited on 12/03/2019



திமுக – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் மாணிக்கம் தாகூர் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது என்று பேசப்படும் நிலையில், டெல்லியில் இதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார் ப.சிதம்பரம் என்று கொளுத்திப் போடுகிறார்கள் கதர்ச்சட்டையினர். 

 

p


காங்கிரஸ் மேலிடத்திடம் ப.சிதம்பரம் வைக்கும் கோரிக்கை என்னவென்றால், 17-வது மக்களவைத் தேர்தலில் போட்டியிடக்கூடிய காங்கிரஸ் வேட்பாளர்கள், தனிப்பட்ட முறையிலும் மக்களிடம்  செல்வாக்கு பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான். ப.சிதம்பரம் இப்படிச் சொல்வதன் பின்னணியில், அவருக்குச் சாதகமான சில விஷயங்கள் இருக்கின்றன.  அவை என்னவென்றால், கடந்த 2014 மக்களவைத் தேர்தலில், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைத்திருந்தது காங்கிரஸ். அப்போது  காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்களாக சிவகங்கையில் கார்த்தி சிதம்பரமும், விருதுநகரில் மாணிக்கம் தாகூரும் போட்டியிட்டனர்.

 

சிவகங்கையில் பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜாவைவிட வாக்குகள் குறைவாகப் பெற்று  நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருந்தாலும்,  கார்த்தி சிதம்பரத்தால்  1,04,678 வாக்குகளைப் பெற முடிந்தது. விருதுநகரில் மாணிக்கம் தாகூர் பெற்ற வாக்குகளோ 38,482 ஆகும். அதனால்தான், பாராளுமன்ற தொகுதியில் குறைந்தபட்சம் 1 லட்சம் வாக்குகளைப் பெற்று தங்களின் செல்வாக்கை நிரூபித்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்தத் தடவை வாய்ப்பளிக்க வேண்டும் என்று லாபி செய்கிறார் ப.சிதம்பரம். 

 

s

 

சிவகங்கையில் ப.சிதம்பரத்துக்கு எதிர் அரசியல் பண்ணுபவர் முன்னாள் மத்திய அமைச்சர்  சுதர்சன நாச்சியப்பன். இவருடைய மகன் ஜெயசிம்மன், சோனியா காந்தியின் உதவியாளர் ஜார்ஜின் உறவுக்காரப் பெண்ணைக் காதலித்து மணந்தவர். அதனால், சோனியாவிடம் சுதர்சன நாச்சியப்பனுக்கு செல்வாக்கு உண்டு. இவருடைய அண்ணன் பகீரத நாச்சியப்பனின் மகன்தான் மாணிக்கம் தாகூர்,  ராகுலின் நட்பு வட்டத்தில் இருப்பதாலேயே, இவருக்கு விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் தொடர்ந்து சீட் தரப்படுகிறது. 2009-ல் வைகோவை வென்று எம்.பியும் ஆகியிருக்கிறார் மாணிக்கம் தாகூர். எந்தச் சூழ்நிலையிலும், சுதர்சன நாச்சியப்பனின் கை ஓங்கிவிடக் கூடாது என்பதற்காகவே, மாணிக்கம் தாகூருக்கு விருதுநகரில் சீட் தந்துவிடக் கூடாது என்று காய் நகர்த்துகிறார் ப.சிதம்பரம். ஆனாலும், ராகுலின் ஆசி பெற்றவர் மாணிக்கம் தாகூர் என்பதால், ப.சிதம்பரத்தின் பாட்சா பலிக்காது என்கிறார்கள் அக்கட்சியினர். 

 

p


2009 பாராளுமன்ற தேர்தலில்  தனித்தே நின்றது தேமுதிக.   அப்போது,  விருதுநகர் தொகுதி தேமுதிக வேட்பாளராகப் போட்டியிட்டு 1,25,229 வாக்குகளைப் பெற்றார் மாஃபா பாண்டியராஜன். நாயக்கர் சமுதாய வாக்குகள் கணிசமாக உள்ள இத்தொகுதி தங்களுக்குச் சாதகமானது என்று நினைக்கும் தேமுதிக தலைமை, விருதுநகரை அதிமுகவிடம் கேட்டுப் பெற்று, பிரேமலதாவைக் களமிறக்கும் திட்டத்தில் இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாரும் இத்தொகுதி மீது கண் பதித்திருக்கிறார்.

 

kt

 

ரவீந்திரநாத் குமார்,  விருதுநகர் தொகுதியின் எம்.பி. ஆகிவிட்டால், விருதுநகர் அதிமுக மா.செ.வும் மந்திரியுமான கே.டி.ராஜேந்திரபாலாஜி அரசியலில் தனி ஆவர்த்தனம் செய்துவருவதை நிறுத்திவிடலாம் என்பது, தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் கணக்காக உள்ளது. ஆனாலும்,  மேடைக்கு மேடை முதல்வர் புகழ் பாடிவரும் தனக்கு எந்தவிதத்திலும் இடையூறு வராமல் எடப்பாடி பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கை கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இருக்கிறது. அதனால், தேமுதிகவுக்கு இத்தொகுதியை விட்டுக்கொடுப்பதுதான் தனக்குப் பாதுகாப்பானது என்று நினைக்கிறாராம் கே.டி.ராஜேந்திரபாலாஜி. இதன்மூலம்,  விருதுநகர் தொகுதியின் தேமுதிக வேட்பாளராக பிரேமலதா அறிவிக்கப்படலாம் என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மடியேந்தி வாக்கு கேட்ட ராதிகா; பிரச்சாரத்தில் ருசிகரம்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Radhika asked for vote and Delicious in the campaign

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இதற்கிடையே, சில தினங்களுக்கு முன்பு சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தனது கட்சியை பா.ஜ.கவில் இணைத்திருந்தார். இதையடுத்து, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுவதற்காக நடிகை ராதிகா சரத்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அந்த வகையில், ராதிகா விருதுநகர் மாவட்டத்திற்குச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் கப்பலூர் பகுதியில், அ.ம.மு.க, பா.ம.க, த.மா.க கட்சி நிர்வாகிகளுடன் ராதிகாவும், சரத்குமாரும் திறந்தவெளி ஜீப்பில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது பேசிய ராதிகா, “என்னை நீங்கள் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும். ஏனென்றால், இது ஒரு சிறப்பான கூட்டணி. இந்த கூட்டணி எது சொன்னாலும் செய்யும் கூட்டணி. ஆனால், எதிர் கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என்று கூட தெரியவில்லை. உங்கள் சகோதரியாக, அக்காவாக, சித்தியாக இருந்து மக்கள் கோரிக்கைகளுக்காக நாடாளுமன்றத்தில் போராடுவேன். எனவே, எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்தால் விருதுநகர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றிக் காட்டுவேன்” என்று கூறி அங்கிருந்து புறப்பட தயாரானார்.

அப்போது, அங்கு கூடியிருந்த மக்கள் கிழக்கு சீமையிலே படத்தில் விருமாயி கதாபாத்திரம் போல் நடித்து காட்டுமாறு கோரிக்கை வைத்தனர். இதனைக் கேட்ட ராதிகா, “அதை இன்னும் ஞாபகம் வைத்திருக்கிறீர்களா?” எனக்கூறிய அவர், கிழக்கு சீமையிலே படத்தில் பேசிய வசனத்தை சொல்லி சினிமாவில் வருவது போல் மடியேந்தி மக்களிடம் வாக்கு கேட்டார். அதனை அங்கிருந்த மக்கள், ரசித்து கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். 

Next Story

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து; ஒருவர் கைது!

Published on 18/02/2024 | Edited on 18/02/2024
sattur Fireworks Factory incident One person involved

விருதுநகர் அருகே உள்ள முத்துசாமிபுரத்தில் விஜய் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இந்த ஆலையில் நேற்று (17.02.2024) வழக்கம் போல பட்டாசு ஆலையில் பணிகள் நடந்து வந்தன. இத்தகைய சூழலில் மதியம் 12 மணியளவில் திடீரென பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. விபத்து நிகழ்ந்த சமயம் சுமார் 30 பேர் அங்கு பணியாற்றியதாகக் கூறப்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 7 பேரின் உடல் அடையாளம் காணப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர் தீயை அணைத்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். பட்டாசுக்கு மருந்து கலக்கும்போது ஏற்பட்ட உராய்வின் மூலம் இந்த விபத்து நடந்திருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 10 லட்சம் என்றும் படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். அதன்படி இந்த விபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் பிரதமர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் வெடிவிபத்து சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால் மற்றும் போர்மேன் சுரேஷ்குமார் ஆகியோர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதனையடுத்து பட்டாசு ஆலையின் போர்மேன் சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமறைவாக உள்ள விக்னேஷ், ஜெயபால் ஆகிய இருவரையும் போலீசார் வலைவீசி தீவிரமாகத் தேடி வருகின்றனர்.