சிவகாசியில் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு, தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, செய்தியாளர்களைச் சந்தித்தார்.“ஸ்டாலின் தலைவர் பொறுப்புக்கு வந்திருப்பதை ஏற்றுக்கொள்ளலாம். உழைத்து பத்து ஆண்டுகள் பணியாற்றி அந்தக் கட்சிக்காக பாடுபட்டவருக்கு பதவி தந்திருந்தால் விமர்சனம் எழாது. ஏசி காரில் பயணித்து, பத்து நாட்கள் பிரச்சாரம் பண்ணுனவருக்கு, பத்து கூட்டத்தில் பேசியவருக்கு ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் உள்ள அதிகாரமிக்க பதவியை உதயநிதிக்கு கொடுத்திருக்கிறார்கள். இதை எப்படி பார்க்க வேண்டியதிருக்கிறது என்றால், திமுக குடும்ப பாசத்தில் மூழ்கிப்போய் கிடக்கிறது. மக்களின் நலனைவிட குடும்ப நலனில் அக்கறை செலுத்துகிறார் ஸ்டாலின் என்பது இதன்மூலம் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.
மத்திய பட்ஜெட்டில் நிறைய சலுகைகள் இருக்கிறது. பிரதமர் நரேந்திரமோடி ஒரு சாமானியன். சாமானியர்கள் போடுகிற பட்ஜெட் சாமானியர்களுக்கு சாதகமாகத் தான் இருக்கும். இது முதலாளித்துவ பட்ஜெட் கிடையாது. ஏழைகளுக்கான பட்ஜெட். தொலைநோக்கு திட்டத்தோடு போடப்பட்டிருக்கிறது இந்த பட்ஜெட். இந்தியா ஒரு வல்லரசு நாடாக, உயர்ந்த நாடாக ஆவதற்கு அடித்தளமிட்டிருக்கிறார் பிரதமர் நரேந்திரமோடி. டிடிவி தினகரன் மிகவும் கவலையில் இருக்கிறார், உளறிக் கொண்டிருக்கிறார். ஏனென்றால், அவர் தனிமையில் இருக்கிறார். இன்னும் ஒரு வாரத்தில் அவருக்கு கார் ஓட்டும் டிரைவர் கூட வெளியேறி வந்திருவாரு. அவர் ஒத்தையில் தான் இருக்கணும். அவர் ஒரு தியாக மனப்பான்மை உள்ள தலைவராக உருவாகவில்லை.

அப்படி ஒரு தலைவராக நடந்து கொள்ளவும் இல்லை. எடப்பாடி தினகரனின் சதியை முறியடித்தார்.தினகரனுக்குப் பின்னால் ஒரு யானை துரத்திக்கொண்டிருக்கிறது. ஒரு சிங்கம் விரட்டிக்கொண்டிருக்கிறது. புலி பாய்வதற்கு ரெடியாக இருக்கிறது. இது தெரியாமல் அவர் கதை அளந்து கொண்டிருக்கிறார். இதையறிந்து, தனது அரசியல் வார்த்தைகளை அவர் உதிர்க்க வேண்டும். வைகோவுக்கு தண்டனை கொடுத்தது எனக்கு மிகவும் மனக்கஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால், அவர் ஒரு தமிழ்ப்போராளி.
தமிழனின் உணர்வுகளை அவர் பிரதிபலித்தார். அதற்காக, அவருக்குத் தண்டனை என்றால், தமிழகத்துக்கு இது கஷ்டமானது தான். உலக அளவில் தமிழர்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும், ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே குரல் கொடுக்கக்கூடிய ஒரே தலைவர் அவர் தான். நம் தொகுதியைச் சேர்ந்தவர் வைகோ. தனிப்பட்ட முறையில் எனக்கு இந்த தண்டனை மிகவும் வருத்தமளிக்கிறது. அதிமுக- பாஜக கூட்டணியினால் ஏற்பட்ட தோல்வி கிடையாது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததால், பல இடங்களில் பலமும் பெற்றிருக்கிறோம். பொய்யான வாக்குறுதிகளால் திமுக வெற்றி பெற்றிருக்கிறது.” என்று தனது பாணியில் யதார்த்தமாக பேட்டி அளித்தார்.